திங்கள், 20 அக்டோபர், 2014

பண்டைய தமிழரின் சமயம் [The religion of the ancient Tamils] :

பண்டைய தமிழரின் சமயம்
[The religion of the ancient Tamils] :

பகுதி 01:

கி.மு  2000 ஆண்டுகளுக்கு முன்
சிந்து சமவெளி நாகரிகம்

தனி மனிதனைக் கடந்து அண்டத்தை உணர்த்தி நிற்கும் அல்லது ஒன்றை(கடவுள் , இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே “சமயம்“ ஆகும். '"சமயம்" என்பது வாழ்வின் பல்வகைச் சூழ்நிலைக்கும், ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு நிலைக்கும் ஏற்ப மனிதன் தன் நடத்தையை (நற்செய்கைகளைச் செய்தல், கெட்ட செய்கைகளை விலக்குதல்) அமைத்துக்கொள்ள உதவியாய் அமைந்த ஒரு கோட்பாடு எனலாம்.

[1]மொழி சார்ந்த குழு:தமிழ்     
இனம்:தமிழ்      
இந்தியாவிற்கு குடியேறிய காலம்:10-8000 BC
சமயம் [மதம்]:Proto-Tantra ஆதிமுன்னோர் சார்ந்த  சடங்கு

தமிழர் வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான கருத்து. இது, பெரும்பாலும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்களுட் சிலர் திராவிடர் மத்தியதரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்கின்றனர். இந்தியாவுக்குத் தெற்கே, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்து அழிந்து போனதாகக் கருதப்படுகின்ற இலெமூரியா எனக் குறிப்பிடப்படும் ஒரு நிலப் பகுதியையும், தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் பேசப்படும் குமரிக்கண்டம் என்பதையும் ஒன்றாக்கி, அப்பகுதியே தமிழர் (திராவிடர்) தோன்றிய இடம் என இவர்களில் சிலர் வாதிட்டனர்.ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
      
[2]மொழி சார்ந்த குழு:ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த/Indo-European
இனம்:காக்கேசிய இனத்தவர்    
இந்தியாவிற்கு குடியேறிய காலம்:6-4000 BC
சமயம் [மதம்]:Rig-Veda இருக்கு வேதம்[வேத முறை]

நான்கு வேதங்களையும் கற்று பாராயணம் செய்வதே ஞானத்தை அடையும் வழியாக  கருதப்பட்டு வந்தது.இருக்கு வேதம், வேதகால சமசுகிருதத்தில் ஆக்கப்பட்ட 1,017 சுலோகங்களால் ஆனது. இச் சுலோகங்களுட் பல வேள்விக்கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை. இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் (பகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர்[தமிழர்கள்] எனபடும் இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.[ கி.மு. 2000 அளவில் மத்திய ஆசியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் பல நாடோடிக் குழுக்கள் இந்தியாவிற்குட் புகுந்தன எனவும் இவையே இந்தியாவிற்குள் முதன் முதலிற் புகுந்த ஆரியக் குழுக்கள் எனவும்  எடுத்துக்கொண்டனர்..இந்தியாவிற்குட் புகுந்த காக்கேசிய ஈரானிக் குழுக்கள்  இவர்கள் . ]

3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் ஒருவித இயற்கை வழிபாட்டையே பின்பற்றினார்கள்.
    
பண்டைய சிந்து சமவெளி நாகரிக மக்கள் பொதுவாக தந்திர முறை பண்பாட்டையே கொண்டிருந்தார்கள்.  "ஹரப்பா" என்ற சொல்லை ஹர+அப்பா என பிரிக்கலாம் .இங்கு ஹர என்பது சிவா என்பதையும் அப்பா என்பது தந்தையையும் குறிக்கிறது. ஹரப்பா நகரம் சிவா விற்காக அர்ப்பணிக்கப்பட்ட  ஒரு இடமாக கருதலாம்.இந்த சிவா வை இந்திய பண்பாட்டின் தந்தை என குறிப்பிடலாம். ஒரு சமூகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் அறிய இரண்டு வழி முறைகள் வரலாற்று அறிஞர்களால் கையாளப்படுகிறது. ஒன்று தொல்பொருட்கள்(கல்வெட்டுகள்,மனித மிச்சங்கள் ) மற்றொன்று இலக்கியம். சிந்து-சரஸ்வதி நாகரிகத்தீன் சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்களில் ஒன்று  முகத்தில் கொம்புகள் கொண்டு விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் பசுபதி வடிவம்.இந்த தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு ஆகும் .சிவனை வழிபடும் வழக்கம் பழங்காலத்திலும் நம்மிடம் இருந்துள்ளது என்பது இதனால் அறியப்படுகிறது.
 
ஆரியர் அல்லாதவர்களின் ஆன்மீக அணுகுமுறை பொதுவாக தந்திர முறை யாகும்.இது ஆரியர்களின் வேத   வழக்கத்தில் இருந்து வேறு பட்டது .இது  ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறையாகும்.ஆகவே ஆரியர்களின்  அகநிலை உணர்வுக்குப் புறம்பான,வெளிப்புற சடங்கில் இருந்து மாறுபட்டது .தந்திர வழிபாட்டு முறையின் வேர்களை அறிய வேண்டுமெனில் நாம் சிந்து சமவெளியில் இருந்து தொடங்க வேண்டும்.சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் இரண்டு முக்கியமானவை . ஒன்று சிவன் தன் ஆண் குறி தெரியுமாறு அமர்ந்திருக்க சுற்றி மிருகங்கள் நிற்பதுபோல் வரையப்பட்டிருக்கும் சிற்பம். இரண்டாவது யோனி தெரியுமாறு அமர்ந்திருக்கும் ஒரு பெண் சிற்பம். இதன் மூலம் யோனி வழிபாடும், லிங்க வழிபாடும் இருந்ததென வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. முன்னோர்களின் நினைவாக நடுகல் பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் பல பகுதிகளில் சைவர்களின் நடுகற்கற்கள் காணப்படுகின்றன. சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள். லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண்குறியைக் குறிப்பதாகவும், வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. தந்திரம், காமத்தின் வழியாக கடவுளை அடைய முனைபவர்கள் பின்பற்றிய வழிமுறை எனவும் கூறலாம்.

ஏறத்தாழ ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தின் உச்சியில் இருந்தார்கள் .அவர்கள் தந்திர முறையை  மனதையும் உடலையும்  ஒருங்கிணைப்பதற்கு அப்போதே பாவித்தார்கள்.   தந்திர முறையில் உடம்பு,மனது, உணர்வு மூன்றையும் கட்டுப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் சக்தியை ஆன்மீக பரவச நிலையை அடைய பயன்படுத்துவதாகும்.  காணாத கடவுளை நினைத்து தவமிருப்பதற்கு பதிலாக நம் கண் முன்னே இருக்கும் பிடித்தமான உறுப்புகளை பார்க்கும்பொழுது நமது கவனச் சிதறல் குறைக்கப் படுகிறது. அந்தக் கணங்களில் நம் உள்ளுணர்வு விழிப்பாகவும் , கவனம் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது . இதுதான் தந்திர முறையின் தொடக்கம்.அதாவது மனதும் உடலும் ஒன்றுபட்டு இயங்குவதே தந்திர முறையின் முக்கிய கூறு. உடலையும் மனதையும்  தனித்தனியே பிரிக்க முற்படுவதுதான் மற்ற வழிபாட்டு முறைகள் ஆகும்.

ஆரியர் வந்த காலத்தில் வடஇந்தியாவிற் குடியிருந்தவர் பெரும் பாலும் திரவிடரே. ஆரியர் வடநாட்டுப் பழங்குடி மக்களொடு போரிட்டு நாடு கைப்பற்றியதாக வேதத்திற் கூறப்பட்டிருக்கிறது .ஆரியர்கள், பழங்குடி மக்களை  கீழோர்,தம்மை விடத் தாழ்ந்தவர் என் கருதினர் .உதாரணமாக இராமாயண கதையில் இவர்களை குரங்கு என்றும்  அரக்கன் என்றும் குறிக்கப் படுகிறது.

ஆரியர்க்கும் ஆரியர் அல்லாதவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட  போர் நடவடிக்கையின் போது,ஒரு  பிரசித்தி பெற்ற நபர் பிறந்தார் .அவரின் பெயர் சதா சிவா .சிவனை, "மகாசிவன்' என்று அழைப்பதற்கு பதிலாக, "சதாசிவன்' என்ற பெயரால் அழைப்பர்.  சிவனுக்கு மட்டுமே, "சதா' என்ற சிறப்புச் சொல் உண்டு. வேறு எந்த தெய்வத்தின் பெயரிலும், "சதா'வைப் பயன்படுத்துவதில்லை. "சதா' என்றால், "எங்கும், எப்போதும்' என்று பொருள் கொள்ளலாம். எங்கும் சிவம், எதிலும் சிவம், எப்போதும் சிவம்' என்று சதாசிவத்தைப் பொருள்படுத்தலாம்.இவர் ஒரு பெரிய ஆன்மிக குரு.இவரின் பிறப்பிற்கு முன்பே  தந்திர முறை செயல் பாட்டில் இருந்தாலும், மனித வர்க்கத்திற்கு இவரே முதல் முறையாக , முறையான , ஒழுங்கான ஆன்மீக உணர்வு/ இயல்பு  ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

இவர் ஒரு மிக சிறந்த ஆன்மிக குரு மட்டும் அல்ல ,இவரே பாரதத்தின் ஆடலுக்கும் இசைக்கும் ஒரு அமைப்புமுறை நிருவியவர்.இதனால் தான் இவரை சில நேரம் நடராஜர்[நடராசர் ] எனவும் அழைப்பர்.

நடராஜ தத்துவம்:
திருமுகம்-எல்லையற்ற அழகும் இனிய தண்ணளித்திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும்.

பனித்தசடை-சடை சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பையும் காட்டுகின்றது.

கங்கை-இறைவன் பேராற்றலையும் வேகங்கெடுத்தாளும் வித்தகத்தையும் விளக்குவது.

பிறைசூடுதல்-சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை.

இவரே[சிவனே ] சித்த வைத்தியத்தை  நிருவியவர் .

"நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்  நிர்மலமாம் சதாசிவனார் என்னக்குச் சொன்னார்" -அகத்தியர் -

சமுதாய சூழலிலும் அவர் ஒரு பெரும் பங்கு ஆற்றி உள்ளார்.சாதி சமுக அமைப்புகளுக்கு அப்பால் ,இருவரும்   ஒருவருக்கு ஒருவர் பொறுப்பு  உணர்ந்து  தமது திருமணம் வெற்றி அடைய ஒரு  ஒழுங்குமுறையை ஏற்படுத்தினார் அது மட்டும் அல்ல ,ஆரியன் அரசிளங் குமாரியை திருமணம் செய்ததின் மூலம், முரண்பாடான  கும்பலை ஒன்றாக்கினார் .இதன்   மூலம் மனித நாகரிகத்தின் தந்தை என இவர் அழைக்கப் படுகிறார் .

ஆன்மிக வளர்ச்சிக்கு /வெற்றிக்கு நல்ல ஒரு குருவும் நல்ல ஒரு சீடர்[மாணாக்கர்] வேண்டும் என்பதை சிவா விளங்கப் படுத்தி உள்ளார் .

தந்திர முறை ,தியானம்  யோகா இவைகளின்  ஒன்று சேர்த்தலை விட மேல் அதிகமானது .யோகா உடலையும் மனதையும்  தனித்தனியே பிரிக்க முற்படுவது.தந்திர முறையின் படி,போட்டி , போராட்டம்  வாழ்வின்  சாரம். எல்லா விதமான தடைகளுக்கும் எதிராக போராடி குறைபாடான , நிறைவுறாததில் இருந்து  பூரணமாக்க , முழுநிறைவாக்க முயலும் முயற்சி , பிரயத்தனமே  தந்திர முறையின் உண்மையான  மெய்பொருள்.

சிந்துவெளி நாகரிகக் காலத்தில் லிங்க வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் இடிபாடுகளுக்கிடையில் கிடைத்துள்ளன.அத்துடன் சிவன் அல்லது பசுபதி ,"ஆமுவான்/Ahmuvan" போன்ற கடவுளரும் இருந்துள்ளனர்.சிவா என்பது ஒரு திராவிட சொல் .அது சிவந்த அல்லது கோபத்தை குறிக்கும்.சிவனது மூலம், சிந்து வெளி, மொகாஞ்சிதாரோ, ஹரப்பா நாகரீகங்களுடன், தொடர்பு பட்டது!"ஆமுவான்/Ahmuvan " முருகனை ஒத்த வடிவத்தை கொண்டுள்ளார்.அனால் அங்கு கோவில் இருந்தத்திற்கான  ஒரு அடையாளம் ஒன்றும் இல்லை. பண்டைய  கால தமிழர்கள்   போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன.அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது.அது போலவே வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனுடன் சேர்த்துவிட்டார்கள்.ஆரியக் கலப்புக்குப் பின்னரே  முருகன்-கார்த்திகேயன்[ஸ்கந்தன்] ஆனான்! திருமால்- விஷ்ணு ஆனான்!* சிவன்- ருத்திரன் ஆனான்!உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, ஆரியர்கள்  கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள்.அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும்.அதாவது தமிழர்களின்  நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன.உலக வரலாறு நெடுகிலும், ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் தந்திரம் அது.தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் உணர்வதில்லை. தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது. முருகனுக்கு தமிழில் வள்ளி என்ற மனைவி இருந்தார். ஆரியத்தோடு சேர்ந்து ஸ்கந்தன் இந்திரனின் மகளான தெய்வானையும் மனைவியாகச் சேர்ந்து கொண்டார். இதன் மூலமே, தேவேந்திரனுடன் சொந்தமாகின்றார்!இதன் பின்னராக சாதாரண மக்களுக்குப் புரியும்படியாக அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே  உறவுமுறை உருவாக்கப்பட்டன. முருகனும், பிள்யைாரும் சிவனுக்குக் குழந்தைகள். திருமால் மைத்துனர் .......

:சிந்துவெளி நாகரிக மக்களின் சமய நம்பிக்கை:

இன்றைய சைவ சமயத்திலே காணப்படும் இலிங்க வழிபாடு. சக்தி வழிபாடு, சிவ (பசுபதி) வழிபாடு முதலியன சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியமான சமயப் பண்புகளாக விளங்கின என்பது பல அறிஞரின் துணிவாகும்.

சில  சிவ வழிபாட்டுக்குரிய சின்னங்கள் சிந்துவெளி நாகரிகத்திலே காணப்பட்டாலும், சிந்துவெளி நாகரிகத்திலே முதலிடம் பெற்று விளங்கியது பெண் தெய்வ (அன்னை) வழிபாடே என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. சிந்துவெளி மக்கள் வழிபட்ட தெய்வங்களை முக்கியத்துவத்தின்படி முறைப்படுத்திய மார்ஷல், முதலில் அன்னைத் தெய்வத்தையும், அதற்கடுத்தபடியாக மும்முகமுடைய கடவுளையும், மூன்றாவதாக இலிங்கம் அல்லது ஆண் குறியையும் எடுத்துக் கூறியுள்ளார். பெண்தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் அது தோன்றிய சமுதாயத்திலே தாய்வழிமுறை நிலவியதே என்பது ஆராய்ச்சியாளர் காட்டும் உண்மையாகும்.அங்கு அன்னைத் தெய்வமே முழுமுதற்றெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

பெண்தெய்வ (சக்தி) வழிபாடும் மூலச்சிவ வழிபாடும் இருந்ததைப் மேலே  பார்த்தோம். இவற்றின் பிணைப்பாக இலிங்க வழிபாடு நிலவியது. மொகஞ்சதரையிலும், ஹரப்பாவிலும் கணக்கற்ற, நீண்டு குவிந்த அல்லது முக்கோணக் கற்களும் களிமண் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. மார்ஷல் அவற்றைச் சிவலிங்கங்கள் என எடுத்துக்காட்டினார். இலிங்க வழிபாடானாது உழவுத் தொழிலை மேற்கொண்டிருந்த புராதன நாகரிகங்களிற் காணப்படும் வழிபாட்டு முறையாகும். "நீண்டு குவிந்த கல்வடிவு ஆண்குறியின் அடையாளமாகவும், அக்கல்லைச் சூழ்ந்தவட்டக் கல்வடிவு பெண்குறியின் அடையாளமாகவுமே முன்னையோராற் கருதப்பட்டது"ஆண் பெண் குறிச் சேர்க்கையே பண்டைக் காலந்தொட்டு இலிங்க வடிவில் அமைந்தது என்பது பிற்காலச் சைவ சித்தாந்த சாத்திர நூலானும் அறியக்கிடக்கின்றது.

"சக்தியுஞ் சிவமுமாய தன்மையில் வுலகமெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயர்குண குணியுமாக
வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை யெல்லாம்
இத்தையும்அறியார்பீடலிங்கத்தின் இயல்பும் ஓரார்."

என்று சிவஞானசித்தியார் தத்துவ விளக்கத்தோடு உரைப்பது பண்டுதொட்டு வந்த உண்மையே யென்பதில் ஐயமில்லை.

பிற்காலத்தில் சைவசமய தத்துவ அடிப்படைகளிலே முக்கியத்துவம் பெறாவிட்டாலும் மரங்களை வழிபடுவதும் சிந்துவெளி நாகரிகச் சமய முறைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. எண்ணற்ற சிந்துவெளி முத்திரைகளின் அரச மரம் இடம்பெற்றுள்ளது.  சிந்துவெளியிற் கண்டெடுக்கப்பட்ட ஓர் இலச்சினையில் இரு அரச மரக்கிளைகளுக் கிடையிலே ஆடைகளின்றிப் பெண் தெய்வமொன்று காணப்படு கின்றது. நீண்ட கூந்தலும் கைகளில் காப்புகளும் காணப்படுகின்றன. மக்கள் உருவங்களும் விலங்குருவங்களும் அவ்வன்னைத் தெய்வத்திற்கு அடிபணிந்து அஞ்சலி செய்து நிற்கின்றன. அரச மரமும் அதனுடன் சேர்ந்த அன்னை வழிபாடும் ஆரியர் காலத்துக்கு முற்பட்டன என்பதற்கு இதனையும் சான்றாகக் கொள்வர் வரலாற்றாசிரியர்.

கிறித்துவிற்கு முன் 2,500 ஆண்டளவில் சிறப்புற்று விளங்கிய சிந்துவெளி நாகரிகம்  கி.மு.1700-ம் ஆண்டளவிற்குப் பின்னர் வரலாற்றிலிருந்து மறைந்து விடுகிறது. ஏறத்தாழ அக்காலப் பகுதியில் அலையலையாக இந்தியாவிற்குள் வந்த நாடோடி மக்களான ஆரியரே சிந்துவெளி நாகரிகததின் அழிவுக்குக் காரணமாயிருந்தனர் என்பது இப்பொழுது  ஆராய்ச்சியாளர் முடிவாகும்.மேலும் சிந்துவெளி நாகரிகத்துக்கும் திராவிடருக்கும் நெருங்கிய தொடர்புண்டு என வரலாற்றாசிரியர் கூறுவர்.

"இந்திரனே! உன்னுடைய பாதுகாப்புடன் எங்களுடைய (ஆரியர்களுடைய) எதிரிகளை (தமிழர்களை) முற்றிலுமாக வெற்றி கொள்வதற்கு நாங்கள் கடினமான ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறோம்."
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 3

"இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் (தமிழர்களை) கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்".
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22

‘சோமக்குடியனான இந்திரன், நீண்ட கழுத்தையுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக்கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக்கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப்பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் (சமணத்தமிழர்களால்) தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’
மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 96, பாடல் (சுலோகம்) 8

வச்சிராயுதம் ஏந்திய வேதகால ஆரியக் கடவுளான இந்திரன் மட்பாண்டத்தை உடைப்பதுபோல எதிரிகளை வென்றான் என்று வேதங்கள் பாடும். பெண் தெய்வம் (அன்னை) சிவன், இலிங்கம், முதலிய தெய்வங்களை இந்திரம் வென்றதுடன் சிந்துவெளி நாகரிகத்தின் சுற்று மதில்களும், கோட்டைச் சுவர்களும், அரண்களும், அகன்ற வீதிகளும், அன்னை ஆலயமும், தானியக் களஞ்சியமும் மண்ணோடுமண்ணாயின. நீண்ட நாடகம் ஒன்றின் முதலாம் அங்கம் முடிவடைந்ததுபோல மேடையில் திரை வீழ்கிறது. வெற்றி வீரனான இந்திரனும் அவனது சகாக்களும் சோமபானம் அருந்திக்களிக்கும் எக்காளச் சிரிப்பு மட்டும் எமக்குக் கேட்கிறது. ஆனால் மீண்டும் திரை விலகும்போது தோற்றவர்களை மட்டமின்றி வென்றவர்களையுமே காணவில்லை. வேதகாலத்திற்குப் பிற்பட்ட இந்து சமய வளர்ச்சியிலே வேதகாலக் கடவுளர்கள் முக்கியத்துவமிழந்து விடுகின்றனர். இந்திரன், வருணன், மித்திரன், பிரஜாபதி, மத்திகவன் முதலிய கடவுளர்கள் முதலிடம் இழந்து பின் வரிசைகளில் காணப்படுகின்றனர். சிவன், விஷ்ணு, பிரம்மா, சக்தி முதலிய புதிய தெய்வங்கள் நமது மதிப்பையும் கவனத்தையும் கவருகின்றனர்.

சிந்துவெளி நாகரிகம் சிதைவுற்று ஆயிரம் ஆண்டுகளுக்குத் தென்னிந்திய வரலாறு எவ்வாறிருந்தது என்று இன்றைய நிலையிற் கூற முடியாமலிருக்கிறது. கி.மு. ஏழாம்  நூற்றாண்டளவிலே திரைவிலகும்போது,கடைசி தமிழ் சங்க காலத்தில்  திராவிட மக்கள் ஓரளவு நாகரிகம் பெற்றுத் தென்னிந்தியாவில் வாழ்வதனை நாம் காண்கிறோம்..

ரோமன், கிரேக்கம், பாரசீகம், ஹீப்ரு, சமஸ்கிருதம், தமிழ், சீனம் ஆகியவை உலகத்தின் பழைய மொழிகள். ஒவ்வொரு மொழியும் தனியாக இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும் கொண்டுள்ளது.தமிழ்மொழியின் இலக்கண நூல் தொல்காப்பியம். அது கி.மு.700-300 இடையில் எழுதப்பட்டது என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

தமிழின் பண்டைய நூல்களில் தொல்காப்பியம் கடவுள் வாழ்த்து இல்லாமலேயே இருக்கிறது. ஆயினும் தொல்காப்பியம் கடவுள் வாழ்த்துப்பற்றிக் குறிப்பிடுகிறது. "கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'[புறத்திணையியல் -சூத்திரம் 27] என்பது தொல்காப்பிய நூற்பா. தொல்காப்பியத்தில் சமயம் அல்லது மதம் என்ற சொல் இல்லை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த முழுமுதற் கடவுள் அல்லது பரம்பொருள் என்ற வரைவிலக்கணத்துக்கு அமைய ஒரு முழுமுதற் கடவுள் குறிப்பிடப்படவில்லை.

மேலும் "காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்." (தொல்.பொருள்-புறத்திணையியல் -சூத்திரம் 23)-இப்படி கூறுகிறார் .அதாவது கடவுள் பற்றி பாடல்களில் காமப்பொருளை சார்த்திப் பாடுதலை நீக்கமாட்டார்கள். ஏனெனில் கடவுளரின் காதலும் பாடல்களில் ஏற்கப்படுவன. இங்கு ஏனோர் எனப்பட்ட தலைவர், மன்னர்கள் ஆகியோரது பெயர் சுட்டியும் இவை வரும். "இன்பப் பகுதிகளைக் கடவுளிடமிருந்தும் நீக்கமாட்டார்கள். மக்களிடமிருந்தும் நீக்க மாட்டார்கள் என்று புலவர் கூறுவர்" என்பதே இதன் பொருள். எல்லா அனைத்து  புலன் சார்ந்த இன்பங்களில், உச்ச உயர்வான , ஒப்புயர்வற்ற  மகிழ்தல் என கருதப்படும் ஐம்புல இன்பங்களும் நிறைந்த  காம இன்பம் ஒரு பெண்ணிடம் நிறைந்துள்ளன என்பதை திருவள்ளுவர் குறள் 1101 மூலம் கூறுகிறார்.

"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள." -குறள் 1101

விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த இந்த வடிவழகியிடம்[மனைவியிடம்] நிறைந்துள்ளன

இந்த உச்ச உயர்வான , ஒப்புயர்வற்ற  மகிழ்தலின் மூலமான காதல் அன்பை பற்றி பாடும் திணைகளை  ஐந்து வகையாக, ஐவகை நிலங்களின் தன்மையை ஒட்டியனவாக, அந்த அந்த சூழல்களொடு பின்னி பிணைந்து நிகழ்வனவாக,கூடல்[குறிஞ்சி] ,பிரிவு[பாலை] ,காத்து இருத்தல்[ முல்லை] ,இரங்கல் [நெய்தல்]  & ஊடல்[மருதம்] என தொல்காப்பியர் அந்த அந்த நிலத்திற்குரிய தெய்வத்துடன் அகப் பொருளில் குறிப்பிடுகிறார்

மனிதர்களை நாலு வகையாக பிராமண, சத்திரிய வைசிய, சூத்திரர்  என்னும் நான்கு வர்ணங்களாக பிரிக்கும் ஆரியர் கொள்கை பண்டைய தமிழர்களுக்கு அன்னியமானது . அங்கு வர்ண  ஜாதி அமைப்பு இல்லை .தொல்காபியத்தில்  எங்கும் சூத்திரர்  என்ற சொல்  பதம் ஒன்றும் இல்லை.ஆனால் பண்டைய தமிழர்கள் மத்தியில் ,அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையிலான குலம் இருந்துள்ளது.குலம் என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும்.

இவ்வாறு தொல்காப்பியம் தமிழ்மக்களின் மிகப் பழமையான ஒரு சமுதாயக் கட்டுமானத்தை படம் பிடித்துக் காட்டுகிறது என்பதில் ஐயம் எதுவுமில்லை.

தொல்காப்பியர் நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார்.

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"(தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05)

[உரை:-மாயோன் மேவுவது காடுடைய நிலம்.சேயோன் மேவுவது மேகம் சூழ்ந்த மலை உள்ள நிலம் .தேவர் குல மன்னன் மேவுவது மிகுதியான நீர் உள்ள நிலம்.வருணன் மேவுவது மணல் நிறைந்த நிலம்.இந்த நான்கு நிலங்களும் முல்லை,குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர் சொன்ன முறைப்படி சொல்லப்படும். மேய = விரும்பிய]

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து காணப்பெற்ற பாலைப் பகுதியில் "கொற்றவை" வழிபாடு நிகழ்ந்ததாகவும் சங்க நூல் வழியும், சங்கம் சார்ந்த சிலப்பதிகாரம் போன்ற நூல் வழியும் அறிய முடிகிறது.

பழந்தமிழ்ப் பேரிலக்கணம் தமிழ் நாட்டுத் தெய்வங்களுக்கு நிலப்பாகுபாடு காட்டுகிறது. திருமால்[மாயோன்], முருகன்[சேயோன்], இந்திரன்[வேந்தன்], வருணன்,கொற்றவை ஆகிய தெய்வங்களையும் கூறும் இந்நூல் பிற்காலச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைக் குறிப்பிடவில்லை. சங்க நூல்களில் மிகச் சில இடங்களிலேயே சிவனைப்பற்றிய குறிப்புக்கள் இடம்பெறுகின்றன.ஆனால் சிவன் என்னும் பெயரோ, அவன் இன்ன நிலத்துக்கு உரியவன் என்றோ கூறுப்படவில்லை.

.சேயோன் என்ற சொல் சிவனைக் குறிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். சேயோன் என்றால் செம்மை, சிவந்த நிறத்தோன், எனவே சேயோன் சிவனைக் குறிக்கிறது என்பர்..சிவபெருமான் குறிஞ்சித் தெய்வம் என்பதற்கு இலக்கிய வழக்கும் இல்லை. உலக வழக்கும் இல்லை. இருந்திருந்தால் தொல்காப்பியர் நிச்சயம் சுட்டியிருப்பார்.தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச்சங்க இலக்கிக்கியங்களில் சிவனைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.முப்புரம் எரித்தமை, கண்டத்திலே நீலநிறம் பெற்றிருத்தல், திங்களைத் தலையிலே தரித்தமை, நெற்றிக்கண் உள்ளமை, இடபக்கொடியை உடையராயிருத்தல், உமையொரு பாகனாயிருத்தல், ஐம்பூதங்களைப் படைத்தவனாயிருத்தல், ஆகியன சங்க இலக்கியங்களிலே சிவனைப்பற்றிக் கூறப்படும் குறிப்புகள்.முக்கண்ணனாகிய சிவனது கோயில் ஒன்றும் "முக்கட் செல்வர் நகர்" எனப் புறநானூற்றின் 6ம் பாடல் குறிக்கிறது.திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை.கிருஸ்துக்குப் பின் 4ஆம்  – 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருமுருகாற்றுப்படையிலும் பரிபடலிலும் நாம் காணும் சிவா பார்வதியின் மகன் முருகன் என்ற கதையும் அங்கு இல்லை.அது மட்டும் அல்ல,லிங்க வழிபாடும் அங்கு இல்லை.  சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.

கிருஸ்துக்குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான்,குப்தா காலத்தில்,பிள்ளையார்.ஓர் அளவு அடையாளம் காணக்கூடிய அளவிற்கு வளர தொடங்கினார்.பல்லவ மன்னரின் படைத்தளபதியான பரஞ்சோதி[இவரே பிற்காலத்தில்  சிறுத்தொண்டராவார் ],கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் ,வாதாபியில் போரில் வெற்றிப்பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதியை  [பிள்ளையாரை] சோழநாட்டுக்கு எடுத்து வந்து, தமிழ் நாட்டிற்கு முறையாக அறிமுகபடுத்தப்பட்டார்.

மிகவும்  போற்றிப் பாராட்டி  வணங்கிய தமிழரின் தெய்வமாக  சேயோன் ,முருகன் ஆதி காலம் தொடங்கி  இருக்கிறார். தமிழ் அகராதியில் சேய் =மகவு : சிவப்பு: இளமை  என்று குறிக்கிறது .புறநானுறு  56 முருகனை சேயோன் என்று அழைக்கிறது

"மணி மயில் உயரிய மாறா வென்றி
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்."

"மயிற் கொடியை எடுத்த மாறாத வெற்றியை யுடைய அம் மயிலாகிய ஊர்தியை யுடைய ஒள்ளிய செய்யோனு மென்று சொல்லப்பட்ட" என்று புகழ் சூட்டுகிறது .அப்படியே தொல்காப்பியமும் முருகனை  புகழ்  சூட்டுகிறது .
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திரனின் கோயிலை குறிக்கிறது.சங்க காலத்து வழிபாட்டை  ஆராயும் போது எமக்கு மேலும் இரு தகவல்கள் தெரிய வருகிறது.முதலாவது திருமால்-திருமால் அல்லது கண்ணன் என்ற பெயரில் பல தடவை குறிப்பிட்டு  வணங்கப்பட்டுள்ளது. இரண்டாவது திராவிடர் தெய்வங்களும் ஆரியர் தெய்வங்களும் தமக்கிடையிலான கூட்டிணைப்பை[ ஒன்றுபடுத்ததலை] இந்த சங்க காலத்தில் தான் ஆரம்பிக்க தொடங்கின . 

உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக தொல்காப்பியத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக "நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று" எனத் தொல்காப்பியர் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பை அன்றே கூறுயிருக்கிறார்.

"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்-(தொல். மரபியல் 1589)

ஆகவே பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை!

முதலில் இயற்கை என்பது நடுகல்லானது!

தொல்காப்பியர் காலம் போலவே சங்க காலத்தில் தமிழ் மக்களிடையே வேரூன்றி இருந்த வழிபாடு நடுகல் வணக்கமாகும்.புறப்பாடல் 265 ஊருக்குப் புறத்தே இருந்த திடலில் வேங்கை மலர்களை வெள்ளிய பனந்தோட்டோடு விரவித் தொடுத்து மாலையை அணிவித்து கோவலர் ஒரு வீரனுக்கு கல் நட்டதைக் கூறுகிறது.இக் கற்களில் வீரனின் பெயரும் பெருமிதமும் எழுதப்பட்டு அணிமயிற் பீலியும் மலர் மாலைகளும் சூட்டப்பட்டன என அகப்பாடல் ஒன்று (67) குறிக்கிறது. மறக்குடி பிறந்த மக்கள் விழுப்புண்பட்டு வீழ்ந்த வீரனது பெயரும் பீடும் எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுதலன்றி நெல் சொரிந்து வழிபடும் தெய்வங்கள் வேறு இல்லை என்று  புறம் 335 கூறுகிறது .

"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே."--புறநானூறு 335

அதாவது ,இந்த நடு கல்லுகளுக்கு சில சக்திகள் இருப்பதாக கருதிய சங்க கால மக்கள் அதை வழிபட்டனர் எனவும் ,இந்த நடு கல்லிற்கான   சடங்குமுறைக்குள்  [கரணவியலுக்குள்  ] உட்பட்ட  சில  பண்புகள்  [குணம்] பின்பு தென் இந்தியாவின் [திராவிடரின் ] லிங்க வழிபாட்டிற்குள்  நுழைய பட்டுள்ளதாகவும்   George L. Hart கூறியுள்ளார்

பின்னர் நடுகல் என்பது தெய்வம் ஆனது!அதாவது நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ/பெருந் தெய்வ வணக்கமாக வளர்ச்சி பெற்று இருக்கிறது.

இயற்கை வழிபாட்டின் படி, சேயோன் → முருகன் → குறிஞ்சிக் கடவுள்  ஆனான்!

சங்க காலத்து முருகனின் குணாதிசியங்களே வேறாகச் சொல்லப்படுகிறது. ஒரு சங்க காலப்பாடல்.அகநானூறு 22,தலைவனைப் பிரிந்து பசலையால் மெலிந்து நோயுற்றவளாக இருக்கிறாள் நாயகி. அவள் வீட்டில் இருப்பவர்கள் அவளுக்கு முருகன் பிடித்திருப்பதாகச் சொல்லி பூசாரியைக் கொண்டு குணம் செய்விக்கிறார்கள். ஆக முருகன் என்பவன் பெண்களோடு மையல் கொள்ளும் ஒரு தெய்வமாக இருந்து வந்திருக்கிறான்.

"மணம் கமழ் வியன் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரற் பொழுதில்
‘படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை
நெடுவேள் பேண தணிகுவள் இவள்’ என,
முது வாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,"--அகநானூறு 22

சிலப்பதிகாரத்தில் ஒரு படி மேலே  போய் முருகனை ஏளனம் , நையாண்டி செய்கிறாள் .மேலும் குறுந்தொகை 263 இல் ,தலைவியின் நண்பி ,தலைவியின் காதல் நோயை பிழையாக கருதி ,அவளுக்கு வெறியாட்டம் ஆட்டுகிறார்கள் என்கிறாள்.

"தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீஇயள் இவள் எனப் படுதல்
நோதக் கன்றே தோழி..."--குறுந்தொகை 263

இந்த பாடல்கள் தமிழர்  கலாச்சாரம் , பண்பாட்டு வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு  மிகவும்  முக்கியம் .ஏன் என்றால் ,இந்த பாடல்கள் முருகனுக்கு செய்யப்பட்ட திராவிடருக்கு மட்டுமே உரித்தான சடங்கு ,தியாகம் , பலிகளை கூறுகின்றன .மேலும் இந்த பாடல்கள் மதச்சார்பின்மைக் கோட்பாடு அல்லது உலகியல்வாதம் அந்த காலத்தில் நிலைவியதை  காட்டுகிறது .இப்படியான கருத்துள்ள பாடல்கள் பல இருப்பதால் ,இந்த ஒத்த பாடல்கள் பிரபலமாக  , புகழ் பெற்றதாக இருந்திருக்க வேண்டும். இப்படியான பிரபலமான கடவுளை   ஏளனம் , நையாண்டி செய்யும் கருத்துடைய  பாடல்கள் ,அந்த காலத்தில் ,சமயச் சார்பற்ற , உலகியல் சார்ந்த சமுகம் இருந்ததாக ஊகிக்க முடிகிறது .இது பக்தி காலத்தில்[ கி.பி 700-இலிருந்து கி.பி 1200-வரையுள்ளகாலம்] கேள்விகள் ஒன்றும் இல்லாமல் கடவுளை நம்பியதற்கு முரணாகும் .அதாவது சங்க காலத்தில்[ கி.மு 700-இலிருந்து கி.பி 300-வரையுள்ளகாலம்] மக்கள் சடங்குகளுக்கு பின்னால் இருக்கும்  தருக்கங்களுக்கு  கேள்வி கேட்டார்கள்  என்பதை அறிய முடிகிறது

தெய்வம் வந்து வெறியாடிய வேலன் நாளடைவில் கைவேல் தாங்கிய முருகனாக வழிபடப்பட்டான்.தொல்காப்பியர் காலத்து 'சேயோன் மேய மைவரை உலக' குறிஞ்சி நிலத் தெய்வம் சங்க காலத்தில் முருகக் கடவுளாகத் தோற்றம் பெற்றார். இந்தப் பழமை காரணமாகவே முருகன் தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்டுகிறார்?

'வெறிஅறி சிறப்பின் வௌ;வாய் வேலன்
வெறியாட்டு அயந்த காந்தளும். (தொ.பொ.புறத்திணை 5 )

கொல்லும் தன்மையுள்ள வேலைத் தாங்கியிருப்பவன் வேலன். அவன் தெய்வத்தின் கோபத்தை அறிந்து அதைத் திருப்தி செய்யும் சிறப்புள்ளவன். அவன் காந்தளின் மலர் மாலையை அணிந்து உருக்கொண்டு ஆடுவான். இந்த ஆட்டம் காந்தள் என அழைக்கப்பட்டது.

தமிழ் நாட்டின் பல இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பழைய காலத்து மட்பாண்டப்  பொருட்களில்  உள்ள வெட் டெழுத்துக்களை  [எழுத்து வடிவங்களை]  ஆய்வுகள்  செய்த [படித்த] அறிஞர்  ஐராவதம் மகாதேவன் ,இவை  300 BC  பழைமை வாய்ந்தது என்றும் , அது  விசுவாசமுள்ளவரையும்  , பக்தியுள்ளவரையும்  காப்பாற்ற , கெட்ட அரக்கனை கொல்லக்கூடிய  ஒரு துணிச்சலான  வீர மிக்கப் போர் வீரனை குறிக்கின்றது என்கிறார் .

திருமால்/ முருகன் = இவர்கள் நிலத்தின் தலைமக்கள்.இவர்கள் பூர்வகுடி-இயற்கை வடிவினர்; பலமுகம்-மாயாஜால வடிவினர் அல்லர்.அது போல தொல்காப்பியர் குறிப்பிடும் மற்ற  நிலத் தெய்வங்களும் [ வேந்தன், வருணன், கொற்றவை ]அந்த நிலங்களுக்குரிய வீரர் வீராங்கனை ஆக இருந்திருக்கலாம்?.

இன்று இறந்தவர்களுக்கு அவர்கள் உயிரோடு இருந்தபோது விரும்பி உண்ட உணவை ஏழாம் நாள் அன்று காய்ச்சிப் படைப்பதும், ஊர்க் கோயில்களில் பூசாரிகள் உருவந்து ஆடி அருள்வாக்குச் சொல்வதும் சங்க கால நடுகல் வணக்கம் மற்றும் வெறியாட்டின் எச்சங்களே..

ஆரியக் கலப்புக்குப் பின்னரோ......

* முருகன்→ ஸ்கந்தன்/சுப்பிரமணியன் ஆனான்!
* திருமால்→ விஷ்ணு ஆனான்!
* சிவன்→ ருத்திரன் ஆனான்!
* கொற்றவை→பார்வதி/துர்க்கை ஆனால்!

உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி
விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள் சமஸ்கிருதக்காரர்கள்.

தமிழர்கள் வணங்கிய ஒரு மலைக்கடவுளான மற்றும் போர்,காதலில் சிறந்து விளங்கிய கடவுளான முருகன் என்றால் அழகன்.இளைஞன்.முருகு--அழகு, இளமை.[முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)]

வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவுளான “ஸ்கந்தா’/சுப்ரமணி என்றால்?

ஸ்கந்தன் என்றால்?ஆணுடைய உயிர்த்துளிகள் பெண்ணுடைய பாகத்தில் சேராமல் வழிதவறி விழுந்தால்... அதன் பெயர்தான் ஸ்கந்தன்.

சுப்ரமணியர் என்றால்?--- உயர்ந்த பிராமணன்

வடமொழிக் கதையை தான் இங்கே வாசித்துக்காட்ட வேண்டியிருக்கிறது.

"பார்வதியின் மீது மோகனம் பொங்குகிறார் பரமசிவன். பார்வதியை நெருங்குகிறார்.இப்போது வேண்டாம். நான் தயாரில்லை... என்கிறார்.இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல்  தான் மட்டுமே தயாராகி விட்டார் சிவன்.ஆனால்... பார்வதியோ... சரியாக அந்த கணத்தில் தன் உடலை சற்று விலக்கிக் கொள்ள... பரமசிவனின் உயிர்த்துளிகள் கங்கைக் கரையோரம் படர்ந்திருந்த ஒரு நாணல் காட்டுக்குள் சென்று தேங்க...அப்படியே அது குழந்தையாக அவதரித்தது."

பல இடத்தில் சிவனது வீரியம்[சக்தி/உயிர்மூலம்] ஸ்கலிதமான[வெளியேற்றப்பட்ட] தன் பலனாக அக்குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்று பெயர்.இவ்வாறு வால்மீகி இராமாயணத்தில் "சிவன் பார்வதியை புணர்ந்தது" என்று தலைப்பெயர் கொண்ட 36ஆம் சருக்கத்திலும், "குமாரசாமி உற்பத்தி" என்கின்ற 37ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.

அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன.

உலக வரலாறு நெடுகிலும், ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் தந்திரம் அது.

தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் உணர்வதில்லை.

தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது.

இன்றைக்கும், பிராமணர்களின் வர்ண சாஸ்திரத்தால் தாழ்த்தப்பட்ட சாதியினர்  அல்லது கிராமபுர மக்கள் மத்தியில்  "முருகன்", "வள்ளி" போன்ற பெயர்கள் பிரபலமாக உள்ளன. உயர் சாதியினர் அல்லது  சம்ஸ்கிருத மோகம் கொண்ட   மக்கள் மத்தியில்  , அதற்கு மாறாக, "ஸ்கந்தன்", "சுப்பிரமணியன்" என்று சமஸ்கிருதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர்.

நமது காலத்தில் உள்ள ஆங்கில மோகம் போன்று, பல நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள், சம்ஸ்கிருத மோகம் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை.

முருகனுக்கு தமிழில் வள்ளி என்ற மனைவி இருந்தார். ஆரியத்தோடு சேர்ந்து ஸ்கந்தன் இந்திரனின் மகளான தெய்வானையும் மனைவியாகச் சேர்ந்து கொண்டார். இதன் மூலமே, தேவேந்திரனுடன் சொந்தமாகின்றார்!

இதன் பின்னராக சாதாரண மக்களுக்குப் புரியும்படியாக அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே  உறவுமுறை உருவாக்கப்பட்டன. முருகனும், பிள்யைாரும் சிவனுக்குக் குழந்தைகள். திருமால் மைத்துனர் .......

சுருக்கம்:சங்க கால மக்களின் சமய நம்பிக்கை:Summary:Major Religious Beliefs of the sangam people:

கி.மு.எட்டாம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவிலே தமிழ் மக்கள் சிறுசிறு கூட்டங்களாகப் பலதரப்பட்ட நாகரிகநிலையில் வாழத் தொடங்கிவிட்டனர் என நாம் கொள்ளலாம். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் மெல்ல மெல்ல ஆரிய மக்களுடைய தொடர்பு தமிழ் மக்களுக்கு ஏற்படலாயிற்று.சங்க கால பொதுமக்கள் கொற்றவை, முருகன் முதலிய பழந்தெய்வங்களையே வணங்கிவந்தனர்.சங்க இலக்கியங்களிலே ஆரியத் தெய்வங்கள் ஆங்காங்கு குறிக்கப்படுவது உண்மையே. அவை அரசர், வணிகர், சமயக்கணக்கர் முதலிய உயர் வகுப்பினரால் ஆங்காங்கு வணங்கப்பட்டிருக்கலாம்.

கொற்றவை சங்க கால பழந்தமிழ் மக்களின் வெற்றித் தெய்வம். சிந்துவெளிப் பெண் தெய்வத்திற்கும் கொற்றவைக்குமுள்ள உண்மையான தொடர்பினை இன்றைய ஆராய்ச்சி நிலையில் தெளிவாகக் கூறுவதற்கில்லை. எனினும் தொடர்பு நெருங்கியதாக இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு.பழந்தமிழரின் கொற்றவை சைவசித்தாந்தத்திலும், சக்தியாக, சிவனுடைய சக்தியாக உருமாறியது என்று கொள்ளலாம்,

பல தமிழ் இலக்கியங்கள்  முருகனை தாய்வழி உரிமை பெறுத் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன.  "வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி"என்றும் பாடுகின்றது.சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவை சிறுவன் என்று முருகன் குறிப்பிடப்படும்பொழுது அங்கு தாய்வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம்.

தெய்வங்களுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை அளவுகோலாகக் கொண்டு பார்க்கும்போது சங்க இலக்கியங்கள் காட்டும் அக்காலப் பகுதியிலே சிவ வழிபாடு மக்கள் மத்தியிலே "அவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை"என்னும் முடிவிற்கு குடிகளாகவும் (Tribes and Clans) மக்கள் வாழ்ந்த புராதனக் கூட்டுமுறை வாழ்க்கையிலே கொற்றவை, வேலன், வருணன் முதலிய தெய்வங்களே சிறப்புடையனவாயிருந்தன.மருத நிலத் தெய்வம் இந்திரன்  உழவர்/வேளாளர்களால் வழிபடப்பட்டான் .வீரர்,வீராங்கனை வழிபாடும் மூதாதையர்(சிரார்த்தம்) வழிபாடும் அங்கு இருந்தது .மரக் கண்டுகள் என அழைக்கப்படும் நட்ட மரத் துண்டும் அங்கு கடவுள் உறைகிறார் என்ற நம்பிக்கையில்[மரத்துக் கடவுள்] வழிபாடாக இருந்துள்ளது . 

புத்த சமயமும் சமண சமயமும் ,சங்க காலத்தில் ஒன்றாக செழித்தோங்கின எனினும் அவை பிராமணர்களின் வேத சமயத்தின் கீழ்நிலைப்பட்டதாகவே இருந்தது .சங்க கால தமிழர்கள் ஆன்மீக சார்ந்த,தத்துவ ஞானம் சார்ந்த குறிப்பிட்ட உண்மைகளை அறிந்தது இருந்தார்கள் .உதாரணமாக உயர் உடம்பு பற்றிய கோட்பாடுகள் ,  ஊழ் , விதிகளின்  முதன்மை[மேம்பட்ட நிலை] , ஒரு  புனிதமான  நோக்கம், காரணத்திற்காக மரணிப்பது ,...போன்றவைகளை.

சங்க காலத்தில் ஆலயம் -நகர் ,கோயில் ,கோட்டம், புரை அல்லது  தேவாலயம் என அழைக்கப்பட்டது .
கோவில் என்பது அரசன் வீடு என பொருள் படும்  – கோ + இல்-. ‘வேறு பட்ட வினை ஓவத்து வெண்கோயில்’ இதன் கருத்து பல நிற பூச்சு ஓவியங்களை உடைய வெள்ளை அரச மாளிகை -பட்டினபலை 50  .ஆகவே சங்க காலத்தில் இது அரச மாளிகைக்கான சொல் ஆகும் .அரசனுக்கான இன்னும் ஒரு சொல்   இறைவன். ஆகும் . ‘நல் இறைவன் பொருள் காக்கும் தொல் இசைத் தொழில் மாக்கள்’ –பட்டினபலை 120, அது மட்டும் அல்ல "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;"என்று புலவர்  மோசிகீரனார் ,புறநானூறு 186 இல் கூறுகிறார் .மேலும் தொல்காப்பியர்  மூ வேந்தரை "வாண்புகழ் மூவர்" என அழைக்கிறார் .இவை எல்லாம் ,பிராமணர் வர்ண அமைப்பை புகுத்த முன்பு ,அதாவது அரசனையும் குருவையும் பிரிக்க முன்பு ,பண்டைய தமிழர் அரசனையே கடவுளாக அல்லது கடவுளின் தூதுவராக வழி பட்டனர் என அறிய முடிகிறது .

மூன்றாவதும் கடைசியுமான  சங்க காலம் [700BC to 300AD],ஆயிரம் வருடங்கள் பரவி ,எமக்கும் தமிழரின் சரித்திரத்தையும் அவர்கள் வழிபட்ட தெய்வங்களையும் காட்டுகிறது .தொல்காப்பியம் தொடக்கம் பரிபாடல் வரை நீண்டு செல்கிறது .இறுதி சங்க காலத்தில் ஆரியருடைய தெய்வங்களும் வரத் தொடங்கி உள்ளன.

இந்த காலத்தில் தான் இரண்டு தெய்வங்களும் ஒன்றுபட தொடங்கின .இதன் மூலம் அவை தமிழ் ,சமஸ்கிரத பெயர்களை பெற்றன .முருகன் -சுப்பிரமணிய ,திருமால் -விஸ்ணு ,சிவா -ருத்திர ....இப்படி .உதாரணமாக ,முருகனை எடுத்துக் கொண்டால் ,அவருக்கு தமிழிலேயே முதல் வழிபடபட்டது .பின் அவர்  பழம் இலக்கியத்தையும் [பழங்கதை ,மரபுகதை].புதிதாக வந்த புராணக்கதைளையும் சுமந்து சுப்பிரமணியாக மாறினார்...

தொடரும்... பகுதி-2 பார்க்கவும்...
யாழறிவன்... Yalarivan Jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக