ஞாயிறு, 21 டிசம்பர், 2014

ஈழம்

ஈழம்: ஒரு பார்வை
பகுதி-2

கி.பி 19 ஆம் நூற்றாண்டு...!!!

ஆங்கிலேயர்கள் இலங்கையினுள் நுழைகின்றார்கள். அவர்களின் குறிக்கோள் ஒன்று தான். 'இலங்கை...அழகான சிறியதொருத் தீவு...அப்படிப்பட்ட தீவினில் பலரின் ஆட்சி இருப்பது சரியல்ல...போர்கள், பிரச்சனைகள் என்று எப்பொழுது வேண்டும் என்றாலும் அமைதி கெடும் சூழல் உருவாகலாம்...அமைதியினைக் கெடுக்க நாம் அனுமதிக்கலாமா...கூடாது தானே...ஏன் வம்பு...அமைதியினை நிலைநாட்ட நாமே இந்தத் தீவினை ஆண்டு விடலாமே...என்ன கெட்டு விடும்'.

அருமையானக் குறிக்கோள் அல்லவா. ஆனால் ஏனோ தெரியவில்லை இலங்கையில் ஏற்கனவே அரசாண்டுக் கொண்டிருந்த கண்டி அரசுக்கும், வன்னியைத் தலைநகராகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த வன்னி அரசுக்கும் ஆங்கிலேயர்களின் இந்தக் குறிக்கோள் சற்றும் பிடிக்கவில்லை (ஒலாந்தியர்களின் ஆட்சியிலும் கண்டி அரசு தனித்து தான் இயங்கிக் கொண்டு இருந்தது...ஒலாந்தியர்கள் அதற்கு அனுமதி அளித்து இருந்தனர். மற்றுமொரு தமிழ் அரசான வன்னி அரசும் அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணியாமல் சுதந்திரமாகத் தான் இயங்கிக் கொண்டு இருந்தது...ஆங்கிலேயர் வரும் வரை).

"சுதந்திரத்தை இழப்பதா...ஒரு காலும் முடியாது...அமைதியினை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்...உங்களின் உதவி எங்களுக்குத் தேவை இல்லை...நன்றிகள் பல... தாங்கள் சென்று வரலாம்" என்றே கண்டி அரசும் வன்னி அரசும் கூறி விட சிந்திக்கலாயிற்று ஆங்கிலேய அரசு.

"என்னடா இது... ஏற்கனவே ஒலாந்தியர்களின் கையில் இருந்த கோட்டை அரசையும், யாழ்ப்பாண அரசையும் கைப்பற்றியாயிற்று... மீதம் இருக்கும் மற்ற அரசுகள் அவைகளாய் சரணடையும் என்றுப் பார்த்தால் பிடிவாதம் செய்கின்றார்களே...இவர்களுக்கு அமைதி என்றால் என்ன என்றுப் புரியவில்லை...புரியவைப்போம்..." என்று எண்ணியே அந்த அரசுகளின் மீது படை எடுத்தது ஆங்கிலேய அரசு.

போர்கள் எளிதான ஒன்றாக இல்லை...கண்டி பலம் வாய்ந்த ஒரு அரசாக இருந்தது... மேலும் ஒலாந்தியர்களுக்கு தண்ணிக் காட்டிய வன்னி அரசனான பண்டார வன்னியனும் கொரில்லா போர்முறையில் கணக்கற்ற சேதங்களை உருவாக்கிக் கொண்டு இருந்தான். கொரில்லா போர் முறைக்கே உரித்தான பிரதேசமாக விளங்கிய இலங்கையில் ஆங்கிலேயப் படையினர் சற்றேத் திணறித் தான் போனார்கள் (பிற்காலத்தில் புலிகளும் கொரில்லாப் போர் முறையினை சிறப்பாக கையாண்டனர் என்பதனை நினைவிற் கொள்க).

ஆனால் ஆனானப்பட்ட இந்தியாவினையே பிடித்த ஆங்கிலேயர்களுக்கு முன்னர் எத்தனைக் காலம் தான் சிற்றரசுகள் போரிட்டுக் கொண்டு இருக்க முடியும். வன்னி அரசும் தோற்கின்றது...கண்டியும் வீழ்கின்றது. இறுதியாக முழு இலங்கையும் அதன் வரலாற்றில் முதல் முறையாக அந்நியர்களுக்கு அடிமைப்படுகின்றது. அக்காலம் கி.பி 1817.

"முழு இந்தியாவினையும் பிடித்தாயிற்று...இப்பொழுது இதோ இலங்கையும் நமது காலின் கீழே கிடக்கின்றது. வெற்றிகள் குவிந்த வண்ணம் கிடக்கின்றன...ஆனால் இந்த வெற்றிகளை எல்லாம் தகுந்த முறையில் தக்க வைக்க வேண்டும் என்றால் முறையான முறையில் நாம் நிர்வாகம் பண்ண வேண்டும்...அதற்கு என்ன செய்வது" என்றே அடுத்து ஆங்கிலேயர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர்.

கண்டியினையும் வன்னியினையும் அவர்கள் பிடிக்கும் முன்னர் வரை, மதராச மாகாணத்தின் நிர்வாகத்தின் கீழேயே மற்ற இலங்கைப்பகுதிகளான கோட்டையையும், யாழ்ப்பாணத்தினையும் ஆங்கிலேயர்கள் வைத்து இருந்தனர். ஆனால் இப்பொழுது முழு இலங்கையும் ஆங்கிலேயர்களின் வசம் வந்து விட்டது. இந்நிலையில் மதராச மாகாணத்தின் நிர்வாகத்திற்கே அனைத்தையும் கொண்டு வருவது என்பது கடினமான ஒரு பணியாக இருக்கும்...அப்படி இருக்க இலங்கையினை என்ன செய்வது? எவ்வாறு நிர்வாகிப்பது?

இந்தக் கேள்விக்குத் தான் ஆங்கிலேயர்கள் விடைத் தேடிக் கொண்டு இருந்தனர். அது வரை இலங்கையினை ஆண்டுக் கொண்டுச் சென்றிருந்த ஐரோப்பியர்கள் வெவ்வேறு வகையான நிர்வாக முறைகளையே பயன் படுத்தி இருந்தனர். தமிழர்கள் இருந்த பகுதியில் தமிழர்களுக்கேற்ற நிர்வாக முறை, கோட்டை அரசின் இடங்களில் அதற்குரிய நிர்வாக முறை பின்னர் கண்டி அரசின் இடங்களில் அதற்குரிய நிர்வாக முறை...இவ்வாறு மூன்று நிர்வாக முறைகள் இலங்கையில் நடைமுறையில் இருந்துக் கொண்டு வந்தன.

ஐரோப்பியர்களுக்கு முன்னரும் அம்முறைகள் அப்படியேத் தான் இருந்துக் கொண்டு வந்தன...அதாவது ஆட்சிகள் மாறினாலும் நிர்வாக முறைகள் மாறியதில்லை...காரணம் இலங்கையில் இருந்த மக்கள் அறிந்து இருந்தனர்... அவர்கள் வேறு இன மக்கள்...அவர்களது வேறு கலாச்சாரங்கள்...எனவே ஒருவரின் நிர்வாக முறை அடுத்தவரது முறையில் இருந்து மாறுபடும்...எப்பொழுது நாம் ஒருவரது நிர்வாக முறையில் மற்றொருவரது முறையினை புகுத்தத் தொடங்குகின்றோமோ...அப்பொழுது பெரிய பிரச்சனைகள் வெடிக்கும்...அது இம்மண்ணிற்கு வேண்டியதில்லை. அதில் அவர்கள் தெளிவாக இருந்தனர்.

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களும் அவ்வாறே நிர்வாக முறைகளை வைத்துக் கொண்டு இருந்தனர்... 1831 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் அவ்வாறு தான் நிர்வாகம் செய்தனர். அவர்களின் லட்சியம் இவை தான்,

1) ஆங்கிலேய அதிகாரிகளின் கீழ் ஒட்டு மொத்த இலங்கையின் நிர்வாகம். அதில் கோட்டை, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய இடங்களுக்கு ஏற்றவாறு தனித்தனி நிர்வாக முறைகள்.
2) அலுவல் பணிகளுக்கு ஆங்கில மொழியினை பயன்படுத்தல்.
3) ஆங்கில மொழிப் பள்ளிகளை ஆரம்பித்தல்.
4) சாலைகளை இடல்
5) தேயிலைத் தோட்டங்களை உருவாக்குதல். (இதனைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது...பின்னர் காணலாம்).

இவைகள் தாம் 1831 ஆம் ஆண்டு வரை இருந்துக் கொண்டிருந்த நடைமுறைகள்...ஆனால் 1833 இல் தான் ஒரு பிரச்சனை ஆரம்பிக்கின்றது. அன்றைய ஆங்கிலேய அரசர் நான்காம் ஜார்ஜுக்கு (King George IV) திடீரென்று ஒரு யோசனை வருகின்றது... 'இலங்கைத் தீவினை மேலும் நன்றாக நிர்வாகம் செய்ய வழிமுறைகள் இருக்கின்றனவா இல்லையா... இதனை அறிய ஒரு குழுவை நியமித்தால் என்ன?'

அரசரின் எண்ணத்திற்கு மறுப்புகள் தெரிவிக்க முடியுமா...உடனே ஒரு குழு அமைக்கப்படுகின்றது. காலே ப்ரோக்கே (Major W.M.G. ColeBrooke) மற்றும் கமேரூன் (Charles Hay Cameron) ஆகிய இருவர் அந்தக் குழுவிற்குத் தலைமைத் தாங்கி அவர்களின் திட்டங்களைக் கூறுகின்றனர்.

"ஒரு தீவுக்குள்ளே எதற்காக மூன்று நிர்வாக முறைகள்...அந்த மக்கள் அனைவரும் ஆங்கிலேயர்களின் பொன்னான ஆட்சியில் பங்கு வகிப்பவர்கள்...அவ்வாறு இருக்க ஒரே நிர்வாக முறையினைக் கொண்டு வந்து விட்டால் நமக்கும் எளிதாக இருக்கும்...தேவை இல்லாத பளுவும் குறையும்...ஒன்றுப்பட்ட இலங்கையின் தலைநகராக கொழும்புவினை வைத்துக் கொள்ளலாம்... தாங்கள் என்ன சொல்கின்றீர்கள் அரசே!!!"

அரசர் சிந்தித்தார்..."ஆமாம் எதற்காக ஒரு ஆங்கிலேய காலனி நாட்டினில் மூன்று நிர்வாக முறைகள்...போதும் மடத்தனம்...அமல் படுத்துங்கள் ஒரே ஆட்சி முறையினை" என்றார்.

"வேண்டாம் மன்னா...அவர்கள் வெவ்வேறு மக்கள்...அவர்களின் இயல்புகள், மொழி, கலாச்சாரம், மதம் என அனைத்தும் மாறுப்பட்டவை...விவரம் அறியாமல் நாம் இதனை கருதாது முடிவெடுத்தால் எங்கே வெடிக்கும் என்றே கூற முடியாது...எங்கேயும் வெடிக்கலாம்...எப்பொழுதும் வெடிக்கலாம்...சற்றே சிந்தியுங்கள் மன்னா" என்று பலர் வேண்டியும் மன்னனின் முடிவில் யாதொரு மாற்றமும் இல்லை.

"இலங்கை ஒரே நாடு...ஒரே மக்கள்...ஒரே ஆட்சி...ஒரே ஆட்சிமுறை...இதில் மாற்றுவதற்கு ஏதும் இல்லை... வேண்டும் என்றால் உலகில் வேறு நாடுகள் இருக்கின்றனவா என்றுப் பாருங்கள்...அங்கே ஆங்கிலேயர்களின் ஆட்சி இல்லையென்றால் அங்கும் சென்று மாற்றுவோம்...அதனைத் தவிர்த்து இங்கே செய்வதற்கு ஒன்றும் இல்லை" என்றுக் கூறியே அரசாணையை வெளியிட்டார் அரசர்.

இரு வேறு தேசங்கள் ஒரே தேசமாயின...இரு வேறு மக்கள் ஒரே மக்களாயினர்...அவர்கள் விருப்பம் இல்லாமலேயே...!!!

அதன் விளைவு தான் இன்று வரை வெடித்துக் கொண்டிருக்கின்றது...!!!
________

தேயிலைத் தோட்டங்கள்...!!!

இலங்கையின் வரலாறையும் அதில் தமிழர்களின் வரலாற்றினையும் நாம் காண வேண்டும் என்றால் நிச்சயமாய் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களினைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளத் தான் வேண்டும். காண்போம்...!!!

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முழு இலங்கையையுமே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டிருந்த ஆங்கிலேயர்கள் சற்று நிதானமாக அவர்கள் பிடித்த தீவினைக் காணுகின்றனர்.

மிகவும் அழகியத் தீவது...எங்குத் திரும்பினாலும் இயற்கை வளங்கள்...இயற்கை காட்சிகள்...அங்கிலேயர் நிம்மதியாய் பெருமூச்சினை விடுகின்றனர்.

'நல்ல வேளை இப்படிப்பட்ட ஒரு தீவு நமது கைகளுக்கு கிடைத்தது...சரி இருக்கட்டும்...இனி நமது வேலையை ஆரம்பிப்போம்...நாம் எதற்காக இங்கே முதலில் வந்தோமோ அந்த வேலையைக் கவனிக்கும் நேரம் வந்து விட்டது...வணிகத்திற்காக தானே இம்மண்ணுக்கு வந்தோம்...வணிகத்தைக் கவனிப்போம்..நம்மைக் கேட்க யாரும் இல்லை...எதையும் செய்யலாம்...எப்படியும் செய்யலாம்...நம்மைத் தடுக்க இங்கே சட்டமும் இல்லை ஒப்பந்தங்களும் இல்லை...அள்ள அள்ள குறையாத செல்வத்தினைக் கொடுக்கும் நிலம் இங்கே இருக்கின்றது...இனி நாம் செய்ய வேண்டியது எல்லாம் செல்வத்தினை அள்ள வேண்டியது தான்...அள்ளிக் கொண்டே இருக்க வேண்டியது தான்!!!'

அவ்வண்ணமே அவர்களின் செயல்களும் இருக்க ஆரம்பித்தன. இலங்கையின் இயற்கை வளங்கள் ஆங்கிலேயரின் செல்வத்தினைப் பெருக்க வழி வகுக்க ஆரம்பித்தன. அப்பொழுது தான் ஆங்கிலேயரின் பார்வை இலங்கையின் மலைகளின் மீதும் தட்ப வெப்ப நிலையின் மீதும் படுகின்றது.

"தேயிலைத் தோட்டங்கள் அமைக்க ஏதுவான சூழல் இங்கே நிலவுகின்றதே...ஏன் நாம் இங்கே தோட்டங்களை அமைக்கக் கூடாது?...நமக்கு விருப்பமான தேயிலையும் கிட்டும்...கூடவே காசும் கொட்டும்... அது போதாதா நமக்கு...மலைகளில் இயற்கையான சோலைகளும் புல்வெளிகளும் இல்லை என்று இங்கே யார் அழப் போகின்றனர்...ம்ம்ம்...யாரங்கே...இந்த மலைகளை தேயிலைத் தோட்டங்கள் அமைப்பதற்கு ஏதுவான ஒன்றாக மாற்ற வேண்டும்...அதற்கான பணிகளை உடனேத் தொடங்குங்கள்..."

கட்டளைகள் பாய்ந்தன. மின்னல் வேகத்தில் மலைகள் மொட்டை அடிக்கப்பட்டு அங்கே தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டன. தேயிலை உற்பத்தியினைத் தொடங்க அனைத்தும் தயாராக இருந்தது. பணியாளர்களைத் தவிர. ஆம்... தேயிலைத் தோட்டங்களில் பணி புரிய இலங்கையில் எவருமே தயாராக இல்லை. தமிழர்களும் சரி...சிங்களவர்களும் சரி...தேயிலைத் தோட்டத்து வேலையா...அது எனக்கு வேண்டாம் என்று உறுதியாய் இருந்தனர்.

காரணம் தேயிலைத் தோட்டத்தில் வேலை அப்படிப்பட்ட ஒரு வேலையாக இருக்கும். மலைகளின் மேலே தான் பணி இருக்கும்... வன விலங்குகளுக்குப் பஞ்சம் இருக்காது...ஆனால் அடிப்படை வசதிகளோ அல்லது உயிருக்கு உத்திரவாதமோ கிட்டும் என்று நிச்சயமாய் கூற முடியாது...கூடுதலாக வேலை நேரம் என்று நிர்ணயிக்கப்பட்ட ஒன்று இருக்காது...சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அடிமைகளின் நிலையையே அங்கே எதிர் பார்க்க முடியும்.

அப்படிப்பட்ட வேலைக்குத் தான் ஆங்கிலேயர்கள் ஆட்களை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இலங்கையில் மலைத் தோட்டங்களில் வேலைக்கு வர யாரும் தயாராகவில்லை. எனவே ஆங்கிலேயர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர்...!!!

அவர்களுக்குத் தேவை கடினமான வேலைகளைச் செய்ய ஆட்கள்...அந்த ஆட்கள் வசதியையும் எதிர்ப்பார்க்க கூடாது...சம்பளத்தையும் அதிகமாக எதிர்ப்பார்க்க கூடாது...கம்மியான சம்பளத்தில் அதிகமான வேலையை முடித்து அதிகமான இலாபத்தினை தரும் வேலையாட்களையே (அடிமைகளையே) அவர்கள் தேடினர் (இன்றும் கூட குறைவான சம்பளத்திற்கு வேலை செய்ய ஆட்களை அவர்கள் உலகம் முழுவதும் தேடிக் கொண்டு தான் இருக்கின்றனர்...பணிகள் வேறு...ஆனால் அர்த்தம் ஒன்று தான்).

பொதுவாக அம்மாதிரியான பணிகளுக்கு ஆப்பிரிக்க தேசத்தில் இருந்தே ஆட்களைப் பிடிப்பது வழக்கம்...ஆனால் ஆப்பிரிக்க தேசத்து மக்கள் பலரையும் அமெரிக்க மண்ணில் அடிமையாக வேலைப் பார்க்க ஏற்கனவே கொண்டு சென்று விட்டாயிற்று... மேலும் ஆபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு ஆட்களைக் கொண்டு வருவது வீண் அலைச்சலைக் கொண்ட ஒரு விடயம்...எனவே வேறு மாற்று வழிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்றே அவர்கள் நோக்கும் பொழுது தான் இந்தியாவில் உள்ள தமிழகத்து மக்கள் அவர்களின் கண்களில் படுகின்றனர்.

கி.பி 19 ஆம் நூற்றாண்டு சாதி வெறி உச்சத்தில் இருந்த ஒரு காலக்கட்டம்...பல மனிதர்கள் தாழ்த்தப்பட்டவர்களாய்...தீண்டத்தகாதவர்களாய்...இருந்துக் கொண்டிருந்த ஒரு காலக் கட்டம். பிழைப்பிற்காக எந்த வேலையை வேண்டும் என்றாலும் செய்வதற்கு பல மக்கள் தயாராக இருந்தனர். அவர்களுக்கு வேண்டியது எல்லாம் ஒரு வேலை...அவர்களின் குடும்பத்தினை அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்ள உதவும் வண்ணம் ஒரு வாய்ப்பு. அவ்வளவே.

வேலையை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் பலர் இருக்கின்றனர்...அதுவும் இலங்கைக்கு மிக அருகிலேயே...போதாதா ஆங்கிலேயர்களுக்கு..."உனக்கு வேலை தானே வேண்டும்...இதோ வேலை...உடனே கிளம்பு...குடும்பம் முழுவதையும் அழைத்துக் கொண்டு கிளம்புகின்றாயா...மிக்க நல்லது...அங்கே அனைவருக்கும் வேலை உண்டு...கிளம்பு...விரைவாகக் கிளம்பு" என்றவாறே இந்தியாவில் இருந்து பல தமிழர்களை இலங்கைக்கு அழைத்துக் கொண்டு செல்கின்றனர். தமிழர்களும் வேலைக்காக அடிமைகள் போல மிகவும் மோசமான சூழ்நிலையில் இலங்கைக்குள் நுழைகின்றனர்.

இவ்வாறு தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இருந்து அழைத்துக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் தான் இன்று மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தான் பிழைப்பிற்காக இலங்கைக்கு சென்றவர்கள். அவ்வாறு பிழைப்பிற்காக சென்ற தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே 1940 களில் சுமார் 10 இலட்சம் வரை உயர்ந்து இருந்தது(இவர்களின் கதையும் ஒரு கண்ணீர் கதை தான்...அதனைப் பற்றி இன்னும் கற்க வேண்டி இருக்கின்றது...நேரம் கிட்டினால் நிச்சயமாக இவர்களைப் பற்றிப் பின்னர் காணலாம்).

இவர்கள் வேறு...இலங்கையின் தொடக்கத்தில் இருந்தே அங்கே இருந்துக் கொண்டு இருக்கும் தமிழர்கள் வேறு. இந்த வேறுபாட்டினை அறியாது தான் அனைத்துத் தமிழர்களுமே இந்தியாவில் இருந்து அங்கே பிழைக்கப் போனவர்கள் என்ற எண்ணம் இங்கே நிலவிக் கொண்டு இருக்கின்றது. சரி இருக்கட்டும்...!!!

இப்பொழுது இலங்கையில் மூன்று வித மக்கள் இருக்கின்றனர்... சிங்களவர், இலங்கையில் இருந்த ஆதித் தமிழர் (ஈழத் தமிழர் என்றே இவர்களை நாம் இனி அழைப்போம்) மற்றும் தமிழகத்தில் இருந்துச் சென்ற தமிழர்கள் (இவர்களை மலையகத் தமிழர்கள் என்றே நாம் இனி அழைப்போம்). ஆட்சியில் ஆங்கிலேயர்கள் இருக்கின்றனர். காலங்கள் மெதுவாக கடக்க பக்கத்து தேசமான இந்தியாவில் 'வேண்டும் சுதந்திரம்' என்ற முழக்கங்கள் கேட்கத் தொடங்குகின்றன...அது போதாது...இலங்கையிலும் சுதந்திரத்திற்கான குரல்கள் எழும்புகின்றன...!!!

விடிந்து இருக்கின்றது 20 ஆம் நூற்றாண்டு...!!!
______

இலங்கையின் விடுதலை !!!
வேண்டும் சுதந்திரம்...!!!

20 ஆம் நூற்றாண்டில் அதிகமாக கேட்கப்பட்ட ஒரு முழக்கம் இதுவாகத்தான் இருந்து இருக்கக் கூடும். காரணம் எளிது தான்... அன்றைய காலக்கட்டத்தில் சுதந்திரமாக இருந்த தேசங்களை விட அடிமையாக இருந்த தேசங்களின் எண்ணிக்கையே அதிகம் ஆகும். வலிமைப் பொருந்திய நாடுகள் சில அவைகளின் சுய இலாபத்திற்காக உலகில் உள்ள பல்வேறு நாடுகளையும் அதன் மக்கள்களையும் அடிமைப்படுத்தி வைத்து இருந்தன. அந்த நாடுகளைப் பொறுத்த வரை அவைகள் ஆளப் பிறந்த நாடுகள்...மற்ற நாடுகளோ அடிமைகளாக இருக்கவே படைக்கப்பட்ட நாடுகள்...அவ்வளவே!!!

ஆனால் புதிதாய் எழுந்திருந்த 20 ஆம் நூற்றாண்டு அவர்களின் அந்த எண்ணத்தைச் சற்று சோதிக்கத் தான் செய்தது. காரணம் அடிமையாய் இருந்த நாடுகள் அனைத்திலும் சுதந்திரத்திற்கான குரல்கள் பலமாய் ஒலிக்கத் தொடங்கி இருந்தன...கூடவே போராட்டங்களும் தான். ஆயுதங்களைக் கொண்டு போராடினால் சரி இராணுவத்தினை அனுப்பி ஒரு கை பார்த்து விடலாம்...ஆனால் சிலர் அமைதியாகவும் போராடுகின்றார்களே... இவர்களை என்ன செய்வது...என்று ஏகாதிபத்திய அரசுகள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் வேளையிலேயே உலகப் போர்களும் வெடிக்கின்றன.

உலகை முழுவதும் ஆள வேண்டும் என்ற எண்ணத்தினை வைத்துக் கொண்டு தனது வாசல் வரை வந்து நிற்கும் போரினை எவ்வாறு கவனிக்காமல் விட முடியும்...முடியாது தானே. உலகையே ஆளும் கனவினைக் கொண்ட தேசங்கள் உலகப் போர்களிலும் கலந்துக் கொள்கின்றன.

அந்நிலையில் தான் அந்த அரசுகள் சிந்திக்க ஆரம்பிக்கின்றன 'ஏற்கனவே நாம் அடிமைப்படுத்தி வைத்து இருக்கும் தேசங்களில் மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்...அது போதாதென்று இப்பொழுது இந்தப் போர்கள் வேறு...எத்தனையைத் தான் நாம் சமாளிப்பது. முதலில் நாம் நம்முடைய தேசத்தினை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்...அது தான் முக்கியம். நம்முடைய அடிமை நாடுகளில் இருந்து நமக்கு வேண்டியது அவற்றின் வளங்கள் தானே...அவற்றை எவ்வாறு எடுப்பது என்று சிந்தித்தால் வேறு நல்ல வழிமுறை கிட்டாமலா போய்விடும்...நிச்சயமாய் கிட்டும். எனவே முதலில் நாம் அடிமைப்படுத்தி வைத்து இருக்கும் நாடுகளின் பிரச்சனைகளைக் காண்போம்..முடிந்தால் விடுதலையும் கொடுத்து விடுவோம்...என்ன கெட்டு விடும்.'

உலகையே பங்குப்போட்டுக் கொண்டு இருந்த அரசுகளின் சிந்தனை இவ்வாறு மாறியது, அடிமையாய் இருந்த நாடுகளின் சுதந்திர போராட்டத்தினை மேலும் தீவிரமாக்கியது. இந்தியாவிலும் அப்போராட்டம் தீவிரமாகியது...அதனைப் பார்த்து இலங்கையிலும் அப்போராட்டம் தீவிரமாகியது. ஆங்கிலேயர்கள் அத்தேசங்களை என்ன செய்வது என்று யோசித்து பல திட்டங்களை முன் வைக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் முன்வைத்த திட்டத்தில் முக்கியமானதொரு திட்டம் சனநாயக முறையில் தேர்தல் திட்டம். நீங்கள் மக்களை ஆள வேண்டும் என்று எண்ணுகின்றீர்களா...நல்லது. மக்கள் உங்களை வாக்களித்து தேர்வு செய்தால் அவ்வண்ணமே செய்யுங்கள். இந்தத் திட்ட முறையை முன்வைத்து இலங்கை மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையையும் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். அதனுடனேயே 100 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையிலேயே தங்கி அங்கேயே தோட்டங்களில் பணியாற்றி வந்த மலையகத் தமிழர்களுக்கும் இலங்கையின் குடியுரிமையை வழங்கி அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையினை வழங்கினர். இது நடக்கும் ஆண்டு 1931.

நல்ல விடயங்கள் தானே. அனைவரும் வாக்களிக்கலாம். அவர்கள் விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்கலாம்...கூடுதலாக தாங்கள் அடைந்த இன்னல்களுக்கு பதிலாய் அந்நாட்டின் குடியுரிமையை மலையகத் தமிழர்களும் பெற்று இருக்கின்றனர். எல்லாம் நல்ல விதமாகத் தானே அமைந்து இருக்கின்றன. ஆனால் இந்நிலையில் தான் பல பிரச்சனைகள் எழத் தொடங்குகின்றன.

'என்ன தான் இருந்தாலும் இந்தியாவில் இருந்து இங்கே வேலைப் புரிய வந்தத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இருக்கக் கூடாது...' இது சிங்களத் தரப்பு வாதம். தமிழர்களுக்கோ பிரச்சனை வேறு வடிவில் இருந்தது. ஆங்கிலேயர்கள் பிரதேசவாரியான பிரதிநிதித்துவத்தினை முன் மொழிந்திருந்தனர். இது இலங்கையில் சிறுபான்மையினராக இருந்த தமிழர்களின் உரிமைக்கு மிகப் பெரிய கேள்வியாக அமைந்தது. அது எவ்வாறு என்பதற்கு முன் பிரதேசவாரியான பிரதிநிதித்துவம், இனவாரியான பிரதிநிதித்துவம் என்றால் என்ன என்று நாம் சற்றுக் கண்டு விட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

உதாரணமாக நாம் இந்தியாவினையே எடுத்துக் கொள்ளலாம். இந்தியா முழுவதும் ஒரே இன மக்கள் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர் என்றும் வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்தியாவினை பல்வேறுப் பிரதேசமாக நிர்வாகத்திற்காக பிரித்து, இந்த இந்த பிரதேசங்களுக்கு இத்தனை நிர்வாகிகள் என்று அளவிட்டு அதற்கேற்றார்ப் போல் சட்டமன்றத்தில் இடங்களை ஒதுக்குவது என்பது பிரதேசவாரியான பிரதிநிதித்துவம். அந்தந்த நிர்வாகிகளும் அவர்களுடைய பிரதேசங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பர்.

இப்பொழுது அதே இந்தியாவினை வைத்துக் கொள்ளலாம்...ஆனால் அங்கே இரு வேறான இன மக்கள் வாழ்ந்துக் கொண்டு வருகின்றனர். அவர்களுள் ஒரு இன மக்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகம்...அதாவது பெருன்பான்மையினர். மற்றொரு இன மக்களோ சிறுபான்மையினராக இருக்கின்றனர். இந்நிலையில் பிரதேசவாரியாக மக்களுக்கான சட்டசபைப் பிரதிநிதிகளைத் தேர்வுச் செய்தால், சிறுபான்மையினராக இருக்கும் மக்களுக்கு உரிய அளவு பிரதிநிதிகள் கிடைக்கப்பட மாட்டார்கள். அந்நிலையில் பிரதேசங்களின் வாரியாக பிரதிநிதிகளைத் தேர்வு செய்யாது இனங்களின் அடிப்படையில் தேர்வு செய்வது என்பது ஒரு தீர்வாக அமையும். அதாவது, இரு இனங்களுக்கும் சரி சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். இது தான் இனவாரியான பிரதிநிதித்துவம். சரி இப்பொழுது நாம் இலங்கைக்கே திரும்பிச் செல்வோம்.

இலங்கையில் ஆங்கிலேயர்கள் பிரதேசவாரியான பிரதிநிதித்துவத்தினை முன் மொழிந்து இருந்தனர். அதைத் தான் தமிழர்கள் எதிர்த்துக் கொண்டு இருந்தனர்.

"ஐயா...நீங்கள் பிரதேசவாரியாக பிரதிநிதித்துவத்தினை கொண்டு வரப் பார்க்கின்றீர்...ஆனால் அது தமிழர்களுக்கு நியாயம் செய்வதாக அமையாது. உங்களுடைய தேசத்தில் உங்கள் இன மக்கள் மட்டுமே இருக்கின்றனர். ஆகையால் நீங்கள் உங்கள் தேசத்தினை பிரதேசங்களாகப் பிரித்துக் கொண்டு நிர்வாகிகளைத் தேர்வு செய்யலாம். ஆனால் இங்கே நிலைமை அவ்வாறு இல்லை...இங்கே பல இனங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்துக் கொண்டு வருகின்றோம்...சிங்களவர்கள் இருக்கின்றனர்...தமிழர்கள் இருக்கின்றோம்...இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களும் இருக்கின்றனர்...இசுலாமியர்கள் இருக்கின்றனர்...எனவே உங்களின் இந்த முறை இங்கே சரியானதொன்றாக அமையாது..."

"ஏன் அவ்வாறு சொல்லுகின்றீர்கள்...ஏன் சரியானதொன்றாக அமையாது போகும்?"

"இங்கே சிங்களவர்கள் தாம் பெரும்பான்மையினர்...75% மக்கள் தொகை அவர்களுடையது தான்...மீதம் உள்ள 25 சதவீதத்தினில் தான் மற்ற இன மக்கள் அனைவரும் அடங்கி இருக்கின்றோம். இந்நிலையில் பிரதேசவாரியான நிர்வாகிகள் என்றால் நிச்சயம் அது சிங்களர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு ஆட்சியிலேயே சென்று முடியும். மற்ற இன மக்கள் என்றுமே பெரும்பான்மையினைப் பிடிக்க முடியாது. இது எவ்வாறு சனநாயகம் ஆகும். எனவே தாங்கள் வேறு யோசனை செய்வது நன்றாக இருக்கும்."

"சரி...நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றுக் கூறுகின்றீர்?"

"இனங்களின் அடிப்படையில் நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் முறையினை அறிமுகப்படுத்துங்கள்... 100 இடங்கள் இருக்கின்றன என்றால் சிங்களவர்கள் 50 இடங்களை வைத்துக் கொள்ளட்டும்...மீதம் உள்ள இனங்கள் மீதம் உள்ள 50 இடங்களை பங்கிட்டுக் கொள்கின்றோம்..இவ்வண்ணம் நடுநிலைப் பொருந்திய சட்டசபை இங்கே உருவாகும்...அனைத்து இன மக்களுக்கும் உரிய குரல்களும் கேட்கும். என்ன சொல்லுகின்றீர்?"

தமிழர்களின் இக்கேள்விக்கு மறுப்பினையே பதிலாக தந்தது ஆங்கில அரசாங்கம். அவர்களுக்கு இந்த 50-50 என்ற அமைப்பு சரியானதொன்றாகப் படவில்லை...மேலும் வேறு சில தமிழ் அமைப்புகளும் சரி சிறுபான்மையான இனங்களும் சரி இந்த 50-50 என்ற ஏற்பாட்டினை எதிர்கவே செய்தன. நிலைமை அப்படி இருக்க இனவாரியான பிரதிநிதித்துவம் என்ற ஒன்று வெறும் பேச்சாகவே இலங்கையில் மறைந்து விட்டது.

மேலும் கண்டியினைச் சார்ந்த சிங்களவர்கள் சிலர் வேறொரு முறையினைக் கூறினார்கள்... "நாம் இலங்கையை மூன்று நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கலாம்... கண்டிப் பகுதியை சிங்களவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். வடக்கையும் கிழக்கையும் தமிழர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...தெற்குப் பகுதியை தென் சிங்களவர்கள் என்பவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...என்ன சொல்லுகின்றீர்" என்றார்கள்.

ஆனால் இதற்கும் பல அமைப்புகளும் (தமிழ் அமைப்புகள் உட்பட) எதிர்ப்புத் தெரிவித்தன. 'நாம் தான் ஒன்றாகி விட்டோமே, இனியும் எதற்காக வெவ்வேறு நிர்வாக முறைகள்...நமக்குத் தேவை புரிதலும் நிர்வாகத்தில் சரிசமமான உரிமையும் தான்..வேறு எதுவும் தேவை இல்லை'...இவ்வாறே கண்டியில் இருந்தவர்களின் யோசனையும் குப்பைத் தொட்டிக்கு சென்றது.இந்த ஒரு விடயம் நம்மில் பலருக்கும் நிச்சயம் ஒரு குழப்பத்தினை உண்டு பண்ணி இருக்கக் கூடும்..."தனியான நிர்வாகம் தருகின்றேன் என்றுக் கூறியப் பொழுதும் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை...மேலும் தனி நாட்டினையும் அவர்கள் கோரவில்லை...ஏன் அப்படி"...இதற்கு விடையைக் காண வேண்டும் என்றால் நாம் அக்காலத்தில் நிலவிய சூழலைச் சற்றுப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது.

இன்றைக்கு இருப்பதனைப் போன்று அன்று சிங்களவர்கள்/தமிழர்களின் இடையில் பெரிய பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை...பிரச்சனைகளை அவர்கள் எதிர் பார்த்து இருந்தாலும் அனைத்தையும் பேசி முடித்துக் கொள்ள முடியும் என்றே அவர்கள் கருதி இருக்கலாம்...மேலும் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களும் சரி சிங்களவர்களும் இணைந்தே பணியாற்றி இருந்தனர். மேலும் கொழும்புத் தொகுதியினை தமிழர்களே வைத்துக் கொள்ளட்டும் என்ற ஒப்பந்தத்திலும் சிங்களவர்கள் கையெழுத்து இட்டு இருந்தனர்...கூடவே சிங்களத்திற்கு இருக்கும் அதே அங்கீகாரம் தமிழுக்கும் இருக்கும் என்ற உறுதிமொழி வேறு...இவை அனைத்தும் சேர்த்து 'எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்...ஆரம்பத்தில் சிறிதுக் கடினமாகத் தான் இருக்கும்...போகப் போகச் சரியாகி விடும் என்ற எண்ணத்தினையே தமிழர்களுள் வளர்த்து இருந்தது.

சில தமிழர்கள் எச்சரிக்கை குரல்களை எழுப்பிக் கொண்டிருந்தாலும்...சுதந்திரம் தந்த உத்வேகம் அவர்களின் குரல்களை சட்டை செய்ய விடவில்லை.

அனைத்தும் ஆங்கிலேயர்களின் பார்வைக்கு சரியாகப் பட 1948 ஆம் வருடம் பெப்ருவரி மாதம் நான்காம் நாள் இலங்கைக்கு சுதந்திரம் அளித்து விட்டு கிளம்புகின்றனர் ஆங்கிலேயர்கள்.

இலங்கையின் முதல் பிரதம மந்திரியானார் சேனநாயகே. அவருக்கு தமிழ் காங்கிரஸ் ஆதரவு தருகின்றது. பிரதமரான உடன் சேனநாயகே எடுக்கும் முடிவுகளில் முக்கியமான முடிவு...."1931 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களுக்கு இலங்கையின் குடியுரிமை வழங்கப்பட்டு இருந்தது. இன்று முதல் அக்குடியுரிமை இரத்து செய்யப்படுகின்றது. நன்றிகள்."

ஒரேத் தீர்மானம் தான். 10 இலட்சம் தமிழர்கள் அங்கே அகதிகளாயினர். குடியுரிமை இல்லாவிட்டால் வாக்குரிமை ஏது? தமிழர்களின் வழு ஒரேத் தீர்மானத்தால் குறைக்கப்பட்டது.

"அநியாயம்...இது தமிழர்களை மேலும் சிறுபான்மையினராக ஆக்கும் ஒரு முயற்சியே...இன்று இந்தியத் தமிழர்களுக்கு நிகழும் இச்செயல் நாளை நமக்கும் நடக்காது என்று என்ன நிச்சயம்...தமிழர்களே ஒன்றுப்படுங்கள்..." என்று தன்னால் இயன்ற அளவு குரல் எழுப்பினார் தந்தை செல்வா (இவர் காந்திய வழியில் போராடிய ஒரு முக்கியமான ஈழத் தமிழர்)

ஆனால் கொடுமை என்னவென்றால் தமிழ் காங்கிரசில் இருந்த பலர் அத்தீர்மானத்தை ஆதரித்தார்கள். தந்தை செல்வாவின் எச்சரிக்கைகளை அவர்கள் புறக்கணித்தனர். தந்தை செல்வா பார்த்தார். அதிகார மோகம் பலருக்குள்ளும் படர்ந்து இருக்கின்றது. இது சரியல்ல. நமக்குத் தேவை போராட ஒரு இயக்கம்...வெறும் பதவி அல்ல. நீங்கள் குரல் எழுப்ப மாட்டீர்களா...நல்லது. நான் வருகின்றேன்.

தமிழ் காங்கிரசை விட்டு வெளியேறினார் தந்தை செல்வா. தமிழ் காங்கிரசு இரண்டாக உடைந்தது.

மலையகத் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்காது விட்டது வரலாற்றில் ஈழத் தமிழர்கள் செய்த முதல் மிகப் பெரிய தவறாக நிலைத்து விட்டது.

தொடரும்...!!!

சில குறிப்புகள்:

1) தமிழர்களிடையே ஒற்றுமைகள் இல்லாதிருந்தது என்று நாம் கண்டோம்...அதில் கொள்கைகள் ஒரு காரணமாக இருந்தாலும் சாதி வேறுபாடுகள் முக்கியமானதொரு காரணமாக இருந்தன (அன்று சாதி வெறி உச்சத்தில் இருந்தது என்று நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை).
____________________________________தொடரும்... பகுதி-3 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan