திங்கள், 20 அக்டோபர், 2014

தமிழனும் உலக வரலாறும்

தமிழனும் உலக வரலாறும்...

பகுதி-10

பிள்ளை ஆர் யார் -
பிள்ளையார்...!!!

சிவன் பார்வதியின் மூத்தப் பிள்ளை. இறைவனின் பிள்ளை ஆன இவர் தமிழால் மரியாதைக்குரிய 'ஆர்' விகுதிப் பெற்று பிள்ளையார் ஆகின்றார்.

அதாவது தமிழில் எவ்வாறு 'ன்' என்பது ஆணைக் குறிக்கும் விகுதியாக இருக்கின்றதோ அதே போல் 'ஆர்' விகுதி என்பது ஒருவரை மரியாதையாக குறிக்க பயன்படுகின்றது...

தந்தை + ஆர் - தந்தையார்.
தாய் + ஆர் - தாயார்.

அதேப்போல் இறைவனின் பிள்ளை என்ற சிறப்பு காரணத்தால் அந்தப் பிள்ளைக்கு 'ஆர்' விகுதி வழங்கப்பட்டு அவர் பிள்ளையார் ஆகின்றார்.

பிள்ளை + ஆர் - பிள்ளையார்.

சரி இலக்கணம் போதும். இனி நாம் விநாயகரின் கதைக்கு வருவோம்.

புராணங்களின்படி விநாயகர் பார்வதியால் அவர் உடலில் இருந்த அழுக்கினைக் கொண்டு மனித உருவில் உருவாக்கப்படுகின்றார். பின்னர் ஒரு கட்டத்தில் சிவனை இவர் பார்வதியின் பொருட்டு எதிர்க்க வேண்டி வர சிவனால் தலை வெட்டப்பட்டு வீழ்கின்றார். அதனைக் கண்டு வருந்திய பார்வதி கடுஞ் சினம் கொண்டு தேவர்களுக்கு எதிராக எழ, பார்வதியின் சினத்தினை நீக்க ஒரு யானையின் தலையை விநாயகரின் உடலில் பொருத்தி அவருக்கு மீண்டும் சிவன் உயிர் தருகின்றார். மேலும் இனி என்னை நோக்கி வருபவர் யாராக இருந்தாலும் உன்னைக் கண்ட பின் தான் என்னைக் காண முடியும் என்ற வரமும் விநாயகருக்கு சிவன் வழங்குவதாக புராணம் நீள்கின்றது.நிற்க.

மேலே உள்ள கதையின் படி தனது தந்தையின் கையாலேயே மரணமுற்று பின் மீண்டும் தன் தந்தையாலேயே உயிர் பெறுகின்றார் பிள்ளையார். அதாவது அவரின் மரணமும் உயிர்த்தெழுதலும் அவரின் தந்தையினாலேயே நிகழ்கின்றது. இப்பொழுது நாம் இதைப் போன்ற கதைகள் அதாவது ஒரு கடவுள் இறந்து மீண்டும் உயிர்தெழுந்த கதை உலகில் வேறு எங்காவாது இருக்கின்றதா என்று நோக்கினால், ஆம் இருக்கின்றது என்பதே பதிலாக வருகின்றது.

அந்தக் கதையின் நாயகர் - இயேசு கிருத்து. இவரும் இவரின் தந்தையின் ஆணைப்படியே பலியாகி பின் மீண்டும் தன் தந்தையின் அருளாலேயே உயிர் பெற்று எழுவதாக இவரின் கதை நீள்கின்றது.

அதாவது இரண்டு பேருமே கடவுளின் பிள்ளைகள். இருவருமே தங்களது தந்தையால் மரணத்தை தழுவுகிறார்கள். பின்னர் மீண்டும் தங்கள் தந்தையின் அருளாலே உயிர்த்து எழுகின்றார்கள்.

ம்ம்ம்...ஆச்சர்யமான ஒற்றுமை தான். ஆனால் இருவரும் ஒருவர் தான் என்று நாம் கருத இந்த ஒரு ஒற்றுமை நிச்சயம் பற்றாது. எனவே வேறு ஏதாவது ஆதாரங்கள்...ஒற்றுமைகள் இருக்கின்றனவா என்று நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. இந்நிலையில் தான் அவ்வை பாட்டியார் நம்முடைய துணைக்கு வருகின்றார் அவரின் விநாயகர் அகவல் நூலினை ஏந்திக் கொண்டு.

இதோ அவரின் நூலில் உள்ள ஒரு பாடல்.

"குருவடி வாகிக் குவலயந் தன்னில்
  திருவடி வைத்துத் திறமிது பொருளென
  வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
  கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே"

இந்தப் பாடல் மூலம் அவ்வையார் விநாயகரை 'குருவாக இந்த உலகில் பிறந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களின் பாவத்தினை கோடு ஆயுதத்தால் நீக்கினார்' என்று கூறுகின்றார். ஆச்சர்யமாக இதுவும் இயேசு கிருத்துவின் கதையோடு பொருந்துகின்றது.

இயேசுவின் கதைப்படி அவர் மக்களின் பாவத்தினைப் போக்க இவ்வுலகில் பிறந்து பின்னர் அவர்களுக்காக உயிர் துறந்து மக்களின் பாவத்தினை களைந்தார். மேலே அவ்வையாரும் இதைப் போன்ற ஒரு விடயத்தையே கூறுகின்றார். அதுவும் கோடு ஆயுதத்தின் மூலம் மக்களின் பாவத்தினை போக்கினார் என்றும் கூறி இருக்கின்றார். அது என்ன கோடு ஆயுதம்... ஆய்வாளர்களின் கூற்றினைக் காண்போம்.

சிலுவையில் அறைந்து மக்களைக் கொள்வது என்பது ரோமர்களின் பழக்கம். இப்பழக்கம் இந்தியாவில் கிடையாது.
சிலுவைகளில் மக்களைப் பலியிடும் பழக்கம் இந்தியாவில் என்றுமே இருந்தது கிடையாது. எனவே சிலுவையைப் பற்றி இங்கே மக்கள் அதிகம் அறிந்து இருக்க வாய்ப்பு கிடையாது. எனவே தான் சிலுவையை (அது கோடுகளின் வடிவமாகத் தானே இருக்கின்றது) கோடு ஆயுதம் என்றே அவ்வை குறித்து இருக்கின்றார் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே இயேசு மக்களின் பாவம் நீக்க சிலுவையில் பலியானதையே விநாயகர் அகவலில் அவ்வையார் அவ்வாறு விநாயகரை வைத்து குறிப்பிட்டு இருக்கின்றார் என்று நாம் கருத முடிகின்றது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

ம்ம்ம்... இரண்டு கதைகளும் ஒத்து தான் போகின்றன. ஆனால் இதோடு நாம் நின்று விடாத படி மேலும் சில விடயங்களும் இருக்கத் தான் செய்கின்றன.

உதாரணத்துக்கு விநாயகரின் புராணக் கதையிலே அவர் பார்வதியின் உடலில் இருக்கும் அழுக்கினை வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது. உலகினையே படைத்த அன்னையானவள் அவளின் அன்புப் புதல்வனை அவள் உடலின் அழுக்கினைக் கொண்டா உருவாக்குவாள்? வேறு வழியே பார்வதி தேவிக்கு இருந்து இருக்காதா என்ன என்ற கேள்வி இயல்பாக எழும் தானே. ஆச்சர்யமாக இந்தக் கேள்விக்கு பதில் விவிலியத்தில் இருந்து வருகின்றது.

"நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்." - II கொரியந்தியர் (5 : 21)

மேலே உள்ள வரியின்படி இறைவன் மனிதர்கள் யாவரும் நேர்மையுள்ளவர்களாக மாற ஒரு பாவமும் அறியாத அவரின் பிள்ளையை மனிதர்களுக்காக பாவம் ஆக்கினார் என்று இருக்கின்றது. அதாவது மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் அவர்களுக்காக இறைவனின் மகன் சுமப்பதாக விவிலியம் விவரிக்கின்றது. இதையே தான் நம்முடைய புராணக் கதையும் மறைமுகமாக பிள்ளையார் பார்வதியால் அழுக்கினை வைத்து உருவாக்கப்பட்டதாக கூறுகின்றது.

மேலும் விவிலியத்தில் 'என் வழியாகவே இறைவனை அடையலாம்' என்று இயேசு கூறுவதாக வருகின்றது. இங்கு நம் புராணங்களிலும் விநாயகரை வழிப்பட்ட பின்பு தான் தன்னிடம் வர முடியும் என்று சிவன் கூறியதாக இருக்கின்றது.

இவ்வளவு ஒற்றுமைகள் எதேச்சையாக தோன்றி இருக்குமா? அல்லது உண்மையிலையே நம்முடைய புராணக் கதைகளுக்கு உள் அர்த்தங்கள் வேறு இருக்கின்றனவா... நாம் சிந்திக்கத் தான் வேண்டி இருக்கின்றது.

சரி...விநாயகர் தான் இயேசு என்றால் பின்னர் எதற்காக யானைத் தலையுடன் அவர் காட்சி அளிக்கின்றார் என்ற கேள்வியும் இங்கே எழும்பலாம். இந்தக் கேள்விக்கான விடைக்கும் நாம் மீண்டும் இயேசுவை காண வேண்டி இருக்கின்றது.

இயேசு உயிர் துறக்கும் வரை இருந்த நிலை வேறு. சாதாரண மனிதனாக அவர் இருந்தார்.
உயிர் பெற்று எழுந்தப் பின்பு இருந்த நிலை வேறு. தெய்வத் தன்மையுடன் அவர் திகழ்கின்றார். இந்த இரண்டுத் தன்மைகளுக்கும் வேற்றுமைகள் உண்டு.

அந்த வேற்றுமைகளை வெளிப்படுத்தவே,

உயிருடன் இருந்த விநாயகர் - மனித வடிவாகவும்
இறந்து உயிர்தெழுந்த பின் - யானைத் தலையுடனும் இருக்கின்றார்.

அதாவது இறக்கும் முன் அவர் இருந்த நிலை வேறு...இறந்து மீண்டும் உயிர் பெற்ற பின்பு அவர் இருந்த நிலை வேறு. இதனையே புராணக் கதைகள் மூலம் நம் முன்னோர்கள் விலகிச் சென்று உள்ளனர். ஆனால் காலப்போக்கில் அந்தப் புராணக் கதைகளுக்கு வேறு அர்த்தங்கள் கற்ப்பிக்கப்பட்டு அவை நிலை தாழ்த்தப்பட்டன என்பது சோகமான வரலாறு.

சரி அந்த கதை இப்பொழுது நமக்குத் தேவை இல்லை. இப்பொழுது நாம் இயேசுவே விநாயகராக நம்முடைய மண்ணில் குறிக்கப்பட்டு இருக்கலாம் என்று பார்த்தோம். இறைவனின் ஒரு பிள்ளையை பார்த்தாயிற்று. இன்னும் மூன்று பேர் மீதம் உள்ளனர். காண்போம்.
முருகா... குமரா ... வேலவா !!!

பி.கு:

விநாயகரைக் குறித்த தகவல்கள் எந்த சங்க இலக்கியங்களிலும் சரி இயேசுவுக்கு முந்தைய கால நூல்களிலும் சரி கிடைக்கப் படவில்லை என்பதே உண்மையான நிலையாக இருக்கின்றது. மேலும் இதுவரை கி.பி 5 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் விநாயகரின் சிலைகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது...

கபாலீசுவரர் கோவில்...!!!

சைவ சமயத்தின் முதல் கோவில் என்ற பெருமையுடன் இன்று மயிலையில் நின்று கொண்டு இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கோவில். ஆனால் நாம் முந்தையப் பதிவுகளில் பார்த்தபடி இக்கோவில் ஆரம்பத்தில் இருந்தே மயிலையில் இருந்து இருக்கவில்லை மாறாக இன்றைய சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் தான் இக்கோவில் இருந்தது என்றும் கி.பி 16 நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த போர்துகேசியர்களால் இந்த கோவில் இடிக்கப்பட்டு பின்னர் இன்று இருக்கும்  மயிலையில் மீண்டும் கட்டப்பட்டு உள்ளது என்று அறிகின்றோம்.

இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது.

௧) ஏன் போர்துகீசியர்கள் இக்கோவிலை இடிக்க வேண்டும். அவர்களுக்கு தேவாலயம் கட்டுவதற்கு இடம் வேண்டும் என்றால் வேறு இடமா கிடைக்கவில்லை?

இக்கேள்விக்கு விடையாய் நமக்கு வரலாறு தரும் பதில் - தோமாவின் கல்லறை. ஆம். தோமாவின் கல்லறையின் மேல் கபாலீசுவரர் கோவில் கோவில் கட்டப்பட்டு இருந்தமையால், ஒரு கிருத்துவ துறவியின் கல்லறையின் மேலே வேறு சமயத்தினரின் கோவில் இருப்பதா என்று எண்ணியே அவர்கள் இக்கோவிலை இடித்து வேறு இடத்தில் கட்டுகின்றனர். பதிலாக அந்த கிருத்துவ துறவியினை சிறப்பிக்க ஒரு தேவாலயத்தினையும் கட்டுகின்றனர். அது தான் இன்றைய சாந்தோம் தேவாலயம்.

சரி...இப்பொழுது நம் முன் இருக்கும் விடயங்களை சற்று உற்றுக் கவனிக்க வேண்டியிருக்கின்றது.

கபாலீசுவரர் கோவில் - சைவ சமயத்தின் முதல் கோவில். இதற்கு முந்தைய கோவில்கள் என்று எதுவும் கிடையாது.
தோமா - இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவர். கிருத்துவர்.

அப்படியிருக்க தோமாவை சிறப்பிக்க அவரின் கல்லறையின் மேல் முதல் சைவ சமயக் கோவிலை எழுப்பக் காரணம் என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழும். அதற்கு விடையாய் நாம் முந்தையப் பதிவுகளில் தோமா கிருத்துவின் கருத்துக்களை இந்தியா கொண்டு வந்தார் என்றும் அக்கருத்துக்களில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றும் அதனால் அவரை சிறப்பிக்கவே அக்கோவில் கட்டப்பட்டது என்பதை கண்டோம். ஆனால் அக்கருத்தினை நாம் சான்றுகள் இன்றி நிரூபிக்க முடியாது. காரணம் வேதங்களில் இருந்தே சைவமும் வைணவமும் தோன்றின என்றக் கருத்துக்கள் இன்று மக்களிடையே பரவி இருக்கின்றது. எனவே இப்பொழுது நாம் நம்முடைய கருத்துக்களுக்கு சான்றுகள் இருக்கின்றனவா என்றுக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் ஒரு கருத்தினை தெளிவாக நாம் கண்டுக் கொள்வது நல்லது.

வேதங்களில் கோவில் வழிபாட்டு முறை பற்றி எந்தொரு தகவலும் இல்லை. கோவில் வழிபாட்டு முறை வேத முறை அல்ல.(வேதங்களைப் பற்றி நாம் மற்றொரு பதிவில் விரிவாக காண்போம்).

சரி. இப்பொழுது நாம் சான்றுகளைத் தேடுவோம். அதற்கு நாம் முதலில் இயேசுவினைக் காண வேண்டி இருக்கின்றது.

இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அவர் எங்கு வைத்து சிலுவையில் அறையப்பட்டார் என்பதே. வரலாற்றின் படி இயேசு கல்வாரி அல்லது கல்கொதா என்ற மலையில் வைத்தே கொல்லப்படுகின்றார். இங்கே நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு விடயம் என்னவென்றால் கல்வாரி அல்லது கல்கொதா என்றால் 'கபாலத்தின் இடம்' அல்லது 'கபாலம் இருக்கும் இடம்' என்றே பொருள் தருவது தான். மேலும் விவிலியத்தின் படியும் இந்தச் செய்தியினை நாம் அறிகின்றோம்.

" கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது," - மத்தேயு 27 :33
"கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்." - லூக்கா 23 : 33

எனவே கபாலம் போன்றுக் காணப்படும் மலையில் இயேசு கிருத்து உயிர் துறந்தார் என்று நாம் அறிகின்றோம். ஒரு வேளை இந்த செய்தியின் மூலமாகவே முதல் சைவ சமயத்தின் கோவிலுக்கு கபாலீசுவரர் கோவில் என்று பெயர் வந்து இருக்கலாமா?

ம்ம்ம்... செல்லாது செல்லாது!!! கபாலம் அப்படின்னு பெயர் ஒற்றுமை மட்டும் இருந்தால் போதுமா...அத வச்சி என்னனாலும் சொல்லலாமா என்று சொல்லுகின்றீர்களா. சரி தான். மேலும் கபாலம் என்ற சொல் பொருந்தி வந்தாலும். ஈசுவரன் என்ற பெயர் இடிக்கின்றதே. இக்கோவில் இயேசுவினைக் குறிக்க கட்டப்பட்ட ஒன்று என்றால் ஈசுவரனுக்கும் இயேசுவுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. நல்ல வேளை நம்முடைய இந்த கேள்விக்கு நீண்ட காலம் பதிலினைத் தேட வைக்காது விடையினை அதோ நம்முடைய மகாகவி பாரதியார் அவர்களே கொண்டு வந்துக் கொண்டு இருக்கின்றார்.

"ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரிய மக்தலேனா
நேரிலே இந்த செய்தியைக் கண்டாள்;
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;" - என்று இயேசுவினைப் பற்றிய தனது கவிதையில் குறிப்பிடுகின்றார்.

அதாவது இயேசுவினைக் குறிக்க ஈசன் என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கின்றார். ஏன் பாரதி அவ்வாறு குறிப்பிடுகின்றார் என்று கண்டால், எபிரேயத்தில் 'ஜோசுவா' என்று இருக்கும் பெயர் ஆங்கிலத்தில் 'ஜீசஸ்' என்றும் அரபியில் 'ஈசா' என்றும் ஒலித் திரிபு பெற்று இறுதியில் தமிழில் ஈசன் என்றும் இயேசு என்றும் ஒழி மாற்றம் பெற்று வந்து இருக்கின்றது என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எபிரேயம் - ஜோசுவா
ஆங்கிலம் - ஜீசஸ்
அரபி - ஈசா
தமிழ் - ஈசன்/இயேசு

அவர்கள் கூற்றுக்கு உறுதுணையாய் இருப்பது போல ஈசன் என்ற பெயர் கிருத்துவுக்கு முந்தைய காலத்தில் எங்கும் பயன்பட்டு இருக்கவில்லை.

எனவே ஈசன் என்ற சொல் இயேசுவினைக் குறிக்கும் என்றால் கபால மலையில் உயிர் துறந்து பின்னர் மக்களுக்காக உயிர்தெழுந்த வந்த இயேசுவினையும் (ஈசன்) சிறப்பித்து 'கபாலீசுவரன் கோவில்' கட்டப்பட்டது என்றும் நாம் கருத முடிகின்றது.

அட ஒரு பக்கத்து கதையை மட்டும் கேட்டு தீர்ப்பு எழுதுனா எப்படிங்க...இந்து சமயத்தின் கருத்தையும் கேளுங்கள்...அதையும் பார்த்து தானே நாம் முடிவு செய்ய முடியும் என்று கூறுகின்றீர்களா... சரி தான். இப்பொழுது இந்து சமயம் கூறும் கதையினைக் காண்போம்.

புராணங்களின் படி சிவனும் பார்வதியும் ஒன்றாய் இருந்த பொழுது அதை பிரமன் கண்டுக்கொண்டே இருந்தாராம். அதைக் கண்டு சிவன் சினமுற்று பிரமனின் ஒரு தலையைக் கொய்து விட்டாராம். அதற்கு பரிகாரமாக பிரமன் இவ்விடத்தில் சிவலிங்கத்தை வைத்து பூசைகள் செய்து சிவனின் கோபத்தை தனித்தாராம். இது தான் புராணத்து கதை. இன்னும் பல கதைகள் இருக்கின்றன. ஆனால் பிரமனின் கபாலத்தினை ஈசுவரன் கொய்ததால் கபாலீசுவரன் கோவில் என்று இக்கோவில் பெயர் பெற்றது என்பதே முக்கியமான புராணக் கதை. இப்பொழுது இந்தக் கதையினை ஆராய்வோம்.

சென்ற பதிவுகளில் பிரமன் பெருமாளின் மகன் என்பதனைக் கண்டோம். மேலும் சைவ வைணவத் தத்துவங்களின் படி சிவனும் விஷ்ணுவும் ஒன்று தான்.

நில்லுங்கள் நில்லுங்கள்...சிவனும் விஷ்ணுவும் ஒன்றா... என்று கேட்பவர்களுக்கு இதோ முதல் ஆழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வாரின் பாடல்.

"தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்,
சூழ் அரவும் பொன் நாணும்தோன்றுமால் --சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து."

இப்பாடல் மூலம் சிவனும் விஷ்ணுவும் ஒன்று தான் என்பது தெளிவாகின்றது. எனவே இந்நிலையில் பிரமன் சிவனுக்கும் மகனாகின்றார். எனவே புராணக் கதையின் படி தன் தந்தை தன் தாயுடன் இருப்பதை பிரமன் காண்பதாக வருகின்றது (இப்படி எல்லாம் இருந்தா பெரியார் என்ன சின்ன குழந்தை கூட பிரமனை கல் எடுத்து அடிக்கும்...அடிக்கணும்). இப்பொழுது இது கடவுளுக்கு பொருந்திய செயலா என்று நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. நிச்சயம் இல்லை. இக்கதை இறைவனுக்கு சிறப்பினை அளிப்பதாக இல்லை. ஆனால் இக்கதை முதலில் இவ்வாறு இருக்க வில்லை என்றும் பின்னரே மாற்றப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவர்களின் கருத்துப்படி தந்தை இறைவன் தன்னுடைய மகனின் சாவுக்கு காரணமாக இருக்கின்றார். ஆனால் மகனோ இறந்தாலும் மீண்டும் உயிர்தெழுந்து வருகின்றார். இதை உணர்த்தவே பிரமன் சிவன் அவர்களை வைத்து இந்தக் கதை கூறப்பட்டதாகவும். பின்னர் கதைகள் மாற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதை சற்று விரிவாக பார்ப்போம்.

பிரமன் - சிவனின் பிள்ளை. இவர் படைப்புக் கடவுளாக கூறப்பட்டு உள்ளார். உயிர்களின் படைப்புக்கு இவரே காரணம். ஆனால் அதிசயத்தக்க விதத்தில் இவ்விடயம் கிருத்துவுடனும் ஒத்து போகின்றது.

விவிலியத்தில் படைப்புக்கு காரணமாக இயேசுவே கூறப்பட்டு உள்ளார்.

"சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" - யோவான் 1 : 3

ஆய்வாளர்களின் கருத்துப்படி இயேசுவினாலையே படைப்புகள் தோன்றின என்பதை உணர்த்தவே பிரமன் என்ற உருவகம் தோற்றுவிக்கப்பட்டது. சரி இப்பொழுது மீண்டும் கதைக்கு வருவோம்.

சிவன் தன் மகனாகிய பிரமனின் தலையை கொய்கின்றார். பொதுவாக ஒருவரின் தலையைக் கொய்தால் அவர் மரணம் அடைவார். ஆனால் இங்கே பிரமன் மரணம் அடையவில்லை. காரணம் அவருக்கு வேறு தலைகள் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. எனவே அவர் உயிர் பிழைத்து இருக்கின்றார்.

எனவே சிவனால் மரணமடைய வேண்டிய பிரமன் மரணம் அடைய வேண்டிய நிலை வந்தும் உயிர் கொண்டு இருக்கின்றான். அதாவது சாவை வென்று இருக்கின்றான். இயேசுவைப் போல....இயேசுவாக!!! இந்தக் கதை தான் பிற்காலத்தில் பலவாறாக திரிபு படுத்தப்பட்டு உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

எனவே மரணம் அடைய வேண்டிய கடவுள் தன் தந்தையின் அருளால் மரணத்தை வென்று உயிர்தெழுந்த விடயத்தை சிறப்பிக்கவே கபாலீசுவரர் கோவில் கட்டப்பட்டது என்ற கருத்தினையே இந்துக் புராணமும் கூறுகின்றதை நாம் அறிகின்றோம். சுருக்கமாக கூற வேண்டின் இயேசுவின் கதையையே பிரமனை வைத்து கூறப்பட்டு இருக்கும் புராணமும் கூறுகின்றது.

எனவே இயேசுவின் கருத்துக்களை இந்தியாவுக்கு கொண்டு வந்த தோமாவின் கல்லறையில் அவரைச் சிறப்பிக்க அவரின் செய்திகளின் அடிப்படையில் அமைந்த சைவ சமயத்தின் முதல் கோவிலை கட்டுகின்றனர் மக்கள்.

ஆனால் காலப்போக்கில் சைவ வைணவ அர்த்தங்களும் மாற்றப்பட, கிருத்துவமும் மாற்றப்படுகின்றது. எனவே இரண்டும் தங்களின் ஒற்றுமைகளை மறந்து இரு வேறு சமயங்களாக தோன்றுகின்றன. இந்நிலையில் தான் போர்துகீசியர்கள் கபாலீசுவரர் கோவிலை இடித்து விட்டு சாந்தோம் தேவாலயத்தை கட்டுகின்றனர். இதுவே ஆய்வாளர்களின் கருத்து.

சரி சைவ சமயத்தின் முதல் கோவிலின் வரலாற்றினைக் கண்டாயிற்று. பிரமனையும் கண்டாயிற்று. எவ்வாறு அவை இயேசுவுடன் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கின்றனர் என்றும் நாம் கண்டு இருக்கோம். ஆனால் இன்னும் சில சந்தேகங்கள் இருக்கலாம். காரணம் வேதங்களில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றே நமக்கு கூறப்பட்டு உள்ளது. நாமும் அதைத் தான் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். எனவே இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களை சற்று கண்டு கொண்டு வந்துவிட வேண்டி இருக்கின்றது.

சைவ வைணவ சமயங்கள் என்றால் என்ன? சைவ வைணவ சமயங்களுக்கும் வேதங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா?
காண்போம்...!!!

வேதங்களும் சைவ வைணவமும் -
வேதங்கள்!!!

இந்து சமயத்தின் அடிப்படை கருத்துக்களைக் கொண்டவை இவை என்று சிலரால் இன்று நம்பப்பட்டும் அவ்வாறே பரப்பப்பட்டும் இருப்பவை. நாம் முந்தைய பதிவுகளில் சைவ வைணவ சமயங்களே ஒன்றிணைக்கப்பட்டு இந்து சமயம் என்று வழங்கப்பெருகின்றன என்று கண்டோம். இந்நிலையில், அதாவது இந்து சமயத்தின் அடிப்படை வேதங்களே என்ற கருத்து நிலவும் பட்சத்தில் நாம் இந்த வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. சைவ வைணவ சமயங்களின் அடிப்படை வேதங்களா... காண்போம்.

இன்று உங்களுக்கு பிடித்த கடவுள் யார் என்று மக்களிடம் கேள்விகள் கேட்டால் 'சிவன்,முருகன்,பிள்ளையார்,பெருமாள்,அம்மன்,இராமன்' போன்ற பெயர்கள் பதிலாக வருமே அன்றி 'இந்திரன்,வருணன்,அக்னி,வாயு,பிரசாசுபதி' போன்ற பெயர்கள் பதிலாக வரும் வாய்ப்புகள் மிக அரிது. இப்பொழுது நாம் இந்த கடவுளரின் பெயர்களைப் பற்றி பார்ப்போம்.

சிவன்,முருகன்,பெருமாள் போன்ற பெயர்கள் சைவ வைணவ சமயக் கடவுள்களின் பெயர்கள். இந்தப் பெயர்கள் எதுவும் வேதங்களில் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்திரன்,வாயு,அக்னி போன்ற பெயர்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள்களின் பெயர்கள். இக்கடவுள்களுக்கே வேதத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்வாறு வேதத்தில் சிறப்பிக்கப்பட்டு இருக்கும் இக்கடவுள்கள் சைவ வைணவ சமயங்களில் ஏதோ ஒரு மூலையில் இருப்பதையே நாம் இன்று காண முடிகின்றது. ஏன் இந்த மாற்றம்... வேதத்தில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றால் வேதம் போற்றிய இந்திரன்,வருணன் போன்ற கடவுள்களைத் தானே சைவ வைணவ சமயங்களும் போற்றி இருக்க வேண்டும் மாறாக வேறு தெய்வங்களை முதன்மைப்படுத்தி அச்சமயங்கள் விளங்கிக் கொண்டு இருப்பது ஏன்?

சரி பெயர்கள் மாறி உள்ளன. இருக்கட்டும். இப்பொழுது இன்னொரு விடயத்தினை நாம் காண வேண்டி இருக்கின்றது.
பலி வழிபாடு...!!!

வேதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள தெய்வங்கள் அனைவருக்கும் பலி இட்டு வணங்கும் முறையே காணப்படுகின்றது. இறைவனை கவர பலி தேவை என்பதே வேதக் கொள்கை. வேதங்கள் இக்கருத்துக்களையே கூறுகின்றன. சரி இப்பொழுது இந்த பலி இடும் பழக்கம் சைவ வைணவ சமயங்களில் காணப்படுகின்றனவா என்று கண்டால் இல்லை என்பதே பதிலாக வருகின்றது.

சிவன் கோவில்களிலோ அல்லது பெருமாள் கோவில்களிலோ பலி இடும் பழக்கம் கிடையாது. அங்கே பலிபீடங்கள் இருக்கின்றன அனால் பலி கிடையாது. இப்பழக்கமே முருகன் கோவிலிலும் சரி பிள்ளையார் கோவில்களிலும் சரி கடைப்பிடிக்கப்படுகின்றன. அதாவது இன்று பெருவாரியான மக்களால் வணங்கப்படும் தெய்வங்களுக்கு பலி இட்டு வணங்கும் வழிபாட்டு முறை இல்லை.

அட என்னங்க இன்றும் நம்முடைய ஊர்களில் அய்யனாருக்கும் சரி மற்ற குல தெய்வங்களுக்கும் சரி விலங்குகளை பலியிட்டு வழிபடும் பழக்கம் இருக்கின்றதே இதுக்கு என்ன சொல்றீங்க என்ற கேள்வி இப்பொழுது எழலாம். நியாயமான கேள்வி தான். இந்தக் கேள்விக்கு விடையினை நாம் பின்னர் காண்போம். இப்பொழுது நாம் மீண்டும் சைவ வைணவ சமயத்துக்கும் வேதங்களுக்கும் வரலாம்.

வேதங்கள் - பலி வழிபாட்டு முறையினை உடையவை.
சைவ வைணவ சமயங்களிலோ பலி கிடையாது. ஏன் இந்த வேறுபாடு என்று வினவின் நமக்கு இரு தரப்புகளிடம் இருந்து இரு வேறு பதில்கள் வருகின்றன. ஒரு தரப்பினர் வேதங்களை நம்பிகின்ற தரப்பினர். மற்றொருவர் கடவுள் நம்பிக்கை அற்ற தரப்பினர். இப்பொழுது அவர்கள் கூறும் கூற்றினைக் காண்போம். முதலில் வேதங்களை நம்பும் தரப்பினரின் கூற்றினைக் காண்போம்.

இவர்களின் கூற்றின் படி வேதங்களில் பலி வழிப்பாட்டு முறை இருந்தாலும் வேதாந்தங்களில் பலி மறுப்பு கோட்ப்பாடுகள் இருக்கின்றனவே. எனவே பலி மறுப்பும் வேதங்களின் கோட்பாடுகளே என்கின்றனர். ஆனால் இப்பொழுது நமக்கு சில கேள்விகள் எழுகின்றன... ஏன் இந்த திடீர் மாற்றம். வேதாந்தங்கள் வேதத்தின் அடிப்படையில் எழுந்தன என்றால் திடீர் என்று கோட்பாடுகளின் ஏன் மாற வேண்டும். பலி என்ற விடயம் ஒன்று தான் என்று இல்லை பல விடயங்கள் வேதங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் இடையே மாறுபடுகின்றன. வேதத்தில் இருக்கும் இயற்கை வழிபாட்டு முறை வேதாந்தத்தில் இல்லை மாறாக ஒரு கடவுள் வழிபாட்டு முறை காணப்படுகின்றது. மேலும் வேதத்தில் இல்லாத ஆன்மா, மனிதன் இறைவனை அடைய வழி போன்ற பல கருத்துக்கள் வேதாந்தத்தில் காணப்படுகின்றது. வேதத்திற்கும் வேதாந்தங்களுக்கும் ஏன் இந்த வேறுபாடு என்ற கேள்விக்கு இது வரை பதில் இல்லை. சைவ வைணவத்துக்கும் வேதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை காண நாம் வேதாந்தங்களை அணுகினால் கேள்வி வேதத்திற்கும் வேதாந்தத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் ஏன் என்ற நிலைக்கு சென்று விட்டது. இக்கேள்விக்கு விடை இதுவரை கிட்டாததால் நாம் இப்பொழுது மற்ற கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது.

அட கொஞ்சம் நில்லுங்க... வேதம் அப்படின்னு சொல்றீங்க சரி... அது தெரியும்... வேதாந்தங்கள் அப்படின்னு சொல்றீங்களே அப்படினா என்னனு சொல்லுங்க...அப்படினா தான படிக்குற எல்லாத்துக்கும் புரியும் அப்படின்னு கேட்குறீங்களா சரி தான்.

வேதாந்தங்கள் என்றச் சொல் - வேதா + அந்தங்கள் - அதாவது வேதத்தின் முடிவு பொருளைத் தருபவை என்று பொருள் தருவது. இதனை உபநிடங்கள் என்றும் வழங்குவர். இவை வேதங்களைத் தொடர்ந்து அவற்றை விளக்க எழுதப்பட்டவை. எழுதப்பட்டதின் காரணத்தை நாம் பின்னர் காண்போம். இப்பொழுது நாம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூறும் கருத்தினைக் காண்போம்.

அவர்களின் கூற்று நம்மை சமண புத்த சமய காலத்திற்கு அழைத்துச் செல்கின்றது. நாம் முன்னரே அம்மதங்களைப் பற்றிக் கண்டு இருக்கின்றோம். அவை பலி மறுப்பு கோட்பாடு உடைய சமயங்கள். கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிபி பத்தாம் நூற்றாண்டு வரை இந்திய மண்ணில் நிலை பெற்று சிறந்து விளங்கிய சமயங்கள். அதுவும் அசோகரின் காலத்தில் கொடி கட்டி பறந்த சமயங்கள். அக்காலத்தில் மக்கள் பலர் இச் சமயக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு இருந்ததால் பலி இடும் பழக்கங்கள் சற்று நலிவடைந்து இருந்தன. சரி இப்பொழுது நாம் இவர்களின் கூற்றினைக் காண்போம்.

பலி வழிபாட்டினை உடைய மக்கள், பலி மறுப்பு சமயங்களான சமணத்திற்கும் புத்ததிற்கும் மக்களிடையே பெருகும் செல்வாக்கினைக் கண்டு, மக்களை தன் பால் இழுக்க பலி வழிப்பாட்டு முறையினை மாற்றி பலி இல்லா முறைகளை வகுத்துக் கொண்டனர். அவ்வாறு மாற்றி தங்களது செல்வாக்கையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொண்டனர். எனவே தான் இன்றைய சைவ வைணவ சமயங்களில் பலி என்பது இல்லை. இதுவே அவர்களின் கருத்தாக இருக்கின்றது.

ம்ம்ம்...ஏற்றுக் கொள்ள கூடிய கருத்து தான். மக்கள் மத்தியில் ஒரு கருத்து வலு பெற்று வருகின்றது என்றால் அக்கருத்துகளை வைத்து தங்களுக்கு ஆதாயம் தேடிக் கொள்ளும் வழிகளை உருவாக்கிக் கொள்கின்றவர்களை நாம் இன்றளவிலும் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம். எனவே சமண புத்தக் கொள்கைகளை சேர்த்துக் கொண்டு வேதக் கருத்துக்கள் உருமாறி இருக்கலாம் என்ற இவர்களின் கண்ணோட்டத்தை நாம் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் இவர்களின் கூற்றிலேயும் ஒரு கேள்வி எழுகின்றது.

௧) சமண புத்த சமயங்கள் பலி மறுப்புச் சமயங்கள். ஆனால் சைவ வைணவச் சமயங்களோ பலி நிறைவேற்றச் சமயங்கள். அதாவது பலி நிறைவேறி விட்டது இனிமேல் பலி தேவை இல்லை என்ற கொள்கை உடைய சமயங்கள். எனவே தான் அக்கோவில்களில் பலிபீடங்கள் இருக்கின்றன ஆனால் பலி இல்லை. எனவே சமண புத்த சமயத்தில் இருந்து இந்தக் கொள்கையை (பலி இல்லா வழிபாடு) சைவமும் வைணவமும் பெற்று இருந்தன என்றால் இவற்றில் ஏன் இந்த வேறுபாடு என்றும் நாம் ஆராய வேண்டி இருக்கின்றது. இதனை நாம் பின்னர் காண்போம்.

சரி இப்பொழுது நாம் கண்ட வரை...

௧) வேதக் கடவுள்கள் சைவ வைணவத்தில் சிறு நிலையில் இருப்பதும், சைவ வைணவக் கடவுள்களை பற்றி வேதத்தில் குறிப்புகள் காணப்படாது இருப்பதும்
௨) பலி கோட்பாடுடைய வேதத்தில் இருந்து எவ்வாறு பலி இல்லா வழிப்பாட்டுடைய சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்ற கேள்விக்கு விடை இல்லா காரணத்தினாலும்
௩) வேதத்தில் காணப்படும் பல கடவுள் வழிப்பாடு முறை மற்றும் இயற்கை வழிப்பாட்டு முறை போன்றவை சைவ வைணவத்தில் காணப்படாதமையும்
௪) சைவ வைணவத்தில் இருக்கும் ஒரு மூலக் கடவுள் (சைவம் -சிவன், வைணவம்-விஷ்ணு) என்ற கோட்பாடு வேதத்தில் காணப்படாதமையும்
௫) சைவ வைணவ சமயத்தின் அடிப்படையான இறைக் குடும்ப வழிப்பாட்டு பழக்கமும், அவதாரக் கோட்பாடும் வேதத்தில் காணப்படாதமையும்

சைவமும் வைணவமும் வேதங்களில் இருந்து தோன்றிய சமயங்கள் அல்ல என்று நாம் கூறுவதற்கு வழி வகுக்கின்றன. சரி வேதங்களில் இருந்து சைவ வைணவ சமயங்கள் தோன்றவில்லை என்றால் அவை எவற்றில் இருந்து தோன்றின...பின்னர் வேதங்கள் என்றால் என்ன...அவற்றின் காலங்கள் என்ன? ஏன் வேதங்களில் இருந்து சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றக் கருத்துக்கள் நிலவுகின்றன?

இக்கேள்விகளுக்கு நாம் விடையினை காண்போம்...!!!

தொடரும்... பகுதி-11 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக