செவ்வாய், 21 அக்டோபர், 2014

தமிழனும் உலக வரலாறும்

தமிழனும் உலக வரலாறும்...

பகுதி-14

முருகன் என்ற தமிழ் கடவுள்

சரி இப்பொழுது நாம் முருகனை ஏன் தமிழ் கடவுளாக தமிழர்கள் மட்டும் சிறப்பாக கொண்டாடுகின்றனர் என்று அந்த ஆய்வாளர்கள் கூறும் காரணத்தினைக் கண்டு விடலாம். அதற்கு நமது புராணக் கதையினுள் ஒன்றினைக் நாம் காண வேண்டி இருக்கின்றது.

'கந்தன் கருணை' படம் கண்டு இருக்கின்றீர்களா?

அப்படத்தினில் பிரமனுக்கு படைப்புப் பொருள் மறந்து விட்டதால் அவரை முருகன் சிறைப்பிடிப்பது போலவும் பின்னர் படைப்புப் பொருளினை சிவனுக்கு உபதேசிப்பது போலவும் ஒரு காட்சி இருக்கும். அனைவரும் கண்டு இருப்போம் என்றே நம்புகின்றேன். அந்த காட்சியினைத் தொடர்ந்தே அருமையான பாடலான 'சொல்ல சொல்ல இனிக்குதடா' என்றப் பாடலும் வரும். சரி இருக்கட்டும். இப்பொழுது நாம் காண வேண்டியது பிரமனை முருகன் சிறைப் பிடிக்கும் விடயத்தைத் தான். அதற்கு முன்னர் நாம் சில விடயங்களை அறிந்துக் கொள்வது நல்லது.

ஒன்று, ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் வடக்கு தெற்கு என்ற பாகுபாடுகள் இருந்தது கிடையாது. இந்தியா முழுமையுமே தமிழ் பேசும் மக்களே நிறைந்து இருந்தனர். இதனை நாம் நம்முடைய முந்தையப் பதிவுகளில் கண்டு இருக்கின்றோம் மேலும் அம்பேத்கர் போன்ற அறிஞர்களும் இக்கூற்றினைக் கூறி இருக்கின்றனர். ஆனால் காலங்கள் நகர நகர இந்தியா பல அரசியல் மாற்றங்களுக்கு உட்பட்டது, உட்பட்டு வட பகுதி முழுமையாக அந்நியர்களின் வசம் கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் சென்று விட்டது. இதனை நாம் இந்தப் பதிவுகள் மூலம் கண்டு இருக்கின்றோம் (ஆரியர்கள் யார்).

எனவே அக்காலம் தோன்றி இந்தியாவில் பல மாற்றங்களும் சரி போராட்டங்களும் சரி சூழ்ச்சிகளும் சரி நிலவிக் கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் சமயங்கள் வடக்கே இருந்து தெற்கே வந்தவை என்றக் கருத்துக்கள். அதன் விளைவே இன்று சைவ சமயமும் வைணவ சமயமும் எங்கே தோன்றின என்றால் நம்மில் பெரும்பாலானோர் அவை வடக்கே தோன்றியவை என்ற எண்ணத்தினையே கொண்டு இருக்கின்றோம்.

தெற்கே இருந்து வடக்கே போன சமயங்களை சிலர் கைப்பற்றிக் கொண்டு அதன் அர்த்தங்களை அவர்களுக்கு ஏதாக மாற்றிக் கொண்டு கதை புனைய ஆரம்பிக்க அன்றைய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக சமயங்களும் அவற்றின் மெய்யான அர்த்தங்களை துறந்து போலி அர்த்தங்களை சுமக்க ஆரம்பிக்கின்றன. இதன் தாக்கத்தினை நாம் காவடி எடுக்கும் கதையிலையே காணலாம்.

அந்தக் கதைப்படி இடும்பன் வடக்கில் இருந்து இரு மலைகளை தெற்கே கொண்டு வருகின்றானாம்.

ஏன் வடக்கில் இருந்து மலைகள் வர வேண்டும்? தெற்கிலே மலைகளே இல்லையா? அவை சிறப்பானவை இல்லையா? அனைத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் உதித்த தெற்கிலே இல்லாத சிறப்பு வடக்கில் இருக்கின்றதா? இவ்வாறு கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் வடக்கு சிறப்பாக கூறப்பட்டு இருக்கின்றது. நிற்க.

இவ்வாறு ஒரு காலத்தில் சைவ சமயமும் சரி வைணவ சமயமும் சரி அரசியல் காரணங்களாக மாறுகின்றன. வைணவமாவது பரவா இல்லை, சைவம் முற்றிலுமாக அந்த அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகின்றது (இதனைப் பற்றி நாம் பின்னர் பார்க்கலாம்). ஆனால் இந்த சமயங்களை உருவாக்கியோர் அத்தகைய தவறான மாற்றங்களை கண்டு கொண்டு சும்மா இருப்பரா என்ன? சமயங்களை நல் வழிப் படுத்த அவர்களும் முயலத் தான் செய்கின்றனர்.

அந்நியர்களின் சூழ்ச்சியினை எதிர்த்து அவர்கள் போராட இந்திய தேசத்தில் பல காலமாக சமயப் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருந்து இருக்கின்றன. சரி இப்பொழுது நமது கதைக்கு வருவோம்.

நம்முடைய பதிவுகளின் படி, முருகன் - இறைவனின் மைந்தன். இவர் பிரமனை கைது செய்கின்றார். பிரமன், இவர் யார் என்றுப் பார்த்தால் இவரும் இறைவனின் மைந்தன். படைப்புக் கடவுளாக அறியப்படுபவர். அப்படி இருக்க இறைவனின் பிள்ளையாக அறியப்படுபவர் மற்றொரு பிள்ளையாக அறியப்படுபவரை ஏன் சிறை எடுக்குமாறு புராணம் படைக்கப் பட வேண்டும்? அதுவும் காரணமாக கூறப்படுவது என்னவென்று பார்த்தோம் என்றால் பிரமன் படைப்பின் அர்த்தத்தை மறந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதைத் தான் நாம் சற்று விரிவாக காண வேண்டி இருக்கின்றது.

எல்லாம் வல்ல ஒரு இறைவன் எவ்வாறு தனது கடமையை மறக்க முடியும்? அவ்வாறு மறப்பவன் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும்? எனவே இக்கதையினுக்கு வேறு அர்த்தம் இருக்கின்றதா என்று நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு பார்த்தால் பிரமன் மனிதர்களை நான்கு வர்ணமாக படைத்தான் என்ற ஒரு கூற்று நமக்கு கிடைக்கப் பெறுகின்றது. அதன் அடிப்படையில் மனிதர்களும் சிலர் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றும் சிலர் பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் நாம் அறிவோம். ஆனால் பல அறிஞர்களின் கூற்றுப்படி இவை நம்முடைய சமயங்களில் இடைச் செருகல்களாக இணைக்கப்பட்டவை என்றும் ஆரம்ப காலங்களில் இக்கருத்துக்கள் நம்மிடையே இருந்ததில்லை என்றும் நாம் அறியப்பெருகின்றோம். எனவே நம்முடைய வரலாற்றின் இடையில் பிரமனின் வாயிலாக மக்களை பிறப்பால் பிரிக்கும் கருத்துக்கள் பரப்பப்பட்டன என்று நாம் அறிகின்றோம்.

இந்நிலையில் தான் சைவ வைணவ சமயத்தின் உண்மையான அர்த்தங்களுக்காக போராடியோர் பிரமன் மனிதர்களை பிறப்பால் பிரித்தான் என்றக் கருத்தினையும் மக்கள் அனைவரும் பிறப்பால் வேறுப்பட்டவர் என்ற கருத்தினையும் எதிர்க்க சில புராணங்களை எழுதுகின்றனர். அந்நிலையில் தான் நாம் மேலே உள்ள இந்தக் கதையினைக் காண வேண்டி உள்ளது.

பிரமன் தனது படைப்பு கொள்கையினை மறந்து மக்களை பிரிவு படுத்துகின்றான். அதனைக் கண்டு முருகன் அவனை கைது செய்கின்றார். கைது செய்து உலகப் படைப்பின் உண்மையான அர்த்தத்தினை உலகிற்கு உரைக்கின்றார் என்பதனையே நாம் அந்தப் புராணக் கதையின் வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும் செய்தியுமாக இருக்கின்றது.

அதாவது வட மொழியினை தங்களின் ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த சிலர் படைப்புக் கொள்கையினை பிரமன் என்ற இறை மைந்தனை வைத்து மாற்ற, அதனை சைவ வைணவ சமயத்தினைப் படைத்த தமிழர்கள் முருகன் என்றத் தமிழ் கடவுளை வைத்து எதிர்க்கின்றனர். வடக்கை தெற்கு எதிர்க்கின்றது. சமசுகிருதத்தினை தமிழ் எதிர்க்கின்றது. இந்நிலை இன்றும் தொடர்வதனை நாம் காணலாம். இதுவும் முருகன் தமிழ் கடவுளாக சிறப்பாக வணங்கப்படுவதற்கு ஒரு காரணியாகும்.

மேலும் பிரமன் பொய் சொல்பவனாகவும், அவனுக்கு என்று தனியே கோவில் எதுவுமே இல்லாதவனாகவும் நம்முடைய சமயங்களில் கூறப்பட்டுள்ளமையும் இங்கே கவனிக்கத்தக்கது.

இதன் வாயிலாக இன்று பலரும் நம்புவது போல சைவ வைணவ சமயங்கள் மனிதர்களில் பிரிவுகளை உருவாக்கவில்லை என்றும் அப்பிரிவுகளை எதிர்த்து அச் சமயங்கள் போரிட்டுக் கொண்டே வந்து இருந்து இருக்கின்றன என்பதனையும் ஆனால் காலத்தில் அவை அரசியல் சூழ்ச்சியினில் சிக்கி வீழ்ந்தன என்பதனையும் நாம் அறிய முடிகின்றது.

இதற்கு சான்றாக சித்தரான சிவ வாக்கியாரின் பாடல் சிலவற்றைக்  கண்டு விடுவோம்...

"பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?"

அர்த்தம்: பறைச்சி என்பவர் யார்? பணத்தி என்பவர் யார்? அவர்களின் வேறுபாடுகள் என்று நீங்கள் கூறுவது அவர்களின் எலும்பு அல்லது தோல் அல்லது சதையிலோ குறிக்கப்பட்டு உள்ளதோ?

"சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீராலோ
பூத வாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ"

அர்த்தம்: சாதிகள் என்பது ஏதடா... உடம்பில் ஓடும் குருதி ஒன்றாக இருக்கின்றது...பஞ்ச பூதங்களும் ஒன்றாக இருக்கின்றன...இந்நிலையில் சாதி பேதங்கள் மட்டும் எங்கிருந்து மாறுபடுகின்றன?

இவ்வாறு பாடிய சித்தர்கள் அனைவரும் குகை இடிக் கலகம் என்ற ஒன்றின் மூலமாக கொலை செய்யப்பட்டனர் என்பதும் வரலாறு. அதனை நாம் முன்னர் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது நமக்கு முக்கியம் என்னவென்றால் நம்முடைய தேசத்தில் பல போராட்டங்கள் நிகழ்ந்து உள்ளன...பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. சில விடயங்களுக்கு தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு அதன் அர்த்தங்கள் மாற்றப்பட்டு உள்ளன. அவ்வாறு மாற்றப்பட்டவைகளையும், மறைக்கப்பட்டவைகளையும் மீட்பதற்காக போராட்டங்களும் ஆண்டாண்டுக் காலங்களாக தொடரப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. இவையே நம்முடைய புராணங்களில் இருந்து நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய விடயங்களாகும்.

சரி இப்பொழுது சிலர் வேதங்களில் இருந்து தான் சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்று கூறுகின்றனர். அவர்களின் கூற்றுகள் சரியா என்பதனை காண நாம் வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
காண்போம்...!!!

வேதங்கள் எனப்படுபவை யாதெனின் -
வேதங்கள் என்றால் என்ன?

இந்தக் கேள்வியினை நீங்கள் இன்று மக்கள் மத்தியில் கேட்டீர்கள் என்றால் பொதுவாக "வேதங்கள் என்றால் அவை ஆன்மீகச் சிறப்புமிக்கவை. அவை எண்ணிக்கையில் நான்காகும்.

ரிக் வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்."

என்ற விடையே விரைவாக நமக்கு கிட்டும். காரணம் நமது சமுகத்தில் நாம் இப்படித் தான் கற்கின்றோம். வேதங்கள் நான்கு. அவை இறைவனின் வாக்குகளைக் கொண்டு இருக்கின்றன. சமயங்கள் அனைத்தும் அவற்றில் இருந்தே தோன்றின. இவ்வாறு தான் வேதங்களைப் பற்றியக் கருத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன. நிற்க.

ஆனால் இந்தக் கருத்துக்களை மறுப்பவர்களும் நம்முடைய சமுகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். அதுவும் குறிப்பாக சைவ வைணவ மற்றும் தமிழ் பெரியோர்கள், வேதத்தில் இருந்து தான் சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றக் கருத்துக்களை தொன்று தொட்டே மறுத்து வந்து உள்ளனர். அவர்களுள் சிலர் தேவநேயப் பாவாணர், மறைமலைஅடிகள், திரு. கா.சு.பிள்ளை போன்றவர்களாவர். இந்நிலையில், வேதத்திற்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. பார்க்கலாம்.

முதலில் வேதங்கள் என்றால் என்னவென்றே காண்போம். பொதுவாக வேதங்கள் நான்கு எனப்படினும், அவற்றுள் முக்கியமானதொன்றாக விளங்குவது ரிக் வேதம் தான். ஏனைய வேதங்கள் ரிக் வேதத்தின் மறு வடிவமைப்புகளாகவே திகழ்கின்றன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றன. விரிவாக பார்க்க வேண்டும் என்றால்,

"நான்கு வேதங்களுள் முதன்மையானதும் பழமையானதுமாக இருப்பது இருக்கு வேதமே. யசுர், சாமம், அதர்வணம் எனும் மற்றைய மூன்று வேதங்களும் இருக்கு வேதத்தின் மறுவமைப்புகளே" என்றே திரு சே.டால்போயிஸ் வீலர்(J.Talboys wheeler) என்னும் ஆராய்ச்சியாளர் தனது 'India of the Vedic age with reference to Mahabharata-Vol.1 of the history of India' நூலில் கூறுகின்றார்.

இவரதுக் கூற்றுகளை உறுதிப் படுத்துவது போல " மற்றைய மூன்றையும் இருக்கு வேதத்தின் பிற சேர்க்கை என்றும், இருக்கு வேதத்தின் விளக்கம் என்றும் சாரம் அல்லது சுருக்கம் என்றும் கூறலாம். இம்மூன்றில் யசுர் வேதம் பெரும்பாலும் இருக்கு வேதத்தின் பாடல்களைக் கொண்டு இருப்பதுடன் பலி செய்வதற்குரிய முறைகளை விளக்கும் பாடல்களையும் கொண்டுள்ளது. இரண்டாவதாக சாம வேதம், சோம பானம் தொடர்பான பாடல்களைக் கொண்டு விளங்குவதுடன் இருக்கு வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தின் பாடல்களையும் அதிகமாகக் கொண்டு உள்ளது. அதர்வண வேதம் இருக்கு வேதத்தின் பெரும்பாலான பாடல்களைக் கொண்டு இருந்தாலும் மந்திரம் மாயம் தொடர்பான பாடல்களையே அதிகமாகக் கொண்டுள்ளது" என்றே மற்றொரு ஆய்வாளரான கே.சு.மாக்டொனால்ட்ஸ் (K.S.Macdonalde) அவர்கள் அவரது 'The Vedic Religion' நூலில் குறிப்பிடுகின்றார்.

அதுவும் சாம வேதத்தில் இருக்கும் 1875 பாடல்களும் 75 பாடல்கள் மட்டுமே புதியவைகளாக இருக்கின்றன. ஆய்வாளர்கள் கருத்துப் படி இசையமைக்கப்பட்ட இருக்கு வேதப் பாடல்களே சாம வேதம் என்று வழங்கப்படுகின்றன.

அதாவது நான்கு வேதங்கள் என்று இவை தனித்தனியே இன்று வழங்கப்பட்டாலும் பொதுவாக பார்த்தால் அனைத்து வேதங்களும் இருக்கு வேதத்தை சார்ந்தே இருக்கின்றன. நிற்க.

இப்பொழுது நாம் வேதங்களில் காணப்படும் வழிபாட்டு முறைகளையும் தெய்வங்களையும் பற்றி சற்று கண்டு விடலாம்.

இருக்கு வேதத்தில் காணப்படும் தெய்வங்கள் பலர் இயற்கையின் உருவகங்களாகவே உள்ளனர். காற்று, மரம், ஆறு, மலை, வானம், கதிரவன் போன்றவை வழிப்படப்பட்டு உள்ளன. மேலும் "சோமபானம் என்னும் குடிவகையும் தெய்வமாக வழிப்படப்பட்டது. தெய்வங்களாக வழிப்படப்பட்டவற்றில் மருத், இந்திரன் போன்றோர் வீரர்களாகக் காட்டப்படுகின்றனர். சமயக் குருக்களாக அக்னி, பிரகசுபதி ஆகியோர் காட்டப்பட்டு உள்ளனர்" என்று மற்றொரு ஆராய்ச்சியாளரான எ.எ.மாக்டொனால்ஸ் (A.A.Macdonell) அவர்கள் அவரது 'India's Past' புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் வேதங்களில் பல பெண் தெய்வங்களைப் பற்றியும் கூறப்பட்டு உள்ளன. கூடுதலாக தமிழர்களிடம் இருந்தது போல் நினைவுத் தூண் வழிபாடும் வேதங்களில் குறிக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் பலி வழிபாடும் சரி மர வழிபாடும் சரி வேதங்களில் இடம் பெற்று இருக்கின்றன.

மேலே நாம் கண்ட விடயங்களை வைத்துப் பார்க்கும் பொழுது இன்று நம்மிடையே இருக்கும் முழு முதற் கடவுளை வணங்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் சரி இயற்கை வழிபாடுகளை உடைய வேதங்களுக்கும் சரி தொடர்பு இருப்பது போன்றா தெரிகின்றது?

"அட...நில்லுங்கள். வேதங்களைப் பற்றிப் பேசினீர்கள். வேதாந்தங்களைப் பற்றி ஏன் கூறவில்லை. வேதங்களின் ஒரு பகுதி தான் அவை அல்லவா...அவை முழு முதற் கடவுளைப் பற்றிப் பேசுகின்றது அல்லவா" என்று எண்ணினீர்கள் என்றால் முதலில் ஒரு விடயம், வேதாந்தங்கள் என்பவை உண்மையில் உபநிடங்கள் என்றே வழங்கப்பட்டன. பின்னரே ஏதோ ஒரு காரணத்திற்காக பிராமணர்களால் அவை வேதங்களின் ஒரு பகுதியாக ஆக்கப் பட்டன. அதனைத் தவிர்த்து வேதங்களுக்கும் சரி வேதாதங்களுக்கும் சரி தொடர்பு இல்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்துக்கு இதோ தேவநேயப் பாவாணரின் கூற்று,

"ஆரிய வேதம் பற்பல சிறுதெய்வ வழுத்துத் திரட்டேயாதலால் ஓரே, முழுமுதற் கடவுளை உணர்த்தும் உபநிடதத்திற்கும் அதற்கும் மண்ணிற்கும் விண்ணிற்கும் போன்று அடைக்கமுடியாத இடைவெளியுள்ளது” என்று கூறுகிறார் (தமிழ் இலக்கிய வரலாறு   - தமிழ் மண் பதிப்பகம்).

இவரின் கூற்றினை மெய்ப்பிப்பதை போன்றே பல விடயங்கள் வேதங்களுக்கும் சரி உபநிடங்களுக்கும் சரி வேறுபட்டுத்தான் இருக்கின்றன.

வேதங்கள் 'இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அவனுக்கு எதையாவது நாம் காணிக்கையாகத் தர வேண்டும். அதாவது பலி வேண்டும் என்கின்றது'
உபநிடங்களோ 'இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றிப் பேசி மனிதனை இறைவன் அறிவான்...அவன் பலி எதுவும் வேண்டுவது இல்லை' என்றுக் கூறி பலியினை மறுக்கின்றது.
வேதங்கள் ஆன்மாவினைப் பற்றிப் பேசவே இல்லை. உபநிடங்களோ ஆன்மாவினை அடிப்படையாக கொண்டு இருக்கின்றன.
வேதங்கள் இயற்கை வழிபாட்டினை உடையதாக இருக்கின்றது. உபநிடங்களோ பக்தி வழிபாட்டினை உடையனவாக இருக்கின்றன. நிற்க.
இப்பொழுது நாம் இந்தத் தலைப்பினைப் பற்றி மேலும் காண வேண்டும் எனில் வேதங்களின் காலத்தையும் அவை யாரால் யாருக்காக எதுக்காக உருவாக்கப்பட்டன என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

பொதுவாக வேதங்களின் காலம் என்றாலே அது ஏதோ ஒரு மிகப் பழமையான காலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே பலரின் எண்ணத்திற்கும் வரும். காரணமில்லாமல் இல்லை, ஏனெனில் அப்படிப்பட்ட கருத்துக்கள் தாம் நம்மிடையே பரப்பப்பட்டு இருக்கின்றன. வேதங்கள் என்பது காலகாலமாக வாய் வழியாகச் சொல்லப்பட்டு வந்த ஒன்று. அவற்றின் காலம் இன்னதென்று வரையறுத்துக் கூற இயலாத வண்ணம் பழையக் காலம் என்றே போதிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் நீண்ட காலமாக வேதங்களைப் பொது மக்கள் படிக்க முடியாத வண்ணமே சூழ்நிலைகளும் இருந்தமையினால் அந்தக் கூற்றுக்களின் உண்மைத் தன்மையை மக்கள் ஆராய முடியாத நிலையே இருந்தது. ஆனால் இன்றோ அக்கருத்துக்களை மறுத்து அறிஞர்கள் சிலர் புதுக் கருத்துக்களை கூறுகின்றனர். அவர்கள் வேதங்களின் தொன்மையை மறுக்க ஒரு முக்கியமானக் காரணம் வேதங்களைப் பற்றிய சான்றுகள் எவையும் பழமையான காலத்தில் கிட்டப்பெறாமையே.

"வேதங்கள் மிகப் பழமையானவை என்றுக் கூறப்படினும், இக்கருத்தைக் கூறுவதற்கு அடிப்படையான தொல்பொருள் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ, நினைவுச் சின்னங்களோ, நாணயங்களோ கிடைக்கப் பெறவில்லை என்பதும், கிடைத்துள்ள எழுத்துப் படிவங்களும் அண்மைக் காலதிற்குரியவனவாக உள்ளன" என்ற Bloomfield பதிப்பகத்தாரின் 'The religion of the Vedas' புத்தகத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
சரி அவர்களின் கருத்து இருக்கட்டும். இப்பொழுது நாம் வேறு சில விடயங்களைக் காண்போம்.

வேதங்களும் சரி...உபநிடங்களும் சரி சமசுகிருத மொழியிலேயே கிடைக்கப் பெறுகின்றன. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் சமசுகிருதம் என்ற மொழியின் சான்றுகள் நமக்கு கி.பி இரண்டாம் நூற்றாண்டிலேயே தான் கிட்டப்பெற ஆரம்பிக்கின்றன என்று. மேலும் சமசுகிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட மொழி என்றும் பொருள் தருகின்றது. எனவே வேதங்களின் காலமும் சமசுகிருதத்தின் காலமாகத் தான் இருக்க முடியும். எனவே வேதங்களின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு பின்னரே என்று முன்னர் பதிவினில் கண்டு இருந்தோம். (பார்க்க: சமசுகிருதத்தின் காலம்)

பொதுவாக எவராலும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்து தான். அதுவும் வேதங்களைப் பொறுத்த வரைக்கும் இக்கருத்தினை எவரும் ஏற்றுக் கொள்வது முதலில் அரிது தான். காரணம் வேதங்கள் வாய் வழியாகவே சொல்லப்பட்டு வந்துள்ளன என்றே நம்மிடம் கூறப் பெறுகின்றது, "அவ்வாறு இருக்கையில் எவ்வாறு அவை எழுத்துருவில் கிடைக்கப் பெரும் காலத்தையே வேதங்களின் காலம் என்றுக் கூற முடியும், ஏனெனில் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் நடைப் பெற்ற சில சரித்திர நிகழ்ச்சிகளில் வேதக் கடவுளர் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றனவே...அவ்வாறு இருக்கையில் அவற்றின் காலத்தை எவ்வாறு அவை எழுத்துரு பெற்றக் காலத்தினை வைத்துக் கூறுகின்றீர்கள்...அது சரியான ஒன்றாக அமையாதே" என்றக் கேள்வி எழுவது இயல்பே.

உண்மை தான். இக்கேள்விக்கு பதில் தேடும் முன் ஒரு கேள்வியினை இங்கே முன் வைக்க விரும்புகின்றேன். ஆயிரமாயிரம் காலமாக வாய் வழியாகவே கூறப்பட்டு வந்த ஒன்றை திடீர் என்று எழுத்து வடிவத்தில் கொண்டு வர வேண்டிய தேவை யாது வந்தது? நிற்க.
இப்பொழுது வேதத்தின் காலத்தினைப் பற்றிக் காணலாம். அதற்கு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டினைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது. "அட என்னங்க வேதம் அப்படின்னு சொல்லிட்டு விவிலியத்தினைப் பார்போம் என்கின்றீர்களே" என்கின்றீர்களா, சற்று பொறுங்கள் பொருள் இருக்கத் தான் செய்கின்றது.
பழைய ஏற்பாட்டின் காலம் என்ன? என்ற கேள்விக்கு
கி.பி ஒன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்ற விடைகளே கிட்டும். ஆனால் பழைய ஏற்பாட்டில் உலகம் தொடங்கிய செய்திகள் முதற்கொண்டு ஏனைய பல வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. அதனை எல்லாம் கணக்கில் கொண்டா பழைய ஏற்பாட்டின் காலத்தினைக் கணிக்க முடியும்? அவ்வாறு கணித்தால் உலகம் தோன்றிய பொழுதே பழைய ஏற்பாடும் தோன்றி இருக்க வேண்டும். மாறாக பல செய்திகள் ஒன்றாக தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வந்ததே பழைய ஏற்பாடு. இது புது ஏற்பாட்டுக்கும் பொருந்தும். மற்ற தொகுக்கப்பட்ட நூல்களுக்கும் பொருந்தும். எனவே அந்த நூல்கள் என்று தொகுக்கப்பட்டனவோ அக்காலம் தான் அந்த நூல்களின் காலமாக கருதப்பட வேண்டும். அது தான் சரியான ஒன்றாகவும் இருக்கும்.

இந்த விதியே வேதங்களுக்கும் பொருந்தும். காரணம் வேதங்கள் என்பவை தொகுக்கப்பட்ட நூல்களே ஆகும் என்கின்றார் ஆய்வாளர் பேராசிரியர் தெய்வநாயகம் அவர்கள். அவரின் கூற்றின் படி, கி.பி காலத்தில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியினில் அக்காலத்தில் இந்திய தேசத்தில் இருந்த மக்கள் பலருக்கும் ஒருக் கருத்தினைத் தெரிவிக்க தொகுக்கப்பட்டவை தான் வேதங்கள். தமிழர்களால் உருவாக்கப்பட்ட அந்தப் புதிய மொழி தான் சமசுகிருதம் என்றும் அவர் கூறுகின்றார். (வேதங்களைத் தொகுத்தவர் வியாசர் என்னும் திராவிடர் என்ற கருத்து நமக்கு ஏற்கனவே தெரியும்)

நம்புவதற்கு கடினமான விடயங்கள் தான். ஆனால் அவர் கூறும் கூற்றுகளை மெய்ப்பிக்கும் வண்ணம் சில சான்றுகளையும் அவர் தரும் பொழுது, அவற்றை முற்றிலும் நம்மால் புறக்கணிக்கவும் முடியவில்லை. அவ்வாறு அவர் தரும் சான்றுகள் என்ன...
காண்போம்...!!!

பின்குறிப்பு:ஆய்வாளர் தேவகலா அவர்களின் 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் இருந்து நான் அறிந்தவனவற்றை எனக்கு புரிந்த வகையிலேயே இங்கே பதிவிட்டு உள்ளேன்.

வில்லியம் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்

வேதங்கள் தொகுக்கப்பட்ட பாடல்கள் என்றும், அதனை தொகுத்தவர்கள் தமிழர்கள் என்றும், பல மொழிகள் பேசும் மக்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் சில கருத்துக்களை கூற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அனைத்து மொழியினையும் சேர்த்து ஒரு புது மொழியாய் சமசுகிருதத்தினை தமிழர்கள் உருவாக்கினர் என்றும் இன்று நாம் கூறினால் எவரும் இலகுவில் நம்பிவிட மாட்டார்கள். நம்பி விடவும் முடியாது. இந்நிலையில் அத்தகைய கருத்துக்களை ஒருவர் கூறுகின்றார் என்றால் அதற்கு சான்றுகள் இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் நாம் விவிலியத்தினைப் பற்றி நாம் கண்டு விடுவது பயனுள்ளதாக இருக்கும்.

"அட என்னங்க எதை எடுத்தாலும் விவிலியம் விவிலியம் அப்படினே சொல்றீங்க, வேதத்தினைப் பற்றி அறிவதற்கு விவிலியத்தினைப் பற்றி எதுக்குங்க தெரிஞ்சிக்கணும்?" என்றக் கேள்வி இப்பொழுது சிலரின் மனதினில் நிச்சயமாக எழத்தான் செய்யும். ஆனால் இப்பொழுது நாம் விவிலியத்தினைப் பற்றி காண்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அக்காரணம் என்னவெனில் சில அறிஞர்கள் வேதங்களுக்கும் விவிலியத்துக்கும் இடையில் ஒற்றுமைகள் பல இருப்பதாக சொல்லுகின்றனர். உதாரணமாக,

"வேத சமயமும் எபிரேய சமயமும் ஒரே காலத்ததாக இருக்கலாம். இரண்டன் தோற்றமும் ஒன்றாக இருக்கின்றது. வேத சமயத்தின் வேர், பல தெய்வக் கோட்பாடுடையதாக இயற்கை வழிப்பாட்டினைக் கொண்டதாய் இருக்கின்றது. எபிரேய சமயமும் பல தெய்வக் கோட்பாட்டில் இருந்து வளர்ச்சி பெற்றதாய் இருக்கின்றது." என்றே ஆய்வாளர் எச்.தி. கிரிசுவோல்த் (H.D.Griswold) அவர்கள் அவரது 'The religion of the Rig veda' என்னும் நூலில் கூறுகின்றார்.

இந்நிலையில் நாம் வேதங்களுக்கும் சரி விவிலியத்திற்கும் சரி இடையில் என்ன ஒற்றுமைகள் என்றும் ஏன் ஒற்றுமைகள் என்றும் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் இப்பொழுது விவிலியத்தினைப் பற்றி சற்றுக் காண வேண்டி இருக்கின்றது.

விவிலியம் என்பது கிருத்துவர்களின் வேத நூல் என்றே அறிவோம். அது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்று இரு பிரிவுகளைக் கொண்டு இருக்கின்றது. பழைய ஏற்பாடு உலகின் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்து பின்னர் யூதர்களின் வரலாற்றினை கூறும் ஒரு நூலாக மலர்கின்றது. புதிய ஏற்பாடோ கிருத்துவின் பிறப்பையும் அவரின் வாழ்கை மற்றும் கொள்கைகளை விளக்கும் ஒரு நூலாக இருக்கின்றது. நிற்க.

இப்பொழுது இவை இரண்டுமே கிருத்துவ சமயத்தின் நூல்கள் என்றால் இரண்டுமே ஒரே கருத்துக்களை உடையவைகளாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் மாறாக பழைய ஏற்பாட்டிற்கும் சரி புதிய ஏற்பாட்டிற்கும் சரி இடையில் பல கருத்து வேறுபாடுகள் நிறைந்து தான் இருக்கின்றன. உதாரணத்திற்கு,

பழைய ஏற்பாட்டினில்,

௧) பலி உண்டு. இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அதற்கு பலி இன்றியமையாத தேவை என்ற எண்ணம் பழைய ஏற்பாட்டினில் காணப் படுகின்றது.

"அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்." - ஆதியாகமம் 8 (20:21)

௨) கண்ணுக்கு கண். பல்லுக்கு பல்.

"உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்." - உபாமகம் 19:21

௩) யூதர், புறசாதி என்னும் ஏற்றத் தாழ்வு

"புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்." - யாத்திராகமம் 12:17

௪) அந்நிய தெய்வம் உண்டு. அந்நிய தெய்வத்தின் பெயரைக் கூட சொல்லக் கூடாது. அந்நிய தெய்வத்தின் கோவிலுக்குள் செல்லக் கூடாது.

"அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்." - சங்கீதம் 16:4

போன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.

ஆனால் புதிய ஏற்பாட்டிலோ இக்கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களே காணப்படுகின்றன.

௧) பலி நிறைவேறி விட்டது. அதாவது இறைவன் மனிதனாகி வந்து பலியாகி விட்டார் என்றும் இறைவனுக்கு பலிகள் என்று எதுவுமே தேவைப்படுவது இல்லை என்றக் கருத்துகள் காணப்படுகின்றன.

"கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்." - எபேசியர் 5:2

௨) வலது கன்னத்தில் அறைந்தால் இடதுக் கன்னத்தினைக் காட்ட வேண்டும்.

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" - மத்தேயு 5:39

௩) அனைவரும் கிருத்துவுக்குள் ஒரே உடலின் அங்கங்கள். சாதிகள் என்பன இல்லை.

"அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்." - எபேசியர் 3:3

௪) அந்நிய தெய்வம் என்பதற்கே இடம் இல்லை. ஒரே கடவுள். ஒரே மந்தை. ஒரே மேய்ப்பன்.

"விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்." - கொரிந்தியர் I 8:4

௫) அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்.

"யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்." - கொரிந்தியர் I 9 (20:21)

இதுவே புதிய ஏற்பாட்டினில் காணப்படும் கொள்கைகள். நிற்க.

மாபெரும் வித்தியாசங்கள் தான் அல்லவா... பழைய ஏற்பாடோ, பலி வேண்டும் என்கின்றது...அடித்தால் திருப்பி அடி என்கின்றது...அந்நிய தெய்வம் உண்டு என்றுக் கூறுகின்றது... ஆனால் புதிய ஏற்பாடோ இறைவனே வந்து மக்களுக்காக பலியாகி விட்டதினால் பலியினை தேவை இல்லை என்றுக் கூறுகின்றது... அடித்தால் அன்பினை திருப்பித் தான் என்கின்றது...ஒரே கடவுள் தான் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் என்றும் கூறுகின்றது. இப்பொழுது ஏன் இந்த மாற்றங்கள் என்றுப் பார்த்தோம் என்றால் பழைய ஏற்பாடு கிருத்துவர்களின் நூல் அல்ல என்ற ஒன்று நமக்கு விடையாய் கிடைக்கின்றது.

பழைய ஏற்பாடு என்பது எபிரேயச் சமயத்தின் நூல். அதாவது யூதர்களின் வழிப்பாட்டு முறைகளையும் வரலாற்றினையும் கூறக் கூடிய ஒரு நூலே அது அன்றி கிருத்துவின் கருத்துக்களைச் சுமந்துக் கொண்டு இருக்கும் ஒரு நூல் அல்ல. அதனால் தான் புதிய ஏற்பாட்டின் கருத்துக்களுக்கும் சரி பழைய ஏற்பாட்டின் கருத்துக்களுக்கும் சரி இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன. பழைய ஏற்பாட்டின் கருத்துக்களை கிருத்துவே மறுத்தும் உள்ளது போன்ற கருத்துக்களும் புதிய ஏற்பாட்டினில் காணப்படுகின்றது.

"இயேசுவிடம் சிலர் கேள்வி கேட்கின்றார்கள். தள்ளுதற் சீட்டினை எழுதிக் கொடுத்து ஒரு கணவனானவன் அவனது மனைவியை தள்ளி வைக்கலாம்(விவாகரத்து) என்று மோசே சொல்லி இருக்கின்றாரே என்று அவர்கள் இயேசுவிடம் கேட்க அதற்கு அவர் "உங்களின் இதயம் கடினமாக இருப்பதினால் அவர் அவ்வாறு எழுதிக் கொடுத்து இருக்கின்றார்...ஆணும் பெண்ணும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஓர் உடலாக இருப்பார்கள். எனவே கடவுள் இணைத்ததனை மனிதன் பிரிக்க கூடாது" என்று அவர் கூறுகின்றார்." மாற்கு 10 (2:9)

உலகத்தினில் இயேசு வந்ததாகக் குறிப்பிடப்படும் காலத்திற்கு முன்பு வரை கடவுள் வழிபாட்டினை உடைய மக்கள் அனைவரும் கடவுளுக்கு பலி செலுத்துபவர்களாகவே இருந்தனர். அது தமிழர்களாகட்டும் அல்லது யூதர்களாகட்டும் பலி என்பது இறை வழிபாட்டில் இன்றியமையாத ஒன்றாகவே இருந்தது. அப்பலியினை எதிர்த்து தோன்றிய சமயங்கள் தாம் சமணமும் புத்தமும் (அவை இந்தியாவிலேயே தோன்றி இருக்கின்றன).

அதேப் போல் பல கடவுளர் வழிபாடுகளும் சரி கடவுளர் மக்களை போரில் வழிநடத்துவர் என்ற நம்பிக்கைகளும் சரி மக்களின் மத்தியில் அக்காலத்தில் இருந்து தான் இருக்கின்றன.

பழைய ஏற்பாட்டில் 'யாவே' யூதர்களுக்காக மற்ற தெய்வங்கள் மத்தியில் நின்று போர் புரிவது போல குறிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கடவுளர் இருப்பது போலவும் பழைய ஏற்பாட்டினில் குறிக்கப்பட்டு உள்ளது.

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்." - யாத்திராகமம் 14:14

இவை அனைத்தும் யூத சிந்தனைகள். யூதர்களின் சமயமான எபிரேயச் சமயத்தின் கருத்துக்கள். மாறாக கிருத்துவின் கருத்துக்கள் கிடையாது. அவ்வாறு இருக்க ஏன் இந்த எபிரேயச் சமயத்தின் கருத்துக்களும் வரலாறும் தொகுக்கப்பட்டன என்ற கேள்விகள் இயல்பாகவே எழும். அதற்கு விடையாக என்ன கிடைக்கின்றது என்று பார்த்தோம் என்றால் பழைய ஏற்பாடு யூதர்களுக்காகவே தொகுக்கப்பட்டது. எனவே தான் அது யூதர்களின் மொழியாகிய எபிரேய மொழியினில் எழுதப்பட்டது.

யூதர்கள் தங்களின் வரலாற்றையும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இறை மைந்தனுக்காக அவர்கள் காத்திருந்த விடயத்தினையும் அவர்கள் அறிந்துக் கொள்வதற்காகவே எழுதப்பட்டது தான் பழைய ஏற்பாடாகும். அவ்வளவே. அதில் கிருத்துவின் கருத்துக்கள் கிடையாது.

எனவே தான் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் சரி இவ்வளவு வேறுபாடுகள். பழைய ஏற்பாட்டினில் இருப்பது யூதர்களின் கொள்கைகள்...புதிய ஏற்பாட்டில் இருப்பது கிருத்துவின் கொள்கைகள். கிருத்துவின் கொள்கைகள் உலகில் உள்ள அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் அவை யூதர்களுக்கு மட்டும் உரியவை அல்ல என்ற நோக்கிலே தான் அன்று உலகின் மத்தியப் பகுதியில் பெருமளவு பேசப்பட்டு வந்த கிரேக்க மொழியில் புதிய ஏற்பாட்டினை தொகுக்கின்றனர்.

பழைய ஏற்பாடு யூதர்களுக்கு உரியது - எபிரேயச் சமயத்தின் கொள்கைகளைக் கொண்டது - எபிரேய மொழியில் தொகுக்கப்படுகின்றது.

புதிய ஏற்பாடு உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக - கிருத்துவின் கொள்கைகளைக் கொண்டது - கிரேக்க மொழியில் தொகுக்கப்படுகின்றது.

சரி இருக்கட்டும்...இப்பொழுது விவிலியத்தினைப் பற்றியும் அதன் பிரிவுகளையும் பற்றி சற்று கண்டாயிற்று. இப்பொழுது நாம் வேதங்களுக்கும் சரி விவிலியத்திற்கும் சரி ஒற்றுமைகள் இருக்கின்றன என்று கூறி இருக்கின்றோம்... மேலும் எச்.தி. கிரிசுவோல்த் (H.D.Griswold) அவர்கள் குறிப்பாக வேதத்திற்கும் எபிரேயச் சமயத்திற்கும் சரி ஒற்றுமைகள் இருப்பதாக கூறி இருக்கின்றார். இந்நிலையில் அந்த ஒற்றுமைகள் யாதென்று நாம் காண வேண்டி இருக்கின்றது...
காண்போம்...!!!

பி.கு:

இக்கருத்துக்கள் நான் சில ஆய்வாளர்களின் ஆய்வுகளில் இருந்து நான் புரிந்துக் கொண்டவையே ஆகும்.

தொடரும்... பகுதி-15 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie...

1 கருத்து: