செவ்வாய், 21 அக்டோபர், 2014

தமிழனும் உலக வரலாறும்

தமிழனும் உலக வரலாறும்...

பகுதி-12

பண்டைய கால நாகரீகங்களுள் வழிபாடுகள்

அனைத்து சமயங்களும் ஒன்றோடொன்று தொடர்புக் கொண்டவையாகவே இருக்கின்றன என்றும் அவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு சில விடயங்கள் பொதுவாக இருக்கத் தான் செய்கின்றன என்றும் நாம் கூறினோம் என்றால் அவற்றுக்கு தக்க சான்றுகளையும் நாம் காண்பிக்க வேண்டி இருக்கின்றது. அவ்வாறு ஒற்றுமைகளை நாம் காண்பிக்கத் தவறினோம் என்றால் நமது கூற்றுகள் வெறும் பெயரளவுக் கூற்றுக்களாகவே சென்று விடும். எனவே இப்பொழுது நமது பயணத்தில் மேலும் சில ஒற்றுமைகளை நாம் காண வேண்டி இருக்கின்றது.

ம்ம்ம்ம்... இம்முறை நாம் எங்கிருந்து பயணத்தை தொடங்கலாம்...? சரி... சிந்து சமவெளியில் இருந்தே தொடங்கலாம்... சென்ற முறை நாம் சிந்து சமவெளியை பற்றி கண்டப் பொழுது அந்த நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்றும் அங்கிருந்தே சென்ற மக்கள் மேசொபோடமியா மற்றும் சுமேரிய நாகரீகத்தினை உருவாக்கினர் என்றக் கருத்துக்களை மையமாக வைத்தே கண்டதால் அங்கே மக்கள் கொண்டு இருந்த வழிப்பாட்டு முறையைப் பற்றி நாம் காண முடியாது சென்று விட்டது. கவலை இல்லை...அவற்றை இப்பொழுது காண்போம்.

சிந்து சமவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலமாக பல விடயங்கள் நம்முடைய பார்வைக்கு வந்து உள்ளன. முதலில் அந்த இடங்களில் அதிக அளவில் நினைவுக்கற்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் கல்லினை நட்டி வைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம் என்று. இதனையே ஆராய்ச்சியாளர் இரா. ஜெசிந்தர் எபினேசர் என்பவரும் அவரது 'நினைவுக்கல் வழிப்பாடும் விவிலியமும் என்ற நூலில் பின் வருமாறு கூறுகின்றார்

"அக்கற்கள் ஆனவை பொது நன்மையின் வடிவாக விளங்கும் இறைவனையும் பொது நன்மையின் பொருட்டு தன்னையே தியாகம் செய்த மனிதனையும் நினைத்துக் கல் கட்டி வழிபடுவது நினைவுக்கல் வழிப்பாடாகும்".

மேலும் இந்த நினைவுக் கல் வழிபாடே இசுலாமிய சமயத்திலும் காணப்படுகின்றது என்றே 'இசுரவேளர் சமயம்' என்ற தனது நூலில் ஞான ராபின்சன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"பழங்கால அரபுக் கோவில்களில் அப்புனிதக் கல், தொழுகைக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்பட்டது. இக்கல் ஒரு குறிப்பிட்ட கடவுளைக் குறிப்பதாக இராமல் அனைத்துக் கடவுளையும் குறிப்பிட்டு நின்றது. கற்களின் மேல் இரத்தம் பூசப்பட்டது."

இந்த நினைவுக் கல் வழிபாட்டு முறை தான் சமணம் மற்றும் புத்த சமயங்களில் 'தூபி' என்று பெயர்பெற்றும் தமிழ் சங்க இலக்கியங்களில் 'கந்து' என்று பெயர் பெற்றும் விளங்கிக் கொண்டு இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அட என்னய்யா இது நினைவுக் கல் அப்படின்னு கேட்குறீங்களா... அட அது வேற ஒண்ணும் இல்லைங்க இன்று நாம் சிவலிங்கம் என்ற பெயரில் வழிபடுகின்றோமே அதேக் கல் வழிப்பாட்டு முறை தான் அந்தக் காலத்தில் நினைவுக் கல் வழிபாடு என்ற பெயரில் இருந்து இருக்கின்றது.

மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவனை கல்லினை நட்டி வைத்து வணங்கி வந்தனர். இந்தப் பழக்கம் அனைத்து நாகரீகங்களிலும் பொதுவாக இருந்தமையை நாம் முந்தையப் பதிவுகளில் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம். ஆனால் அக்காலத்தில் சிவலிங்கம் என்றப் பெயர் தோன்றி இருக்காத காரணத்தினால் நாம் அக்கல் வழிப்பாட்டு முறையினை நினைவுக் கல் வழிப்பாட்டு முறை என்றே நாம் இந்தப் பதிவில் அழைக்கின்றோம்.

சரி... நினைவுக் கல் வழிபாடு சிந்து சமவெளி மக்களிடம் இருந்தது... சுமேரிய மக்களிடமும் இருந்தது... அதனைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்திலும் காணப்படுகின்றது என்பதனையும் நாம் முந்தையப் பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது இன்னொரு ஒற்றுமைகளையும் நாம் கண்டு விடுவோம்...

சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் பல பெண் தெய்வங்களின் வடிவங்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல உருவங்கள் கொம்பினை உடைய உருவங்களாகவே காணப்படுகின்றன. கொம்புகள் அந்த உருவங்களின் தெய்வத்தன்மையை உருவகப்படுத்துவதாகவே அறிஞர்கள் கருதுகின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அத்தகைய கொம்பினை உடைய உருவங்கள் சுமேரிய நாகரீகத்திலும் சரி விவிலியத்திலும் சரி ஒன்று போலவே நமக்கு கிட்டப்பெருகின்றன. இதனை

"சிந்துவெளியில் கொம்புடன் காணப்படும் உருவங்களை ஒத்து, சுமேரியாவிலும் பாபிலோனியாவிலும் கொம்புடைய உருவங்கள் காணப்படுகின்றன. அங்கு இக் கொம்பு அரசனையோ, குருவையோ, கடவுளையோ குறிப்பதாக கொள்ளப்பட்டு இருக்கின்றது." என்று சான் மார்ஷல் அவர்கள் அவரது ;மோகஞ்சடாரோவும் சிந்து சமவெளி நாகரீகமும் என்ற புத்தகத்தில் கூறி உள்ளது மூலமும் நாம் அறிந்துக் கொள்ளலாம்.

மேலும் இன்றும் கூட இந்தியப் பழங்குடி மக்களுள் தலைவராக உள்ளவர்கள் அவர்களது தலைமைக்கு அடையாளமாக எருமைக் கொம்பைத் தலையில் அணிந்து இருப்பதும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற்க

இன்றும் நம்முடைய சமுகத்தில் ஒரு சொற்தொடர் நிலவிக் கொண்டு இருக்கின்றது மேலே உள்ள வாக்கியத்தினை மெய்ப்பிப்பது போல.

"நீ என்ன பெரிய கொம்பனா டே...? "உனக்கு மட்டும் என்னவே ரெண்டு கொம்பா மொளச்சி இருக்கு" என்ற வாக்கியங்கள் தான் அவை. உற்றுப் பார்த்தோம் என்றால் அவற்றின் அர்த்தம் 'நீ என்ன பெரியவனா' என்றே வருகின்றது. அதாவது கொம்பினை வைத்து இருக்கின்றவன் பெரியவன் என்ற மறைமுகப் பொருளினையே அவை தருகின்றன. இந்தச் சொற்தொடர் என்றில் இருந்து நம்மிடையே இருக்கின்றன... தெரியவில்லை...இருந்தும் இவையும் சிந்தித்துப் பார்க்கத் தக்கவையே.

சரி... சிந்துசமவெளியில் கிடைக்கும் கொம்புகள் உடைய உருவங்கள் சுமேரிய நாகரீகத்திலும் பாபிலோனிய நாகரீகத்திலும் கிடைக்கின்றன...ஆனால் விவிலியத்திலும் இவற்றைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன என்றுக் கூறினீர்களே அது என்ன என்றுக் கேட்கின்றீர்களா... சரிதான் அதையும் கண்டு விடலாம். முந்தையப் பதிவுகளில் நாம் கண்டது போலவே மீண்டும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள சில பக்கங்களை நாம் இதற்காக திருப்ப வேண்டி இருக்கின்றது.

"யோசேப்பின் அலங்காரம் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப் போலவும் அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகள் போலவும் இருக்கும். அவைகளாலே சனங்களை ஏகமாய்த் தேசத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான்" - உபாமகம் (33:17)

"சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்;" - மீகா (4:13)

"அவர் வெஞ்சினம் கொண்டு
இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்;" - புலம்பல் (2:3)

மேலே உள்ள இவ்வரிகள் மூலமாக கொம்புகள் ஆற்றலையும் அரசாட்சியையும் குறிப்பதாக இசுரவேலரின் சமயத்திலும் விளங்கியதை நாம் அறியலாம்.

சரி...பழைய நாகரீகங்களுள் நினைவுக் கல் வழிபாடும் ஒன்றுப் போலவே இருக்கின்றது... கொம்பு வைத்த உருவங்களும் சரி அவற்றிற்குரிய அர்த்தங்களும் சரி ஏறக்குறைய ஒன்றுப் போலவே இருக்கின்றது...இவற்றைப் போலவே இன்னும் பல பழக்கங்கள் அந்த பழைய நாகரீகங்களுக்குள்ளே பொதுவானதாக விளங்குகின்றன.

மர வழிபாடு, விலங்குகள் வழிபாடு , இயற்கை தெய்வங்கள் வழிபாடு, மலைகளில் இறைவன் இருப்பதாக நம்பிக்கை... மேலும் இன்ன பிற பழக்க வழக்கங்களும் இந்த நாகரீகங்களுள் ஏறக்குறைய ஒன்றைப் போலவே இருக்கின்றன. அட மறந்து விட்டேன்... உலகத் தோற்றக் கதையும் வெள்ளத்தால் உலகம் அழிந்தக் கதையும் கூட இவற்றில் ஒரே போலவே இருக்கின்றன.

இந்த ஒற்றுமைகள் தற்செயலானவையா அல்லது ஒரு இடத்தில தோன்றிய மக்கள் பல இடங்களுக்கு நகர்ந்தமையால் அவர்களுடனேயே இந்தப் பழக்கங்களும் நகர்ந்தமையால் காணப்படும் ஒற்றுமைகளா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. அது அவர்கள் கடமை... அதனை அவர்களிடமே விட்டுவிடுவோம்.

நாம் இப்பொழுது அறிந்துக் கொள்ள வேண்டியது பண்டைய காலத்தில் மக்களிடையே பல பழக்க வழக்கங்கள் ஒன்றுப் போலவே இருந்து இருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சிகளை இன்றும் நமது சமுகத்தில் நாம் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றோம் என்பதே!!!

பி.கு:

இந்தத் தகவல்கள் நான் தெ. தேவகலா என்பவரது 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்னும் ஆராய்ச்சி நூலின் இருந்தே அறிந்து கொண்டவைகளாகும்.

பண்டைய தமிழர்களின் திணைக் கடவுளர்

நண்பர் ஒருவர் அருமையான கேள்வி ஒன்றினை கேட்டு இருந்தார்.

தமிழர்களின் திணைப் பிரிவுகளில் முருகனின் பெயர் காணப்படுகின்றது…திருமால் என்ற பெயர் காணப்படுகின்றது…ஆனால் சிவன் என்ற பெயரோ அல்லது விநாயகர் என்ற பெயரோ காணப்படவில்லையே அது ஏன் என்று வினவி இருந்தார். சமயங்களைப் பற்றிய நமது பயணத்தில் இந்தக் கேள்வி ஒரு மிக முக்கியமானதொருக் கேள்வி. சரி இப்பொழுது இந்தக் கேள்விக்கான விடையினைக் காண்போம். அதற்கு தமிழர்களின் திணைப் பிரிவுகளைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது.

தமிழர்கள் நிலத்தினை ஐந்தாகப் பிரித்து இருந்தனர் என்பதனை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். அவைகளைத் தான் ஐந்திணைகள் என்று நாம் வழங்குகின்றோம். அதாவது,

குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும்

என்பனையே அந்த ஐந்துப் பிரிவுகள். தமிழ் பாட நூல்களுள் இவற்றைப் பற்றி நாம் நிச்சயம் பார்த்து இருப்போம். மேலும் இந்தப் பிரிவுகளுக்கு என்றே உரித்தான தனி கருப் பொருள்களையும் தமிழர்கள் வரையறை செய்து வைத்து இருந்தனர். அதாவது ஒவ்வொரு நிலத்திலும் வாழும் மக்கள், அங்கு காணப்படும் மிருகங்கள் மற்றும் பறவைகள், நீர் நிலைகள், வணங்கப்படும் கடவுளர், இசைக்கும் கருவிகள், பண், மரங்கள்… மற்றும் இன்ன பிற விடயங்களை ஒவ்வொரு நிலத்திற்கும், இவை இவை இந்த நிலத்திற்குரிய கருப்பொருள்கள் என்று தமிழர்கள் பிரித்து வைத்து இருந்தனர். நிற்க
இப்பொழுது நாம் காண வேண்டியது அந்தந்த நிலங்களில் வழிப்படப்பட்ட தெய்வங்களைப் பற்றியே. அதற்கு நமக்கு தொல்காப்பியரின் பாடல் உதவுகின்றது.

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”

இந்தப் பாடலில் தொல்காப்பியர் நிலங்களின் பிரிவையும் அவற்றிற்குரிய கடவுளரையும் குறிப்பிட்டு இருக்கின்றார்.

முல்லை நிலக் கடவுளாக ‘மாயோன்’ அறியப்படுகின்றான்.
குறிஞ்சி நிலக் கடவுளாக சேயோன் அறியப்படுகின்றான்.
மருத நிலக் கடவுளாக வேந்தன் அறியப்படுகின்றான்.
நெய்தல் நிலக் கடவுளாக வருணன் அறியப்படுகின்றான்.

பாலையைப் பற்றி தொல்காப்பியர் கூறாதது அந்தப் பிரிவானது அவர் காலத்திற்கு பின்னாலேயே தோன்றி இருக்கக் வேண்டும் என்று நாம் கருத வாய்ப்பளிக்கின்றது.

பாலை நிலக் கடவுளாக கொற்றவை அறியப்படுகின்றார். இவையே அந்த ஐந்திணைகளில் வழங்கப்படும் கடவுளரின் பெயர்கள் ஆகும்.

இங்கே நாம் இப்பொழுது காண வேண்டிய விடயம் என்னவென்றால் இங்கே குறிக்கப்பட்டு உள்ள கடவுளர்கள் அனைவரும் அந்தந்த நிலத்திற்குரிய கடவுளர்களே அன்றி முழுமுதற் கடவுளர் அல்லர். அதாவது,
மாயோன் முல்லை நிலத்துக்கான கடவுளாகவே அறியப்படுகின்றான்.

அதேப்போல் சேயோன் குறிஞ்சி நிலத்துக்குரிய கடவுளாகவே அறியப்படுகின்றான். மற்ற நிலங்களில் இவர்கள் வணங்கப்படவில்லை. ஒவ்வொரு திணைக்குரிய மக்களும் அவர்களுக்கென தனிக் கடவுளரை கொண்டு இருந்தனர். அதாவது இன்று நாம் முழுமுதற் கடவுளாக சிவனையோ அல்லது பெருமாளையோ வணங்குகின்றோம். இவர்களும் சரி இவர்கள் பிள்ளைகளாக கூறப்படும் முருகன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் போன்றியவர்களும் குறிப்பிட்ட நிலத்துக்குரிய கடவுளராக இல்லாது அனைவருக்கும் உரியக் கடவுளராக விளங்குகின்றனர். ஆனால் இது போல் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ள கடவுளர் காணப்படவில்லை.

“அட என்னங்க அப்படினா அந்தக் காலத்துல அனைத்து திணை மக்களும் தனித்தனி கடவுளரை வழிப்பட்டனர் என்றால் பொதுக் கடவுள் என்று எவருமே அப்பொழுது இல்லையா?” என்ற ஒரு கேள்வி இப்பொழுது எழலாம். இந்தக் கேள்விக்கு பதில் ‘இல்லை…மக்கள் பொதுவானக் கடவுள் வழிப்பாட்டையும் கொண்டு தான் இருந்தனர். நினைவுக் கல் நாட்டி வழிபடும் பழக்கம் மக்கள் அனைவர் உள்ளும் ஒன்றைப் போலவே இருக்கத் தான் செய்தது. அந்த நினைவுக் கல்லுக்கு அக்காலத்தில் வழங்கப்பட்ட பெயர் கந்து’. (அந்தக் கந்து என்ற பெயர் தான் பிற்காலத்தில் சிவலிங்கம் என்ற பெயர் பெற்று இன்று நம்மிடையே தொடர்ந்து இருந்துக் கொண்டு வருகின்றது.) நிற்க.

சரி இதுவரை நாம் கண்ட விடயங்களை சற்று உன்னிப்பாக கவனித்தோம் என்றால் நம்மிடையே இன்று வழங்கிக் கொண்டு இருக்கும் கடவுளர்களின் பெயர்களான ‘பெருமாள், சிவன், பிள்ளையார், முருகன், சக்தி, பிரமன்’ போன்ற பெயர்கள் அக்காலத்திலே இல்லாது இருப்பதை நம்மால் காண முடியும். மேலும் அந்தக் காலத்தில் வணங்கப்பட்ட கடவுளருக்கும் இன்று நாம் வணங்கிக் கொண்டு இருக்கும் கடவுளருக்கும் பொருள் அளவிலும் வித்தியாசங்கள் இருப்பதையும் நாம் காணலாம்.

இன்று சிவனும் பெருமாளும் முழுமுதற் கடவுளாக அறியப்படுகின்றனர். ஆனால் அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட கடவுளைப் பற்றியக் குறிப்புகள் இல்லை.

முருகன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் போன்றோர் முழுமுதற் கடவுளரின் பிள்ளைகளாக அறியப்படுகின்றனர் இன்று. ஆனால் அக்காலத்தில் அப்பேர்ப்பட்ட உறவுமுறைகள் இருந்ததாக சான்றுகள் இல்லை.

நில்லுங்கள் நில்லுங்கள்…அந்தக் காலக் கடவுளருக்கும் இன்றைய கடவுளருக்கும் தொடர்புகள் காணப்படவில்லை என்று கூறுகின்றீர்களே…ஆனால் மாயோன் தான் ‘திருமால்’ என்றும் சேயோன் தான் முருகன் என்றும் ஆய்வுகள் கூறுகின்றனவே அதற்கு என்ன கூறுகின்றீர் என்று சில நண்பர்கள் கேட்கலாம். இக்கேள்விக்கு பதிலினை காண நாம் அந்தக் கடவுளரைக் காண வேண்டி இருக்கின்றது.

மாயோன் என்ற பெயர் – கருமை நிறத்தினை உடையவன் என்ற பொருளினைத் தருவதாகவே அமைந்து உள்ளது. (மால் – கருமை). முல்லை நிலத்தின் கருப்பொருளான கார்காலத்தினில் தோன்றும் கரிய மேகங்களைப் போன்றவன் என்ற அர்த்தத்தினாலேயே அவன் அப்பெயரினைப் பெற்று இருக்கின்றான். இதைத் தவிர்த்து இன்று நாம் காணும் திருமாலுக்கும் முல்லை நிலக்கடவுளான மாயோனுக்கும் தொடர்புகள் இருப்பதாக சான்றுகள் இதுவரை இல்லை.

அதேப் போல் சேயோன் என்ற பெயர் - சிவந்தவன் என்ற பெயரினையே தருகின்றது. இவனை பொதுவாக மக்கள் முருகன் என்றே கருதுகின்றனர். ஆனால் சேயோன் என்றப் பெயர் சிவனையும் குறிக்கும் ஒன்றாக விளங்குகின்றது. (இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் சங்க இலக்கியங்களிலும் சரி சில சிற்பங்களிலும் சரி முருகனும் சிவனும் ஒரே மாதிரியாக சித்தரிக்கப்பட்டு இருக்கின்றனர். இது ஆராயத் தக்க ஒரு விடயமாகும்). ஆனால் மாயோனைப் போலவே சேயோனுக்கும் இன்றைய முருகன்/சிவன் ஆகியோருக்கும் ஒற்றுமைகள் சிறிதளவே இருக்கின்றன.

எடுத்துக்காட்டுக்கு – இன்றைய சிவனுக்கும் முருகனுக்கும் பலிகள் கிடையாது. ஆனால் சங்க இலக்கியத்தில் ‘கந்து’ வழிப்பாட்டுக்கும் சரி முருகன் வழிப்பாட்டுக்கும் சரி பலிகள் இருந்து இருக்கின்றன. அவர்களை மக்கள் பலியிட்டே வணங்கியும் இருக்கின்றனர்.

இந்தப் பலி வழிப்பாட்டு முறை எவ்வாறு பலி இல்லாத வழிப்பாட்டு முறையாக மாறியது என்றும் எவ்வாறு இந்தத் திணைக் கடவுளர் வழிப்பாட்டு முறை போய் இன்றைய வழிப்பாட்டு முறை நம்மிடையே வந்தது என்பதும் எண்ணிப்பார்க்க/ஆராயத் தக்கது. நிற்க.

எனவே இன்று நாம் காணும் திருமாலும், முருகனும் தொல்காப்பியக் காலத்தில் மக்களின் மத்தியில் வணங்கப்பட்ட கடவுளர் அல்ல என்பதும், அக்காலத்தில் இருந்த முறைகளில் இருந்து இன்று நாம் கொண்டு இருக்கும் வழிப்பாட்டு முறைகள் மாற்றங்கள் பல கொண்டு இருக்கின்றன என்பதும் நாம் மேலே கண்ட விடயங்கள் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

சரிங்க… மாயோன், சேயோன் போன்றவர்களைப் பற்றி கூறி விட்டீர்கள். மருத நிலக் கடவுளைப் பற்றியும் நெய்தல் நிலக் கடவுளைப் பற்றியும் கூற வில்லையே என்கின்றீர்களா…

மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனப்படுகின்றான். வேந்தன் என்றால் அரசன்/தலைவன் என்றுப் பொருள். எனவே மக்கள் அந்நிலத்தில் தங்களது தலைவனையே வழிப்பட்டனர் என்றும் நாம் கருத முடிகின்றது(இதனைக் குறித்து ஆராய்ச்சிகள் தேவை). தமிழில் இந்திரன் என்றால் தலைவன் என்றே பொருள் தரும்.

தேவேந்திரன் – தேவர்களின் தலைவன்.
கஜேந்திரன் – யானைகளின் தலைவன்.
நரேந்திரன் – மனிதர்களின் தலைவன்.

எனவே தலைவன் என்றப் பொருளிலே வேந்தன் என்றப் பெயர் மருத நிலக் கடவுளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

அதைப்போலவே கடல் சூழ்ந்த நெய்தல் நிலத்து கடவுளாக வருணன் அறியப்படுகின்றான்.

இப்பொழுது வேறு சில கேள்விகள் தோன்றலாம் ‘இந்திரன் மற்றும் வருணன் ஆகியோர் வேதங்களில் வருகின்றனரே…அவர்கள் ஆரியக் கடவுளர் என்றும் கூறுகின்றனரே. ஆனால் தமிழ் திணைக் கடவுளரிலும் அப்பெயர்கள் வருகின்றதே. இவ்விரண்டு கடவுளரும் ஒருவரே ஆவரா அல்லது இருவரும் வேறானவரா” என்றக் கேள்வி நிச்சயம் தோன்றும். இதற்கு விடையினை நாம் வரும் பதிவுகளில் காண முயற்சிக்கலாம்.

இப்போதைக்கு இதுவே பண்டைய காலங்களில் தமிழ் மக்கள் தம்மிடையே கொண்டு இருந்த வழிப்பாட்டு முறைகள் ஆகும்...

தொடரும்... பகுதி-13 பார்க்கவும்.
யாழறிவன்.. Yalarivan Jackson Jackie...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக