வெள்ளி, 24 அக்டோபர், 2014

ஐந்திறம் எனும் தமிழ் நூல்...

ஐந்திறம் எனும் தமிழ் நூல்...

ஐந்திறம் கூறும் தமிழ் மொழியியல்

தமிழர்களுக்கு இரண்டு வரலாறுகள் உண்டு. ஒன்று குமரிக்கண்டத்தின் கடல்கோளுக்கு முன்பு உள்ளது (க.மு). மற்றொன்று கடல்கோளுக்கு பின்பு உள்ளது (க.பி).

பஃறுளி யாற்றுடன் பல் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள
வட திசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
-சிலப்பதிகாரம் -மதுரை காண்டம் – காடுகாண் காதை
சந்திரவம்சத்து பாண்டியனின் (தென்னன்) சிறப்பை விளக்கும் இந்த சிலப்பதிகாரப்பாடல் பாண்டியன் ஆண்ட தெற்கு பகுதியில் குமரிக்கோடு என்னும் பகுதி பஃறுளி ஆற்றுடன் கடல்கோள் கொண்ட விவரத்தை தெரிவிக்கிறது. குமரிக்கண்டத்திற்கு ஜம்புத்வீபம் அல்லது நாவலந்தீவு என்ற பெயரும் உள்ளது. நாவல் மரம் அடர்ந்த பகுதி என்று பொருள். குமரிக்கண்டத்தில் கடல்கோளுக்கு முன்பு எழுதப்பட்டது “ஐந்திறம்” என்ற நூல். 15,000 ஆண்டுகளுக்கு முன் மயன் எழுதிய நூல்தான் ஐந்திறம். கடல்கோளுக்கு முன்பு இருந்த நமது ஆன்மீகம், பண்பாடு மற்றும் அறிவியலின் உச்சகட்டத்தை காட்டுகின்ற நூல் ஐந்திறம். தொல்காப்பியமே தமிழரின் மூல நூல் என்று கூறி வருகிறோம். ஆனால், தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரத்தில் “ஐந்திறம்” நிறைந்த தொல்காப்பியம் என்ற பனம்பரனார் வரிகள் முகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஐந்திறம் என்ற நூல் முதல் சங்க காலத்தில் நிலத்தரு திருவிற் பாண்புயன் என்ற அரசனின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.
“ஐந்திறம் காட்டும் விண் மண்ணாகும் விஞ்ஞான நிகழ்வு.” “விண்” முதற்பூதமாகவும், சிருஷ்டிகளுக்கெல்லாம் ஆதார இடமென்றும் ஐந்திறம் கூறுகிறது. அது மட்டுமின்றி இந்த வெளியே “ஒளிவெளி” என்றும் “வெளிஒளி” என்றும் கூறுகிறது. வெளியில் உள்ள ஆகாசத்தை போலவே, நமது உடலுக்கு உள்ளும் ஓர் ஆகாசம் இருக்கிறது. என்கிறது ஐந்திறம். இதனை மற்றொரு ஒளி (ஒளிரும் ஒளி, ஒளியினை உமிழும் ஒளி) என்றும் கூறுகிறது.
ஒளிபரம் பொருளே யாகி ஒளிமுதற் பொருளேயாகி
ஒளிக்கலைப் பொருளே யாகி ஒளிநிலைப் பொருளேயாகி
ஒளியெழில் ஆற்றலாயே ஒளிஒளி நிலையினாலே
ஒளி ஒளியாய் விளங்கும் ஒளியொளிர் ஒளியே போற்றி.
-மயன் உரைப்பாடல்

மேலும், ஒளியே ஒலியாகவும் வெளிபடுகிறது. ஐந்திறம் கூற்றுப்படி இந்த ஒளி, ஒலி அணுக்களே இப்பிரபஞ்ச உற்பத்திக்குக் காரணம். மேலும், இந்த மூல ஒளி அணுக்கள் சிதாகாயத்திலும், பேராகாயத்திலும் ஒருங்கே இருக்கிறதாக ஐந்திறம் கூறுகிறது. இந்தத் துடிப்பைத்தான் காலம் என்ற பெயரில் ஐந்திறம் குறிப்பிடுகிறது. இந்த அணுக்களின் துடிப்பே இயல், இசை, நடம் , கட்டிடம் மற்றும் சிற்பம் முதலிய ஐங்கலைகளாக வெளிப்படுகின்றன. இதையே ஐந்தியல் என்றும் ஐந்திறம் கூறுகிறது.

அருவநிலையில் ஒளியாக உள்ள மூலப்பொருள் உருவநிலையில் கனசதுர வடிவமாக மாறிவிடுகிறது. “கரு” உடலாகும். உள்ளிருக்கும் ஒளி உயிராகும். ஐந்திறநூலில் இக்கனசதுர வடிவத்தை “நாற்புறத்தியல்” என்று சொல்லுவதை காணமுடிகிறது. ஒளியாக உள்ள மூலபொருளைத்தான் “மூலக்கனல்” என்றும் “மூலச்சூடு” என்றும் “பிரணவச்சூடு” என்றும் ஐந்திறம் கூறுகிறது. (ஒளிவளர் உயிரே; உயிர்வளர் ஒளியே; ஒளியுயிர் வளர்தரும் உணர்வே -வள்ளலார்). ஆகையால், கடவுளின் மூல வடிவம் சதுரமே. இக்கருத்தை முதலில் கூறிய விஞ்ஞான நூல் ஐந்திறம். (சதுர பேரருள் தனிப்பெரும் தலைவனென்று எதிரற்று ஓங்கியே என்னுடைத் தந்தையே – திருவருட்பா ; பிரணாயாமம் செய்யும்போது இதயவெளி எனும் தாமரை விரிகிறது. அப்போது தோன்றும் அக்கினியின் உச்சியில் பொன்னிறத்தில் கனசதுரவடிவில் ஒரு பிந்து தோன்றுகிறது – மரீசி சம்ஹிதை). இக்கனசதுர கருவானது 64 சதுர ஒளி அணுக்களால் ஆனது என்றும் ஐந்திறம் கூறுகிறது.
அறுபான் நான்கியல் அமைவுறக் கண்டே
உறுநிலை நாற்புறத் தியலைத் தியல்வெளி
கணக்கியல் மாநெறி கலைநெறித் தேர்நிலை
பினக்கரும் தூநெறி பெருநெறி தேர்ந்தே
பெருவளியியலும் கருவெளி திறனும்
உருவெளி ஆக்கம் ஒளிநிலை தேர்ந்தே - ஐந்திறம் – 856

ஒளியும், வெளியும் சேர்ந்தசைவதனால் “ஓம்” என்ற மூல ஒலி பிறக்கிறது. ஒளியணு வும், ஒலியணுவும் மேலும் எழுச்சியும் சூழற்சியும் கொள்வதால் மூல ஒலிகளான அ, இ, உ, எ ஆகியவை தோன்றுகின்றன. இம்மூலவொளிகள் விண்ணிலும் சிதாகா யத்திலும் தோன்றுவது. இயற்கையின் இயல்பு என ஐந்திறம் கூறுகிறது. எனவே “இயல்மொழி” – இயற்கை முதன் முதலில் பேசிய மொழி தமிழாயிற்று. இது விண்பேசிய மொழி. இன்றும் சொல்லப்போனால் இது ஒளி பேசிய முதல்மொழி.
விண்ணொளித் தமிழாய் விளங்குறு முன்மை
என்னோளித் திறனுறும் எண் விளக்கும்மே – ஐந்திறம் 463

மேலும், விண்ணில் “ஓம்” எனும் ஒலியை தோன்றுவித்தல் “விண்ணொளி” என்றும் அதுவெளியில் படர்ந்து எதிரொலித்ததால் “வெளிமொழி” என்றும், நிறையொலி என்றும், தேரொலி என்றும் கூறப்படுகிறது.
ஒளிமுதல் கண்ட விண்ணொலி ஓசை
வெளிமொழி ஓமென விளம்பற் பாற்றே – ஐந்திறம்!
இவ்வாறு ஒலியணுக்கள் ஒன்று கூடி எழுத்தொலிகளை வெளியில் உமிழ்கிறது.
(“அணத்திரன் ஒளியே எழுத்தொலிச் சிறப்பாம்” – ஐந்திறம்)அதாவது அ,இ,உ,எ வுடன் ஓ மையும் சேர்த்து ஐந்தொலிகளாகத் தோற்றம் கொள்கிறது. இதுதான் உயிர் + ஒலிகள் என இலக்கணத்தில் ஏற்றுகொள்ளப்படுகின்றன. ஒளியின் அசைவுகள் அமிழ்தல், இமிழ்தல், குமிழ்தல், உமிழ்தல் இறுதியில் எல்லாம் சேர்ந்து தமிழ்ந்து தமிழாகும் என்பது ஐந்திற விஞ்ஞானம்.

சதுரத்திலிருந்து எழும் ஒளி மற்றும் ஒலி மேலே வரவரக் குறுகி “பிரமிட்” வடிவத்தை பெறுகிறது. நம் உடலுள் தோன்றிய அனுபவமே இந்தப் பிரமிடாகிய சிற்ப வடிவம். இதன் பொருட்டே தமிழையும் சிற்பம் என்ற சொல்லால் ஐந்திறம் அழைக்கிறது.
சிற்பச் செந்தமிழ் சிற்றவை எண்தமிழ்
பொற்புற்றாய்தல் பெருநெறி மரபே – ஐந்திறம் 1818
“தவளை மாநெறி” அதாவது 8 x 8 = 64 சதுரங்கள் கொண்ட மண்டலமாகிய தவள மாடத்து உச்சிதான் (பிரமிட்) அயனும், மயனும் காணமுடியாத மெய்ப்பொருள் என்பதாகும் என ஐந்திறம் குறிக்கிறது.

அதையேதான் வள்ளலாரும்
அயனும் மாலும் தேடித்தேடி அலைந்து போயினர்
அந்தோ இவன் முன் செய்த்தவம்யா தென்பராயினர்
மயனும் கருதமாட்டாத் தவள மாடத்துச்சியே – திருவருட்பா – 1818

இந்த ஒளி அணுக்கள் ஒன்றோடொன்று அணுக்கமாவதால் உரு தோன்றுகிறது. அவ்வணுக்கள் எட்டெட்டாகச்சேர்ந்து பிறகு எட்டின் மடங்காக வரித்து செறிகிறது என்கிறது ஐந்திறம். மேலும், எட்டெட்டாக அணுக்கள் கூடுவது அணுக்களின் இயல்பு. இதனை “சீர் இயல்” என்கிறது ஐந்திறம். ஆக்கத்திற்கு அடிப்படையான கணக்கை “எட்டியல்” என்று ஐந்திறம் கூறுகிறது. இயக்கம் ஐந்தாகவும் (ந, ம, சி, வ, ய) அதன் ஆக்கம் எட்டாகவும் இயற்கையில் நிகழ்வதாக ஐந்திறம் கூறுகிறது.

எட்டே எட்டியல் எடடெட்டியல எட்டின் நெறியே அளவை மாநெறி – ஐந்திறம் ௬௭௫
இந்த ஐந்திறம் நூலை அடிப்படையாக அறிந்து உணர்ந்தவர்கள் மாணிக்கவாசகரும், வள்ளலாரும்தான். அவரவர்தம் நூலில் ஐந்திறத்தின் கருத்துக்கள் வெளிப்படுவதே இதற்கு சான்று...

யாழறிவன்... Yalarivan Jackson Jackie

3 கருத்துகள்:

  1. ஐந்திறம் பற்றிய நூல்களின் விவரம் தெரிந்தால், தயவுசெய்து எனக்கு இங்கே அல்லது madannan@yahoo.com என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும்.

    பதிலளிநீக்கு
  2. ஐயா, நீங்கள் குறிப்பிடும் ஐந்திறம் எந்த நூல்? எங்கே கிடைக்கும்? நான் ஒரு வள்ளலார் தொண்டன்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா என் பெயர் குறிப்பிட மறந்தேன். என் பெயர் முத்துஜோதி. என் மின்னஞ்சல் mmuthujothi@gmail.com

    பதிலளிநீக்கு