திங்கள், 20 அக்டோபர், 2014

தமிழனும் உலக வரலாறும்

தமிழனும் உலக வரலாறும்

பகுதி-3

ஆதாம் என்ற தமிழன் -

விவிலியம்… கிருத்துவர்களின் வேத நூல்!!!இந்நூலில் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றதா? பார்ப்போம்…!!! விடையினைச் சுமந்துக் கொண்டு பழைய ஏற்பாடு இதோ நிற்கின்றது!!!
முதலில் பழைய எற்பாட்டினைப் பற்றி சிறிது அறிந்துக் கொள்வோம்.

இது கிருத்துவின் வருகைக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகளை பற்றி எடுத்து உரைப்பது. உலகத்தின் வரலாற்றில் ஆரம்பித்து யூத இனத்தவரின் வரலாறாக செல்லும் ஒரு நூல்.சரி இப்பொழுது நம் விசயத்துக்கு வருவோம்.விவிலியத்தின் படி கடவுள் ஆறு ஊழிக் காலங்களில் உலகினைப் படைக்கிறார். ஆறாவது ஊழிக் காலத்தில் அவரின் சாயலிலேயே மனிதனைப் படைக்கிறார். அவனைக் கடவுள் மண்ணில் இருந்துப் படைக்கிறார்.சரி… அந்த மனிதனை எங்கே படைக்கிறார்? என்றக் கேள்விக்கு விவிலியம் அளிக்கும் பதில்..

“ தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே…” - ஆதியாகமம் (2 -8)

மனிதனை ஏதேன் தோட்டத்தில் உருவாக்கினார் சரி. அந்தத் தோட்டம் ஏன் குறிப்பாக கிழக்கே இருந்தது என்றுக் குறிக்கப்பட்டு உள்ளது? சற்று ஆராயலாமா…!!!
விவிலியம் என்பது பல்வேறுக் காலங்களில் பல்வேறு நபர்களால் தொகுக்கப்பட்ட ஒரு நூலே ஆகும்.
விவிலியம் தொகுக்கப்பட்ட இடம் - மத்திய ஆசியா. எனவே ‘கிழக்கு‘ என்று குறிப்பிட்டு உள்ள இடம் மத்திய ஆசியாவிற்கு கிழக்கிலே தான் இருந்து இருக்க வேண்டும்.

சரி… மத்திய ஆசியாவிற்கு கிழக்கில் உள்ள நாடுகள் என்ன என்ன?இந்தியா, சீனம் மற்றும் சப்பான்!!!

இந்த மூன்று நாடுகளில் மிகவும் பழமையான நாகரீகம் கொண்ட நாடு என்ன என்பதனை நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் மனிதன் தோன்றிய இடம் தானே உலகிலேயே பழைமையான நாகரீகம் உடைய இடமாக இருந்து இருக்க வேண்டும்.
அப்படி பழமையான நாகரீகம் எதுவென்று நாம் பார்க்கையில் நமக்கு விடையாய் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுது தருவது இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரீகமே ஆகும்.

அப்படி என்றால் விவிலியத்தினில் கூறப்படும் ‘கிழக்கில் உள்ள இடம்‘ சிந்து சமவெளி என்று நாம் கருத இடம் இருக்கின்றது (அதாவது அதை விட பழைய நாகரீகம் கிழக்கில் கண்டுப் பிடிக்கப் படும் வரை).

சிந்து சமவெளி நாகரீகம் தான் விவிலியம் சொல்லும் இடம் என்றால் அதில் வாழ்ந்த மனிதன் தான் முதல் மனிதனாக இருக்க வேண்டும். அப்படி என்றால் சிந்து சமவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? சிந்து சமவெளி நாகரீகம் யாருடையது?

இந்தக் கேள்விக்கான பதிலுக்கு இருவர் போட்டி இடுகின்றனர். சிந்து சமவெளி நாகரீகம் தங்களுடையது என்று அவர்கள் உரிமைக் கொண்டாடுகின்றனர்.

ஒருவர் … ஆரியர்

இன்னொருவர் … தமிழர்.

இந்த நாகரீகத்திற்கு ஆரியர் உரிமைக் கொண்டாடினாலுமே, சான்றுகளும், எழுத்துக்களும், பல்வேறு வெளிநாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சியும் இந்த நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்றே முடிவினைத் தருகின்றது.

இதன் அடிப்படையில் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்றும் அதனால் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் நாம் கருத முடிகின்றது.
நிறுத்துங்கள்…! நிறுத்துங்கள்…! சிந்துசமவெளி என்கின்றீர்கள்… தமிழர்கள் என்கின்றீர்கள்…!!! சான்றுகள் போதவில்லையே… இன்னும் கொஞ்சம் விளக்கிக் கூறுங்கள் என்கின்றீர்களா…!!!

சரி… விவிலியத்தின்படி முதல் மனிதன் யார்?

ஆதாம் தானே.

அவனுக்கு அந்தப் பெயரினை வைத்தது யார்?

விவிலியத்தில் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதாம் பெயர் இடுகின்றான் (ஏவாளுக்கும் உட்பட) ஆனால் அவனுக்கு பெயர் யார் இட்டது என்பதனைப் பற்றிய செய்தி இல்லை.

“அப்படியே ஆதாம் சகல வித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும் சகலவித காட்டு மிருகங்களுக்கும் பெயரிட்டான்…” ஆதியாகமம் (2 -20)

ஆதாம் என்றப் பெயரே ஆதியாகமம் (2-19) தான் முதல் முறையாக பயன்படுத்தப் படுகின்றது.

அதற்கு முன்னால் முதல் மனிதன் ‘மனிதன்‘ என்ற சொல்லாலேயே குறிக்கப்பட்டு வந்துள்ளான். அவனுக்கு ஆதாம் என்றப் பெயர் எப்படி வந்தது என்றச் செய்தி விவிலியத்தில் இல்லை. ஒரு வேளை அது தொடர்பான செய்தி  இருந்து, பின்னர் அது ஒரு சிலரால் விலக்கப்பட்டு இருக்கலாம் (விவிலியத்தின் செய்திகளை பலர் தங்களுக்கு சாதகமாக மாற்றி உள்ளனர் என்பது வரலாறு) என்றக் கருத்துக்களும் உலாவிக் கொண்டு இருக்கின்றன. எது எப்படியோ அந்தப் பெயர் எப்படி வந்தது என்று நமக்கு கூற நம் வரலாற்று அறிஞர் இருக்கின்றார். அட அவர்தாங்க… தமிழ்!!!

ஆதி!!!

இந்த வார்த்தையைக் கண்டவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகின்றது?

ஆதி என்றால் தொடக்கம்.

அப்படி என்றால் தொடக்கத்தில் இருந்த மனிதனை நீங்கள் அழைக்க வேண்டும் என்றால் எவ்வாறு அழைப்பீர்கள்?

ஆதி மனிதன் என்று அழைக்க வாய்ப்பு இருக்கின்றதா..!!!

‘ஆதி மனிதன்‘ … ‘ஆதன்‘ என்றாகி பின்னர் மொழிப்பெயர்ப்பில் ‘ஆதாம்‘ என்றாகி இருப்பதற்கு வாய்ப்பு உண்டல்லவா?

ஆதாம் என்ற சொல்லுக்கும் ஆதிமனிதன் என்ற சொல்லுக்கும் உள்ள பொருத்தங்களை நீங்களே பார்த்து முடிவு செய்துக் கொள்ளுங்கள்…

இப்பொழுது நாம் ஏவாளைப் பற்றி பார்ப்போம்!!!

ஏவாளுக்குப் பெயர் இட்டவன் ஆதாம்.

“ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப் பெயரிட்டான். ஏனெனில் அவன் உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்” - ஆதியாகமம் (3 - 20 )

மேல் உள்ள வாக்கியத்தின் படி, ஏவாள் என்றால் தாய் என்றும் அல்லது பாட்டி என்றும் பொருள் தர வேண்டும்.

ஆனால் ஆங்கிலத்தில் ‘இவே (EVE)’ என்றுச் சொல்லும் சொல் இந்தப் பொருளைத் தருகின்றதா என்றால் இல்லை என்பதே பதில்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம், விவிலியம் என்பது எபிரேயத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட ஒன்றே ஆகும். எனவே இந்தச் சொல்லினை நாம் எபிரேயத்தில் காண்பதே சரியாக அமையும்.

எபிரேயத்தில் ஏவாள் ‘ஆயா‘ என்றே குறிக்கப்படுகின்றாள்.

ஆயா என்றால் பாட்டி என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இவளே பாட்டி என்பதினால் இவளை ஆயா என்றான் ஆதிமனிதன்.

‘ஆயா‘ என்றச் சொல்லே மருவி ‘ஈயா‘ என்றும் ‘இவே‘ என்றும் மாறி நிற்கின்றது.

ஆயா என்றச் சொல்லும் அதன் அர்த்தமும் எம்மொழியினைச் சேர்ந்தவை என்று கூறத் தேவை இல்லை என்றே தான் நினைக்கின்றேன். இரண்டுமே தமிழில் இன்றும் பழக்கத்தில் இருப்பதினை நாம் காண முடியும்.

எனவே, ஆதி மனிதனும் , ஆயாவும் தமிழர்களே என்பதினில் சந்தேகம் இல்லை.

இன்னும் மேலாக,
கடவுள் மனிதனை மண்ணில் இருந்தே படைத்தார்.

“தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி…” - ஆதியாகமம் (2 - 7)

இப்பொழுது அவன் மண்ணில் இருந்து படைக்கப்பட்டதினாலேயே அவனை மனிதன் (மண் - தன்) என்றுக் கருதவும் வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் அவனிடம் மனசு இருப்பதினால் அவனை மனுசன் என்றுக் கூறப்படுகின்றது என்றும் கருதலாம்.

இப்பொழுது ஆங்கிலத்தின் man என்ற வார்த்தையையும் woman என்ற வார்த்தையையும் நாம் எடுத்துக் கொள்வோம்.

மண்ணில் இருந்துப் படைக்கப் பட்டவன் என்பதினால் அவனை மண் (Man) என்றுக் கூறுகின்றார்கள் என்றும்,

மண்ணினால் செய்யப்பட்ட மனிதனின் உள்ளிருந்து உருவாக்கப்பட்டதால் பெண்ணை, உள் - மண் (மண்ணின் உள்ளிருந்து) என்ற அர்த்தம் பொருந்த woman என்றும் கூறுகின்றார்கள் என்று நாம் கருதலாம் தானே.

மண்ணும், மனசும் - எந்த மொழி என்று நமக்கு நன்றாகத் தெரியும். தமிழ் மொழியே அது…!!!

மேலே நாம் கண்டக் கருத்துக்களின் மூலம்… அதாவது,

ஆதாம் - ஆதி மனிதன்
ஏவாள் - ஆயா
Man - மண்
Woman - உள் மண்

விவிலியம் கூறும் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்றும் நாம் அறிந்துக் கொள்ளலாம்.

சரி… மனிதன் பிறந்து விட்டான்… தவறுகளும் செய்யத் தொடங்கி விட்டான். இறைவன் அதனைக் கண்டு மனம் உடைந்து உலகினை அழிக்க முடிவு எடுத்துவிட்டான்… உலகினை அழிக்க வெள்ளம் தயாராக இருக்கின்றது… அதோ வெள்ளம் வரும் அறிகுறி தெரிகின்றது….!!!

வெள்ளத்திலும் முதல் மனிதர்கள் தமிழர்கள் என்று பறைசாட்ட நோவா தன்னுடைய படகுடன் அதோ நிற்கின்றார்…

நோவாவின் கதை -

நோவாவினை சந்திக்கும்  முன் உங்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கின்றது…!!!

உலகம் இதற்கு முன்னர் அழிந்து இருக்கின்றதா? ஆம் என்றால் எவ்வாறு?

இந்தக் கேள்விகளுக்கு,
கிருத்துவர்கள் - ஆம் உலகம் அழிந்து இருக்கின்றது. கடவுள் வெள்ளத்தின் மூலம் இவ் உலகத்தினை அழித்தார் என்றும்

இந்துக்கள் - ஆம், கிருசுனரின் மச்ச அவதாரத்தின் போது, உலகம் வெள்ளத்தால் அழிந்தது என்றும்

தமிழ் அறிஞர்கள் - ஆம், குமரிக்கண்டம் கடற்கோள்களால் அழிந்தது என்றும் கூறுவர்.

மேலாக சுமேரிய மக்களிடத்தும், மெசொபொடாமிய மக்களிடத்தும் உலகம் வெள்ளத்தால் அழிந்தக் கதைகள் உள்ளன. அப்படி என்றால் இந்த உலகம் எத்தனை முறை அழிந்து உள்ளது?.

அதுவும் கடற்கோள்களாலேயே அத்தனை முறையும் அழிந்து இருக்கின்றதா?நம்புவதற்கு இந்தக் கருத்து ஏதாக இல்லையே!!!

மேலும் விவிலியத்தில்,

”இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.” - ஆதியாகமம் (9 - 11 )

என்று இறைவன் வாக்குக் கொடுப்பதாக அமைந்து இருப்பதினால் இன்னொரு உலக அழிவு நீரினால் வந்து இருக்க வாய்ப்பில்லை.

மேலும் இந்துக் கதைகளிலும் உலகம் மச்ச அவதாரத்திற்கு பின்னர் அழிந்ததாக வரலாறு இல்லை.

இந்த கருத்துக்களை எல்லாம் வைத்துப் பார்த்தோம் என்றால் உலகம் ஒரே ஒரு முறை நீரினால் அழிக்கப்பட்டு இருக்கின்றது  என்றும் அந்த வரலாறே காலப்போக்கில் மனிதன் சென்ற இடங்களில் எல்லாம் பல்வேறுக் கதைகளாக மாறி இருக்கின்றது என்றும் புலனாகும்.
சரி… இப்பொழுது நாம் நோவாவிடம் வருவோம்!!!

விவிலியத்தின்படி, நோவா பாவம் செய்து பெருகி இருந்த மனிதர்களுள் உத்தமனாக இருந்தவன். எனவே இறைவன் அவனைத் தேர்ந்து எடுத்து அவனை ஒரு படகினைச் செய்ய சொல்லுகின்றார். அவர் இந்த உலகினை வெள்ளத்தினைக் கொண்டு அழிக்கப் போவதாகவும், அவ்வாறு உலகம் அழியும் போது நோவா அவன் குடும்பத்தினரையும் உலகில் உள்ள மற்ற உயிரினங்களையும் அந்தப் படகினில் ஏற்றி உயிர் பிழைக்குமாறும் சொல்லுகின்றார். அவ்வாறே நோவாவும் செய்து வெள்ளத்தில் பிழைக்கின்றான்.
மீண்டும் உலகில் அவன் வாழ்வினையும் தொடங்குகின்றான். இது தான் நோவாவின் கதை.

கதை இருக்கட்டும் நோவா உலகின் முதல் மனிதன் தமிழன் என்றுப் பறைசாட்டுவதாக சொன்னீர்களே அது என்னவாயிற்று என்று வினவுகிறீர்களா…!!!

இதோ நம் கதைக்கு வருகின்றேன்.

நோவா என்றவன் படகுடனேயே தொடர்புக் கொண்டவனாக விவிலியத்தில் அறியப்படுகின்றான். நோவா என்றால் அனைவருக்கும் படகு தான் நினைவிற்கு வரும். இங்கு தான் நாம் ஒரு தமிழ் வார்த்தையைப் பற்றிப் பார்க்க வேண்டி வருகின்றது.

‘நாவாய்’ - தமிழில் படகிற்கு வழங்கும் பலப் பெயர்களில் இதுவும் ஒன்று. இங்கு நமக்கு ஆச்சர்யம் அழைப்பது என்னவென்றால் ‘நாவாய்’ என்றச் சொல்லுக்கும் ‘நோவா’ என்ற சொல்லுக்கும் உள்ள பொருத்தம் தான். வரலாற்று அறிஞர்களும் மொழி அறிஞர்களும் ’நாவாய்’ என்றச் சொல்லே மருவி ‘நோவா’ என்று மாறி இருக்கின்றது என்றுக் கூறுகின்றனர்.
இறைவன் ஓர் மனிதனை

‘நாவாயினைக்’ கட்டச் சொல்லுகின்றார். அந்த ’நாவாயினைக் கட்டிய மனிதனே’ காலப்போக்கில் மருவி ‘நோவாவாக’ மாறி விட்டான் என்பதே அறிஞர்களின் கருத்து.
மேலும் விவிலியத்தின்படி இறைவன் நோவாவிற்கு படகினைக் கட்ட சில அறிவுரைகள் தருகின்றார்.

“நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு” - ஆதியாகமம் ( 6 - 14)

இங்கே கொப்பேர் மரம் என்று ஒரு மரத்தினைக் குறிப்பிடுகின்றார். நீங்கள் யாராவது வேறு எங்கேயாவது ‘கொப்பேர் மரம்’ என்ற ஒன்றினை கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா?நான் கேள்விப்பட்டது இல்லை. எனவே அது கொப்பேர் மரம் தானா என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருக்கின்றது. அது ஏன் ‘காப்பெரு’ மரமாக இருக்கக் கூடாது.

‘காப்பெரு மரம்’ மொழியாக்கத்தின் போது ‘கோப்பெரு மரமாக’ மாறி இருக்கலாம் அல்லவா!!!

காப்பெரு மரமா?… அப்படி என்றால் என்ன என்றுக் கேட்கின்றீர்களா…

’காப்பெரு’ என்றால் காட்டில் உள்ள பெரிய மரம் என்று அர்த்தம். இறைவன் நோவாவை ஒரு மிகப் பெரிய கப்பலினைக் கட்டச் சொல்லுகின்றார் என்றுக் கண்டோம்.

அந்தக் கப்பலின் அளவையும் விவிலியத்தின் படி அவரே கூறி இருக்கின்றார்.

”நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.” - ஆதியாகமம் (6 - 15)

இந்த நீளத்தில் படகினைச் செய்ய ஒரு மரம் வேண்டும் என்றால் அது நிச்சயம் பெரிய மரமாகவே இருக்க வேண்டும். அத்தகைய பெரிய மரங்கள் காதினில் காணப்படுவதே இயற்கை. எனவே இறைவன் நோவாவினை ‘காட்டினில் உள்ள பெரிய மரத்தினைக்’ கொண்டு நாவாயினைக் கட்டு என்று சொல்லி இருக்க கூடும். அதுவே காலத்திலும் மொழியாக்கத்திலும் ‘கோப்பெரு மரம்’ என்று மருவி இருக்கக் கூடும்.நிற்க.

இது வரை நாம் நோவாவின் வரலாறு எவ்வாறு தமிழுடன் கலந்து வருகின்றது என்பதனைப் பார்த்தோம். இப்பொழுது நோவா செய்த ஒரு முக்கியமான செயலைப் பற்றிப் பார்ப்போம்.

வெள்ளம் வற்றி விட்டது. நோவாவின் கப்பலும் கரை தட்டி விட்டது. அவன் கப்பலில் ஏற்றிய உயிரினங்களோடும் அவனின் குடும்பத்தினரோடும் நோவா தரை இறங்கி விட்டான். அப்பொழுது அவனை அழியாமல் காப்பாற்றிய கடவுளுக்காக அவன் ஒருக் காரியம் செய்கின்றான். அவன் கடவுளிடம் தன நன்றியைத் தெரிவிப்பதற்காக சில மிருகங்களைப் பலி இடுகின்றான்.

“அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.” - ஆதியாகமம் (8 - 20)

நோவாவின் இந்தச் செயலின் மூலமே உலகில் பலி இட்டு இறைவனை வேண்டும் வழிப்பாட்டு முறை தோன்றியது. அது இன்றைக்கும் நம் ஊரினில் தொடர்வதனை நாம் காணலாம். இந்தப் பலி வழிப்பாட்டு முறை தான் பின்னாளில் சமணமும் பௌத்தமும் தோன்றுவதற்கு காரணம் என்றும் நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

சரி…பலி முடிந்தாயிற்று. நோவாவின் மக்களும் உலகில் பெருகுகின்றனர். பெருகி அவர்கள் உலகில் பரவ ஆரம்பிக்கின்றனர். அதைப் பற்றிய விவிலியத்தின் செய்திகள் ஆதியாகமம் 11 இல் தரப் பட்டு இருக்கின்றன…

“ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்” - 2

இங்கேயும் மக்கள் கிழக்கில் இருந்து வந்து இருக்கின்றார்கள் என்று கூறப்படும் செய்தியை கவனியுங்கள். நாம் முன்னரே ‘கிழக்கு’ என்பது சிந்து சமவெளி நாகரீகத்தினை குறிக்கலாம் என்று கண்டு இருந்தோம். எனவே விவிலியத்தின் இந்தச் செய்தியின் படி மக்கள் கிழக்கில் இருந்து சிநேயார் என்னும் தேசத்திற்கு செல்லுகின்றனர்.

எனவே ‘கிழக்கு’ என்பது சிந்து சமவெளி நாகரீகமாக இருந்தால் இந்தச் செய்தியின் படி மக்கள் அதில் இருந்து அதற்கு மேற்கில் உள்ள சிநேயார் என்னும் தேசத்திற்கு சென்று இருக்க வேண்டும். ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு மேற்கில் ‘சிநேயார்’ என்னும் தேசம் இல்லை. ‘சுமேரியா’ என்னும் தேசமே இருந்து இருக்கின்றது. இங்கு தான் மொழி அறிஞர்களின் உதவி நமக்குத் தேவைப்படுகின்றது.

அவர்களின் கூற்றுப்படி ‘சுமேரியர்’ என்ற சொல்லே ‘சிநேயார்’ என்று திரிந்து உள்ளது. எனவே மக்கள் சிந்து சமவெளியில் இருந்து மேற்கில் உள்ள சுமேரியாவிற்கு சென்றனர் என்பது வரலாற்று உண்மையாகின்றது.
அப்படி சுமேரியாவிற்கு பயணித்த மக்கள் யார் என்பதற்கும் விவிலியத்தில் அதே ஆதியாகமத்தில் விளக்கம் இருக்கின்றது…

“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.” - 1

“அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.” - 3

மேலே உள்ள வாக்கியங்களில் “ நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம்” என்ற வார்த்தைகளை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.
உலகிலேயே முதன்முதலில் செங்கல்லை சுட்டு கட்டிடங்கள் கட்டும் பழக்கம் தமிழனுக்கே உண்டு என்பது ஒரு வரலாற்று உண்மை. செங்கல்லை சுடும் பழக்கம் தமிழனால் கண்டுப் பிடிக்கப்பட்ட ஒன்று. சிந்து சமவெளி நாகரீகத்தில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் சுட்ட செங்கலினால் கட்டப்பட்டு உள்ளன என்பதும் வரலாற்று ஆய்வு உண்மை. எனவே விவிலியத்தில் குறிக்கப்பட்டு உள்ள மக்கள் தமிழர்களே என்று நாம் கருத முடிகின்றது.

மேலும் அதே விவிலியத்தில் உலகத்தில் அப்பொழுது ஒரே மொழி தான் இருந்தது என்று கூறப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் இருந்த மனிதன் தமிழன் தான் என்றால் இருந்த ஒரே மொழியும் தமிழாகத்தான் இருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.

எனவே விவிலியத்தின் படி உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்றும் நாம் அறிய முடிகின்றது!!!.

ஒரு நிமிடம்… சிந்து சமவெளி நாகரீகம் என்கின்றீர்… அது தமிழர் நாகரீகம் என்கின்றீர். ஆனால் ஆரியரும் அதற்கு உரிமைக் கொண்டாடுகின்றார்கள். எனவே அது தமிழர் நாகரீகம் என்பதற்கு நீங்கள் எந்த விதமான சான்றுகளையோ அல்லது விளக்கங்களையோ அளிக்கவில்லை.

இரண்டாவது நீங்கள் மக்கள் தோன்றியது ‘குமரிக் கண்டத்தில்’ என்கின்றீர் ஆனால் அதைப் பற்றியே வாய் திறக்கவில்லையே. சிந்து சமவெளியினைப் பற்றியே பேசி இருக்கின்றீர். அப்படி என்றால் மக்கள் தோன்றியது குமரிக் கண்டதிலேயா அல்லது சிந்து சமவெளியிலேயா?… தெளிவாக சொல்லுங்கள் என்றுக் கேட்கின்றீர்களா…!!!!

நியாயமான கேள்விகள். சரி அப்படி என்றால் நாம் சற்று குமரிகண்டத்தையும் சிந்து சமவெளியினையும் கண்டு விட்டு வந்து விடலாம்…!!!

சிந்து சமவெளி அதோ பரந்து விரிந்து நிற்கின்றது…!!!

சில கூடுதல் தகவல்கள்:
‘Navy’ மற்றும் ’NAVAL’ என்ற ஆங்கிலச் சொற்களின் வேர்ச் சொல் ‘நாவாய்’ என்று நீங்கள் அறிவீர்களா?.

நாவாய் என்பதே ‘நாவி’ என்று மாறி பின்னர் ’நேவி (NAVY)’ என்று மாறி உள்ளது.

மேலும் விவிலியம் கூறும் ‘நோவாவின்’ கதையுடன் திருமாலின் ’மச்ச அவதாரக்’ கதையும் ஒத்துப்போவதை கவனத்தீரா?…இதேப் போல் இன்னும் பல விடயங்கள் விவிலியத்திற்கும் இந்துக் கதைகளுக்கும் இடையில் ஒன்றுப் போல இருக்கின்றன.

இது இப்பொழுது நமக்கு முக்கியம் அல்ல. பின்னர் பார்க்கலாம்.

சிந்து சமவெளி நாகரீகம் -

“ஒரு கொடிய யுத்தம் இங்கே நடந்து இருக்கின்றது.
இந்தப் பகுதியில் நெடுங்காலமாக நாகரீக வாழ்வினை மேற்கொண்டு வந்த மக்களின் மேல் அன்னியர்கள் படை எடுத்து வந்து உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையில் போர் மூண்டு உள்ளது. இறுதியில் அந்த நாகரீக மக்கள் தோற்கடிக்கப்பட்டு அந்த நாகரீகம் அந்த இடத்தில் ஒரு அழிவிற்கு வந்து இருக்கின்றது.”

இது சிந்து சமவெளி நாகரீகத்தினைப் பற்றி ஆராய்ச்சிகளைச் செய்த சில அறிஞர்களின் கூற்று. அவர்களின் இந்தக் கூற்றினைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்கும் முன் சிந்து சமவெளி நாகரீகம் என்றால் என்ன என்பதினை நாம் அறிந்துக் கொள்வோம்.

சிறு வயதில் வரலாற்றுப் பாடத்தில் மொகன்சதாரோ மற்றும் கரப்பா நகரங்கள் பற்றி படித்து இருப்பீர்கள் தானே. அந்த நகரங்களையும் மேலும் பல நகரங்களையும் உள்ளடக்கி சிந்து நதியினைச் சுற்றி அமைந்து இருந்த நாகரீகமே சிந்து சமவெளி நாகரீகம் ஆகும்.

வளமையான பிரதேசம்…பண்பாடுள்ள மக்கள்… வளர்ச்சி அடைந்த கலைகள்… தெளிவான வாழ்கை முறை… வழிப்பாட்டுப் பழக்கங்கள் என அனைத்தும் பெற்று இந்த நாகரீகம் தலைச் சிறந்து விளங்கிற்று என்பதனை சரித்திர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய நாகரீகத்தின் மேல் அன்னியர்கள் படை எடுத்து வந்தமையினால் அந்த நாகரீகம் அழிவுற்றது என்றும் கூறும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஒருக் கருத்தினையும் கூறுகின்றனர்.

சிந்து சமவெளியில் கண்டெடுத்த எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களை ஒத்து இருக்கின்றன என்பதே அந்தக் கருத்து ஆகும்.

மேலும் அங்கு காணப்படும் கட்டிடங்கள் சுட்ட செங்கலினால் கட்டப்பட்டு இருக்கும் பாங்கையும் கணக்கில் கொண்டு அவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தினை திராவிட நாகரீகத்தினுடன் ஒப்பிடுகின்றார்கள்.

“என்ன திராவிட எழுத்துக்களா…அப்படி என்றால் அங்கே இருந்தது திராவிடர்களா? அவர்கள் மேல் படை எடுத்து வந்தவர்கள் யார்?” போன்ற கேள்விகள் உங்கள் மனதினில் தோன்றுகின்றனவா?அந்த கேள்விகளுக்கு சான்றுகளுடன் விடைக் கூறும் முன் சிந்து சமவெளியில் நடந்தது என்ன என்பதினை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது மிக்க அவசியம் ஆகின்றது.
சிந்து சமவெளி நாகரீகம்… நடந்தது என்ன?

சிந்து சமவெளி நாகரீகத்தில் தமிழர்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றார்கள்(திராவிடம் என்பது தமிழையே குறிக்கும் எனவே திராவிடர்கள் என்று அவர்கள் குறிப்பிடுவது அக்காலத்தில் தமிழர்களையே). அவர்களின் மேல் நாடோடிகளான ஆரியர்கள் படை எடுக்கின்றார்கள். ஆரியர்கள் என்பவர்கள் மத்திய ஆசியாவில் இருந்தும் ஐரோப்பியாவில் இருந்தும் வந்த மக்களை குறிக்கும் சொல்லே ஆகும் (இட்லேர் (Hitler) தன்னை ஆரியன் என்று கூறிக் கொண்ட செய்தியினை நினைவிற் கொள்ளுங்கள்). அப்பொழுது நடந்த யுத்தத்தில் சிந்து சமவெளி நாகரிக மக்கள் தோற்று பின்வாங்குகின்றார்கள். ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைகின்றார்கள்.

நில்லுங்கள்… யுத்தம் நடந்தது என்று சொல்லுகின்றீர்களே. அதற்கு சான்றுகள் இருக்கின்றதா? என்றால் அந்த யுத்தத்தினைப் பற்றிய செய்திகள் ஆரியர்களின் ரிக் வேதத்திலேயே இருக்கின்றது என்பதே பதிலாகும்.

ரிக் வேதத்தில் யுத்தத்தினைப் பற்றிய செய்தியா… சற்று விளக்கமாக காண்போம்.

ரிக் வேதம் என்பது ஆரியர்களால் பாடப்பட்ட பல்வேறு பாடல்களின் தொகுப்பே ஆகும். போர்க்களத்தில் எதிரியை வெல்ல அவர்கள் இந்திரனிடம் வேண்டிய பாடல்கள் தான் வேதங்களாக தொகுக்கப்பட்டு உள்ளது. வேதத்தினை படித்தவர் எவரும் இதனை எளிதில் உணர்ந்துக் கொள்வர். மேலும் இந்த வேதங்களில் சிவன் என்றப் பெயரே எங்கேயும் வரவில்லை.

ஒரே ஒரு இடத்தில் மட்டுமே ருத்திரன் என்றப் பெயர் வந்து இருக்கின்றது. அந்த ருத்திரன் என்றச் சொல்லும் சிவனை குறிக்கின்றதா என்பது சந்தேகமே.

ஆரியர்கள் அசுரர்களை எதிர்த்து போர் செய்ததாகவும், அந்த மூர்க்கத்தனமான அசுரர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றி வெற்றி பெற செய்யுமாறு இந்திரனை அவர்கள் வேண்டுமாறு அந்தப் பாடல்கள் அமைந்து இருக்கின்றன.

இப்பொழுது நாம் அந்த அசுரர்கள் என்ற வார்த்தையினை சிறிது நன்றாக பார்க்க வேண்டும்.

ஆரியர்கள் நாடோடிகள் என்று நாம் கண்டோம். அவர்கள் இன்புற்று இருக்க ‘சுரா’ பானம் என்ற மதுவகை ஒன்றினை அருந்துவார்கள் (இந்தச் செய்தியும் அந்த வேதங்களில் இருக்கின்றது). தமிழர்கள் அந்த சுரா பானத்தினைக் அருந்த மாட்டார்கள். எனவே சுரா பானத்தினை அருந்தாதவர்கள் அ’சுரர்கள்’ ஆகி விட்டனர்.
சுரர்கள் - சுரா பானத்தினைக் குடிப்பவர்கள்.
அசுரர்கள் - சுரா பானத்தினை அருந்தாதவர்கள்.
இவ்வாறு ஆரியர்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் மீது போர் தொடுத்து அதில் வெற்றியும் கண்டனர். கண்டு இந்தியாவினுள் நுழைகின்றனர்.

சரி… ஆரியர்கள் சிந்து சமவெளியில் வென்று விட்டார்கள். அங்கிருந்த தமிழர்களின் நிலை என்னாயிற்று… அவர்கள் தமிழர்கள் என்று நீங்கள் எவ்வாறு கூறுகின்றீர்… என்றுக் கேட்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன் சில கேள்விகள்…

௧) சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படும் பொருட்கள் பல தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் பகுதியிலும் காணப்படுவதினை நீங்கள் அறிந்து இருக்கின்றீர்களா?

௨) கடலில் மூழ்கிய பூம்புகார் நகர நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தினைக் காட்டிலும் பழமையானது என்று உங்களுக்குத் தெரியுமா?

௩) ‘ஊர்’ என்ற வேர்ச் சொல் தமிழில் இருக்கும் பொழுது ‘செயபூர் (jaipur)’ என்றும் ‘கான்பூர்’ என்றும் ‘நாக்பூர்’ என்றும் வட நாட்டில் உள்ள ஊர்களுக்கு பெயர் இருப்பது ஏன் என்று எண்ணி இருக்கின்றீர்களா?

௫) சிந்து சமவெளி மக்கள் ‘சிவலிங்க வழிப்பாட்டு’ முறையினை பின்பற்றினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் விடையினை அளிக்க கடலுள் மூழ்கி இருந்த ஒருக் கண்டம் வெளிவர வேண்டும்.!!!

அடுத்த பதிவில் அந்த கண்டம் வெளிவரும்…!!!

பி.கு:
சிந்து சமவெளி நாகரீகம் இயற்கை மாற்றங்களால் அழிந்தது என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தியாவின் மீது படை எடுத்து வந்த ஆரியர்கள் சிந்து சமவெளிக் காலத்தில் வர வில்லை என்றும் அவர்கள் கி.மு 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் மீது படை எடுத்துக் கொண்டு வந்தவரே ஆவர் என்பதும் புதிய ஆராய்ச்சிகள் கூறும் முடிவுகள் ஆகும். இதனைப் பற்றி மேலும் படிக்க ஆரியர்கள் யார் -1 , ஆரியர்கள் யார் -2. அவ்வாராய்ச்சிகளின் படி சிந்து சமவெளி நாகரீகம் வேற்று இனத்தவரின் எவ்வித கலப்பும் இல்லாது திகழ்ந்த முழுமையான தமிழ் நாகரீகம் என்றே நாம் கூற முடியும்...

தொடரும்... பகுதி-4 பார்க்கவும்...
யாழறிவன்... Yalarivan Jackson Jackie..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக